Tuesday, March 22, 2011

இது என்ன வியாதி?

தினமணிக்கு நன்றி

First Published : 22 Mar 2011 03:16:39 AM IST

கடந்த வாரம் தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையத்தின் கூட்டத்தில் 62 மருந்துகளின் விலையை 15 விழுக்காடு உயர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான மருந்துகள் சர்க்கரை நோயாளிகளும் காசநோயாளிகளும் உட்கொள்பவை.
விலையை உயர்த்தினாலும்கூட, இவற்றின் புதிய விலையானது இப்போது இறக்குமதி செய்யப்படும் அதே மூலக்கூறுகள் கொண்ட மருந்துகளின் விலையைவிட 15 விழுக்காடு குறைவாகத்தான் இருக்கிறது என்று இந்த ஆணையம் சமாதானமும் கூறியிருக்கிறது.
உலகிலேயே மிக அதிகமான சர்க்கரை நோயாளிகள் இருக்கும் நாடு இந்தியா என்கிற பெருமை விரைவில் வந்துவிடும் என்கின்றன புள்ளிவிவரங்கள். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகம் முழுவதிலும் இப்போது 160 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இவர்களில் 40 மில்லியன், அதாவது, 4 கோடி பேர், இந்தியாவில் இருக்கின்றனர். இதன் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சர்க்கரை நோயாளி என்கிற அளவுக்கு இந்த நோய் அதிகரித்து வருகிறது. ஆயினும் இந்த நோய்க்கு இந்திய அரசு முக்கியத்துவம் தராமல் இருப்பதுடன், மக்கள் மத்தியில் இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் எந்த முனைப்பும் காட்டாமல் இருக்கிறது. ÷சர்க்கரைநோய் தொற்றுநோய் இல்லை என்பதற்காக இந்திய அரசு இதைக் கண்டும் காணாமல் இருப்பது அறிவுடைமை ஆகாது. ஏனென்றால் சர்க்கரை நோய் எல்லா நோய்க்கும் காரணமாகிறது. விழித்திரை பாதிப்பு ஏற்படுகிறது, சிறுநீரகம் செயலிழக்கிறது. நரம்புகள் பாதிக்கின்றன. இதனால் கால்கள் மரத்து, புண்ணாகி அவற்றை வெட்டி அகற்ற வேண்டிய சூழ்நிலையும் பலருக்கு நேர்ந்துவிடுகிறது.
வட இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ஓராண்டுக்கு எவ்வளவு செலவு நேர்கிறது என்கிற கணக்கெடுப்பை ஐந்து ஆண்டுகளுக்கு சண்டீகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆய்வு செய்ததில், ஒரு சர்க்கரை நோயாளி, குறைந்த வருவாய்ப் பிரிவினராக இருப்பின், அவர் தனது வருவாயில் 25 விழுக்காட்டை செலவிட நேர்கிறது. அதாவது குறைந்தபட்சம் மாதம் ரூ.1000 வரை செலவிட நேர்கிறது என்று கண்டறிந்துள்ளனர். மாதம் ஒருமுறை மருத்துவரைச் சந்தித்தல், சர்க்கரை நோய் அளவை அறியும் சோதனைகளைச் செய்துகொள்ளுதல், நாள்தோறும் சாப்பிடும் மருந்துகள் ஆகியவை மட்டுமே இதில் அடங்கும்.
இது தவிர, மறைமுகச் செலவுகளும் இருக்கின்றன. அதாவது சர்க்கரை நோயாளி தனக்காக மருத்துவக் காப்பீடு செய்ய விரும்பினால் அதற்கான பிரீமியத் தொகை சாதாரண மனிதர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருக்கும். அவர் தனக்காக பிரத்யேகமான செருப்புகளை அணிய வேண்டியிருக்கும். இது போன்ற மறைமுகச் செலவுகளையும் சேர்த்தால், ஒரு சர்க்கரை நோயாளிக்கு ஆகும் செலவு மேலும் அதிகரிக்கும்.
ஒரு பொருளைப் பயன்படுத்துவோர் அதிகரித்தால் அப்பொருளின் விலை குறையும் என்பதுதான் வர்த்தக மந்திரம். கைப்பேசியைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து கைப்பேசியில் பேசுவதற்கான கட்டணமும் ஒரு நிமிடத்துக்கு 10 காசுகளுக்கும் குறைவாகவும் சேவை அளிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், வீட்டுக்கு ஒருவர் சர்க்கரை நோயாளியாக மாறிவரும் சூழ்நிலையில், மருந்துகளின் விலையைக் குறைப்பதுதானே சரியான முடிவாக இருக்கும்?
இந்திய மருத்துவச் சந்தையில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களுடன் உள்ளூர் மருந்து நிறுவனங்கள் போட்டிபோடும் ஆரோக்கியமான சூழ்நிலை கருதி இத்தகைய விலை உயர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது என்கிறது தேசிய மருந்துகள் விலைநிர்ணய ஆணையம். ஆரோக்கியமான வியாபார சூழ்நிலை யாருக்கு? நமது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு அல்ல. அதிக விலைக்கு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு. விலை அதிகரிப்பினால், உள்நாட்டுத் தயாரிப்பாளர்கள் லாபமடையும் என்பதைவிட, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் அதிகம் விற்பனையாகும் என்பதுதானே உண்மை?
சர்க்கரை நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவோர் பணக்காரர்கள் அல்ல, ஏழைகள்தான் என்கிறது மற்றொரு ஆய்வு. காரணம், ஏழைகளால் தங்கள் சர்க்கரை அளவை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ள முடிவதில்லை. உணவுப் பழக்கத்தை மாற்றி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற மருத்துவரை அணுகவும் ஏழைகளிடம் பணவசதி இல்லை. இதனால் நாள்பட்ட நிலையில், சர்க்கரையின் அளவு அதிகரித்து சிறுநீரகம் விழித்திரை பாதிக்கப்பட்டு அல்லது கால்கள் மரத்துப்போய் ஆறாப் புண்களுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர். அந்த நேரத்தில் அவர்களது சிகிச்சைக்கான செலவுகள் மிக அதிகம். ஆனால் அவர்களோ ஏழைகள்.
சர்க்கரை நோய் மருந்துக்கான மூலப்பொருள் விலை, அதை தயாரித்து பெட்டிகளில் அடைத்தலுக்கான செலவு, வெளியிடங்களுக்கு அனுப்பும் லாரி வாடகை எல்லாமும் உயர்ந்துவிட்டது என்று நியாயப்படுத்த முனைகிறது தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம். இந்த அமைப்பு 1977-ம் ஆண்டு அரசால் ஏற்படுத்தப்பட்டது. விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இந்த அமைப்புக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அரசு விரும்பினால், இதன் முடிவுகளில் தலையிட்டு மாற்றங்கள் செய்யவும், முடிவுகளை நிறுத்தி வைக்கவும் இயலும்.
சர்க்கரை நோயை, தொற்றிப்பரவாத நோய் என்பதாகக் கருதி அலட்சியம் செய்யாமல் அதைக் கட்டுப்படுத்த தனி அமைப்பை உருவாக்கி, மருந்துகளைக் குறைந்த விலைக்குக் கிடைக்கச் செய்யும் கடமை, பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதும், இறக்குமதி செய்பவர்களுக்கு ஆரோக்கியமாகப் போட்டியிட்டு பன்னாட்டு நிறுவனங்களை ஆதரிப்பதுமா ஓர் அரசின் நோக்கமாக இருக்க முடியும். உள்ளூரோ, வெளியூரோ மருந்துகளின் விலையைக் குறைத்து மக்களை வாழ வைக்க வேண்டிய அரசு, வியாபாரிகளை வாழ வைக்கத் துடிக்கிறதே, இது என்ன வியாதி என்று புரியவில்லை!

தினமலர் வற்றிய தண்ணீரும்... வற்றாத கண்ணீரும்: 21/03/2011 உலக தண்ணீர் தினம்

விருந்தோ, பகையோ வீடு தேடி வந்தவரை ஒரு குவளை தண்ணீருடன் வரவேற்பது கொங்கு நாகரிகம். உலகின் இரண்டாவது சுவைமிக்க குடிநீரைப் பருகிப்பார் என விருந்தோம்பிய கோவையில், தண்ணீர் போத்தல்கள் (பாட்டில்) கடைகளில் தொங்குவது, சிறுவாணி ஆறே தூக்கில் தொங்குவது போல் தோன்றுகிறது; காவியங்கள் சொன்ன காலத்தை கற்பனை செய்தால், கண்களின் ஓரங்களில் கண்ணீர் திரள்கிறது.முரண்களை அரங்கேற்றிய முடிகளாலும் (அரசு), பொறுப்பற்ற குடிகளாலும் (மக்கள்), வளம் பெருக்கிய ஆறுகள், வற்றி வறண்டு இன்று கழிவுநீர் கால்வாய்களாகி விட்டன. வரப்பெடுத்த வயலையும், நுரை பொங்கிய நதியையும், தேக்கிய நல் வாய்க்கால்களையும் பாரதிதாசனின் பாடல்களில் மட்டுமே காண முடிகிறது.

ஐம்பதுகளை தாண்டியவர்களுக்கு வேண்டுமானால், பள்ளம், படுகையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் குளித்தது நினைவிருக்கலாம். முப்பாட்டன் குடித்த ஆறு, பாட்டன் குளித்த ஆறு, தந்தை பாதம் பதித்த ஆறு, இன்றைய தலைமுறைக்கு என்னவாக இருக்கிறது? முகம் சுளிக்கும் சாக்கடையாக தானே.ஏரிகளும், குளங்களும் பூமித்தாயின் வடுக்களாகி வருடங்கள் பல கடந்து விட்டன; சிற்றோடைகள் இருந்ததற்கு, கர்ண பரம்பரைக் கதைகள் மட்டுமே ஆதாரம். ஒரு லிட்டர் தண்ணீரை 15 ரூபாய்க்கு வாங்கி ஒரு மிடறு விழுங்கியதும், அடுத்தடுத்த துளிகள் காசுகளாகவே கண்களுக்கு தெரிகிறது.பாதரசத்தை திரவத் தங்கம் என்பர். இனி தண்ணீரை தான் சொல்ல வேண்டும். தாயின் மார்பில் சுரக்கும் பாலை, துளைகளிட்டு உறிஞ்சினால் என்னவாகும்? பூமியெங்கும் இயந்திரமத்துகளால் ஆழ்குழாய் கிணறுகள் துளையிடப்படுவதும் அப்படி தானே?

எதிர்காலச் சந்ததியினருக்காக சேமிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை அப்பட்டமாக திருடுகிறோம். பணமும், அதிகார போதையும், விளம்பர புகழும் தண்ணீரின் அத்தியாவசியத்தை உணராமல் மழுங்கடித்துக் கொண்டிருக்கின்றன. பணத்தை தண்ணீராய் செலவழித்த காலம் போய், தண்ணீருக்காக பணத்தை செலவழிக்கிறோம்.நமது தலைமுறை வறண்டிருக்கும் ஆறுகளையாவது பார்த்திருக்கிறது. அடுத்த தலைமுறைக்கு ஆறு என்பதை எப்படி காட்டப் போகிறோம். ஆறு தன் வரலாறு கூறும் கேள்வி, பாடப்புத்தகங்களில் இடம் பெறலாம். வரும் தலைமுறை அக்கேள்விக்கு எப்படி விடையெழுதும்; முன்பொரு காலத்தில் ஆறுகள் இருந்தன என்றா?

ஆற்றுமணல் பணமாக மாறலாம்; ஆனால், காகிதப் பணம் குடிநீராக மாறும் ரசவாத வித்தை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இன்னும் சில காலம் கழித்து ஒரு தலைமுறை கேட்கும், எங்களுக்கான தண்ணீர் எங்கே என்று; உங்கள் வீட்டின் பிஞ்சுக் குழந்தையின் முகம் பாருங்கள். பரிதாபத்திற்குரிய அந்த தலைமுறைக்கு சில நீர் ஆதாரங்களையாவது விட்டுச் செல்லுங்கள். நீங்கள் மனிதராய் வாழ்ந்ததற்கு அதுவாவது ஆதாரமாய் இருக்கட்டும்.

செய்திகள்:தினமலர்

Monday, March 21, 2011

ஜப்பான் உணர்த்தும் பாடம்!

தினமணி தலையங்கம்.
First Published : 18 Mar 2011 05:26:31 AM IST
Last Updated : 18 Mar 2011 05:52:02 AM IST

சரித்திரம் இதுவரை சந்திக்காத சோதனை ஜப்பானில் நிகழ்ந்திருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக இயற்கையின் சீற்றமும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அணு உலைகளின் வெடிப்பும், மனித இனத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தின் அதிர்ச்சியை எதிர்கொள்ளத் தயாராவதற்குள், உயர்ந்தெழுந்த ஆழிப்பேரலை ஜப்பானின் வட கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கோர தாண்டவம் ஆடி அந்த தேசத்தையே நிலைகுலைய வைத்து விட்டிருக்கிறது.
இத்தோடு விட்டேனா பார் என்று பூகம்பமும், ஆழிப்பேரலையும் அடங்குவதற்குள் கடற்கரை ஓரமாக அமைந்த அணு மின் நிலையங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அணு மின் உலைகள் வெடித்துச் சிதறத் தொடங்கின. அதன் தொடர் விளைவாக, ஜப்பானை மட்டுமல்ல, அந்த நாட்டைச் சுற்றியுள்ள கடல்கடந்த தேசங்களைக் கூட அந்த அணு மின் உலைகளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு பாதிக்கக்கூடும் என்கிற செய்தி உலகையே பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அணு ஆயுதப் போரின் கோர விளைவுகளைச் சந்தித்த ஒரே நாடான ஜப்பான் இப்போது அணுசக்தியின் இன்னொரு கோர முகத்தையும் எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கியம். அணுமின் சக்தியை மின் தேவைகளுக்கு ஜப்பான் மிக அதிகமாக நம்பவேண்டிய நிலையில், பல அணு மின் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் ஜப்பான் மின்சாரம் இல்லாமல் தவிப்பது ஒருபுறம். அணு உலைகளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்குப் பயந்து வெளியில் செல்ல முடியாமல் முடங்கிக் கிடப்பது மறுபுறம். இதெல்லாம் போதாதென்று ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து, உற்றார் உறவினரை இழந்து, ஒரு சில மணி நேர ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தால் நடுத் தெருவில் அனாதையாக நிற்க வேண்டிய நிர்பந்தம் மற்றொரு புறம். யாருக்கும் நேர்ந்து விடக்கூடாது இப்படி ஓர் அவலம்.
அணு மின் நிலையங்கள் மனிதனின் விஞ்ஞான வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக வர்ணிக்கப்பட்டு வந்தன. ஆனால் அணுசக்தியின் அபாயங்கள் எத்தகையவை என்பதை ஜப்பானைப் பார்க்கும்போதுதான் உணர முடிகிறது. ஜப்பானியக் கடற்கரை ஓரமாக அமைந்த புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட இரண்டு வெடிப்புகளால் ஏற்கெனவே கதிர்வீச்சுள்ள ஆவி வெளியாகிக் கொண்டிருக்கிறது.
விபத்து ஏற்படும் அறிகுறி தெரிந்தால் உடனடியாக அணு உலைகள் தானாகவே நிறுத்தப்படும் வசதிகள் இந்த அணு மின் நிலையங்களில் இருக்கத்தான் செய்தன. ஆனால், அணு மின் நிலையம் நிறுத்தப்பட்டால், புதிதாக அணுப் பிளவு நடைபெறாதே தவிர, ஏற்கெனவே நடைபெற்று வரும் அணுப் பிளவையும் அதன் மூலம் வெளியேறும் கணக்கிலடங்காத எரிசக்தியையும், அணு உலையை நிறுத்தியதால் முற்றுப்புள்ளி வைத்து நிறுத்த முடியாது. அதுதான் பிரச்னை.
அப்படியே அணு உலையின் இயக்கம் நிறுத்தப்பட்டாலும் அதில் காணப்படும் கணக்கிலடங்காத வெப்பத்தை எப்படிக் கட்டுப்படுத்தித் தணிப்பது? இந்த வெப்பத்தை அவ்வப்போது தணிக்கவும், அணு உலைகள் அளவுக்கு அதிகமாக வெப்பமாகி வெடிக்காமல் பாதுகாக்கவும், குளிர்ந்த நீர் அந்த உலைகளைச் சுற்றிக் குழாய்களின் மூலம் தொடர்ந்து பாய்ச்சப்படும். ஆனால், இந்தக் குளிர்ந்த நீர்க் குழாய்களை இயக்கும் இயந்திரம் மின்சாரத்தில் இயங்குவன. சுனாமியின் வேகத்தில் எல்லா இயந்திரங்களும் பாழாகி, மின்சாரம் நின்றுவிட்ட நிலையில், அணு உலைகளைக் குளிர்ச்சியடையச் செய்யும் குழாய்களும் செயலற்று விட்டன.
வெடித்துச் சிதறிய அணு உலைகளின் வெப்பத்தைத் தணிக்க இன்னும் பல மாதங்கள் கடல் நீரைப் பாய்ச்சியபடியும், அவ்வப்போது கதிரியக்கத்தைக் காற்று மண்டலத்தில் வெளியிட்டும்தான் நிறுத்த முடியும் என்று கூறுகிறார்கள். அதாவது இத்துடன் முடிந்துவிடவில்லை அணுசக்தியால் ஏற்பட்ட அழிவு என்று அர்த்தம்.
உலக மக்கள் தொகையில் 40% மக்கள் கடற்கரையிலிருந்து 100 கி.மீ. தூரத்துக்குள் தான் வாழ்கிறார்கள். உலகின் பெரு நகரங்கள் என்று வர்ணிக்கப்படும் 19 நகரங்களில் 14 நகரங்கள் கடற்கரை ஓரமாக அமைந்தவைதான். பத்து நாடுகள் முழுக்க முழுக்கக் கடற்கரையை ஒட்டிய 100 கி.மீ.க்குள் மக்கள் வாழும் நாடுகள். அணு மின் நிலையங்கள் கடற்கரை ஓரமாக அமைந்திருப்பதால், எந்தவொரு அணு உலை விபத்தும் அருகிலுள்ள கடற்கரையை ஒட்டிய நாடுகளைத் தாக்கக்கூடும். கதிரியக்கம் கலந்த காற்று வீசும்போது அதைச் சுவாசிப்பவர்கள் அனைவரும் பாதிக்கப்படக் கூடும்.
ஜப்பான் தனக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவைத் துணிவுடன் எதிர்கொண்டுள்ளது என்பது உண்மை. ஆனால், மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை, எல்லோரையும் பயமுறுத்தும் அணுக் கதிர்வீச்சு அபாயம் என்று நிலைகுலைந்து போயிருக்கிறது. தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட நகரங்களிலிருந்து வெளியேறி 500 மைல்களுக்கு அப்பாலுள்ள நகரங்களுக்கு இடம் பெயர்கிறார்கள் பலர். ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர். பல்லாயிரக்கணக்கானோரைக் காணவில்லை. கடல் கொண்டதா இல்லை மண்ணுக்கடியில் இயற்கை சமாதி கட்டிவிட்டதா தெரியவில்லை.
வாழ்ந்து கெட்டவன் என்று நாம் பரிதாபப்படுவோம். விஞ்ஞானம் தரும் எல்லா சுகத்துக்கும் ஆசைப்பட்டவர்கள் ஜப்பானியர்கள். வசதியான வாழ்வு என்று நாம் கருதும் எல்லாமே அவர்களுக்கு அடிப்படைத் தேவைகள். ஒரு ஆழிப்பேரலை அத்தனையையும் அழித்துப் பல ஜப்பானியர்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. எஞ்சி இருப்பவர்களை கதிர்வீச்சு அபாயம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு விபத்து நேர்ந்துவிட்டது என்பதற்காக அணு மின் சக்தி வேண்டாம் என்று கூறுவது முட்டாள்தனம் என்கிறார்கள் சிலர். அவர்கள் தங்களைப் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்களில் ஒருவராகச் சிந்தித்து, இந்தப் பிரச்னையை அணுகிப் பார்க்கட்டும். விடை கிடைக்கும்!

வாக்காளர்கள் விட்டில் பூச்சிகளா?தினமணி தலையங்கம்.

இன்று தமிழகத்தின் இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் காட்டிலும், தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கு இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, வாக்குறுதிகளாக்குவதுதான் ஆளும் திமுகவின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது திமுகவின் தேர்தல் அறிக்கை. தேர்தல் ஆணையம் எதிர்க்க முடியாதபடி எவ்வாறு மக்கள் வரிப் பணத்தை இலவச நலத் திட்டங்கள் என்கிற பெயரில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கலாம் என்பதை மட்டுமே திமுக யோசிக்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை.
தேர்தலுக்கு முன்பாக வீடு வீடாக, அவர்களது வாக்காளர் வரிசைஎண் சீட்டுடன் பணக்கட்டுகளை இணைத்து வீசிச் செல்வதற்கும், தேர்தலுக்குப் பிறகு குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசப் பொருள்களைக் கொடுப்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கமுடியும்?
தேர்தல் அறிக்கை என்பது ஒரு மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை வெறும் இலவச ஆசைகளில் தள்ளி, காரியம் சாதிப்பதாக இருத்தல் கூடாது. அவர்களது எளிய பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்வது ஆட்சியைப் பிடிக்கவும், அதன் மூலம் ஆட்சியாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் பயன்படுமே தவிர, ஒரு மாநிலத்தின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவும்?
இத்தகைய இலவசத் திட்டங்கள் அரசை கடனாளியாக்குவதோடு, அதைப் பெறும் மக்களையும் கடனாளியாக்கிவிடுகிறது.
தற்போது திமுக இவ்வாறாக இலவசங்களை அறிவித்துள்ளதால், அதிமுகவும் போட்டிக்குச் சில இலவசங்களை அறிவிக்கக்கூடும். இதன் முடிவுதான் என்ன?
குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச டிவி வழங்கப்பட்டது. வசதி படைத்தவர்களும் இதை ஒரு விளையாட்டாக வாங்கி, குறைந்த விலையில் விற்றார்கள். தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் சிறிய தங்கும் விடுதிகளில் தமிழக அரசின் இலவச டிவி இருப்பதே இதற்கு சாட்சி.
÷மேலும் இந்த டிவியைப் பெற ரூ.100 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த டிவிக்களில் பல உயர்மின்அழுத்தம் தாளாமல் வெடித்தபோது, இந்த டிவி பார்க்கும் வழக்கத்துக்குப் பழகிப்போன ஏழைத் தொழிலாளி புதிதாக பல ஆயிரம் செலவில் மாதத் தவணையில் டிவி வாங்க வேண்டிய குடும்ப நெருக்கடிக்கு ஆளானார். மேலும் மாதம்தோறும் கேபிள் கட்டணம் ரூ.150 (அவருடைய ஒருநாள் கூலி) வழங்க வேண்டியிருந்தது.
÷இலவச டிவி கொடுத்த அரசு, கேபிள் கட்டணத்தையும் இலவசமாக்கியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியை அரசு கஜானாவில் கையை வைத்து விநியோகித்துத் தங்களது குடும்பக் கேபிள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க நடந்த அதிகாரபூர்வமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு நடந்த விஞ்ஞானபூர்வ முறைகேடுதானே இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்?
இதேபோன்று இலவச சமையல் எரிவாயு திட்டத்திலும், ஏழைக்கு தேவையில்லாத செலவை உண்டாக்கியதைத் தவிர வேறு என்ன பலன்? குடும்பத் தலைவர் இந்த இலவச எரிவாயுவை வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, பணத்தைக் குடித்துத் தீர்த்தார். பெண்கள் தங்களுக்குக் கிடைத்துவந்த மண்ணெண்ணெய் அளவும் குறைந்துபோனதால் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கும் கட்டாயத்துக்கு உள்ளாகினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தாமல், கலைஞர்
காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை என்று அறிவிக்கப்பட்டாலும், இத்திட்டத்தில் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் சிகிச்சைகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. மேலும், நோய் கண்டறிதலுக்கான மருத்துவ சோதனைச் செலவுகளும், சிகிச்சைக்குப் பிந்தைய மருந்து மாத்திரைகளும் ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வரை செலவு வைத்தது. இந்த மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் வாங்கவும் வழியில்லாமல் போனது. காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தொகையைக்கொண்டு மருத்துவமனைகளை மேம்படுத்தினால், அனைவருக்கும் அங்கே இலவச சிகிச்சை அளிக்க முடியும்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்கிறது திமுக தேர்தல் அறிக்கை. அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இலவசக் கல்வி என்று அரசால் அறிவிக்க இயலுமா? ஏனென்றால் அத்தனை தனியார் கல்லூரிகளும் அரசியல்வாதிகளின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவே தமிழக அரசால் முடியவில்லை என்பதுதான் கடந்த இரு ஆண்டுகளாக எல்லோரும் கண்ட காட்சி.
இலவசங்களையும் கடன்பட்டுத்தான் வழங்குகிறார்கள் என்பதோடு, இந்தச் செலவை ஈடுகட்ட மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக மதுவினால் வருவாய் கிடைக்கிறது. இந்த மது தயாரிப்பில் லாபம் அடைவோரும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளே. அண்மையில் ஒரு வாரஇதழில் எந்தெந்த அமைச்சருக்கு மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, புதிதாக அனுமதி பெற்றுள்ளார்கள் என்று பட்டியலே வெளியிடப்பட்டிருந்தது. மக்கள் பணத்தை இப்படியாக மதுவினால் உறிஞ்சி, அதையே திருப்பிக் கொடுப்பது எவ்வகையில் சரி?
இந்தத் திட்டங்களை மிக நுட்பமாக ஆராய்ந்தால், இலவசங்கள் உண்மையில் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன என்பதும், இதைப் பெறும் மக்கள் ஒரு ரூபாய் இலவசத்துக்கு இரண்டு ரூபாய் கூடுதல் செலவு செய்ய நேரிடும் அதே வேளையில், அரசியல்வாதிகள் ஒரு ரூபாய்க்கு 50 காசுகள் லாபம் அடைவது நடந்து கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
நவராத்திரி கொலுவுக்கு ஆள் சேர்க்க நாள்தோறும் புதுப்புது சுண்டல் கொடுக்கப்படுவதைப் போல, அரியணையில் கொலுவீற்றிருக்க ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது இலவசங்களை அறிவித்து, மக்களைக் கவர்ந்து இழுக்கிறார்கள் அரசியல்வாதிகள். பாவம், வெறும் விட்டில்பூச்சிகள்தானா மக்கள்?

Wednesday, March 9, 2011

நாம் பிடித்த புலிவால்- வெளிநாட்டு வாழ்க்கை !

அதிரைநிருபர் குழு | Tuesday, October 26, 2010 | Alaudeen.S , விழிப்புணர்வு ,
அல்லாஹ்வின் திருப்பெயரால்...


பிறக்க ஓர் இடம்!
பிழைக்க ஓர் இடம்!
இதுதான் என் சமுதாய
மக்களின் வாழ்வாகிவிட்டது!
நம் முன்னோர்களுக்கோ
பர்மா, ரங்கூன், மலேசியா!
எங்களுக்கோ வளைகுடா!
இனி ஓர் நாடு கண்டுபிடித்தால்
அங்கும் தொடருமா?
எங்கள் வாரிசுகள்?


வளைகுடா வசந்தம் என்றார்கள்!
முன்னால் கால் வைத்த
மூத்த குடி(அடிமை)மகன்கள் நாம்!
வைத்த காலை எடுக்க முடியவில்லை
ஸ்டெப் கட்டிங் தலையுடன் வந்த
எமக்கு இன்றோ நரையும், வழுக்கையும்!
சில்வர் ஜூப்ளி முடிந்து விட்டது
எம்முடைய பயணமோ
திக்குத்தெரியாமல்
வளைகுடாவை நோக்கியே!


ஊர் சென்றால் நம்
சுமைகளை சுமந்து செல்வதில்
அலாதி ஆனந்தம் நம்
கையெல்லாம் சிவக்க சுமப்போம்
அடுத்த தடவை சுதந்திரபறவைதான்
ஒரே சுமைதான்! நம் வைராக்கியம்
காற்றோடு போகும்! மீண்டும் சுமை!

மனைவி மக்களை பார்த்தால்
மன சந்தோஷம் ஆனால்
நம்முடைய கையிருப்பும்
எடுத்த விடுப்பும்
கரைய கரைய மனதில் பீதி!
வெளியிலோ புன்(பொய்)சிரிப்பு!

எத்தனை கொடுத்தாலும்
போதுமென்ற மனம் இல்லை
இதுதான் கொண்டு வந்தாயா?
நம் உள்ளமோ வேதனையில்
கொடுத்த பொருள் நன்றாக
இருந்தது என்று சொல்லி விட்டால்
தங்கப்பரிசு வாங்கிய சந்தோஷம்!
சொல்லத்தான் மனமில்லை!

கண்ணீரோடு குடும்பத்தை
பிரிந்த நாம் சொல்வது
இரண்டு வருடம்தான்!
முடித்து விட்டு போய்விடுவோம்
பல பிரச்சனைகளில்
மறந்தே விடுவோம்!
இதுதான் தொடர்கதையான
வளைகுடா வாழ்க்கை!


சகோதரிகள் திருமணம் முடித்து
வீட்டையும் கட்டி விட்டு
தொழிலுக்கு பணத்தோடு
ஊரில் தங்கிவிட வேண்டும்!
எல்லாம் முடிந்து
நாமும் குடும்பத்தலைவன்
ஆன பிறகு மீண்டும்
அதே பழைய இடம்
வீடு பிள்ளைகள் திருமணம்
ஊரில் நிரந்தரம் என்பதும்
கனவாய் போனதே!



வழி அனுப்ப வாகனத்தில்
வந்த பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி!
விமான நிலையத்தில் நாம்
உள் நுழைவதை பார்த்தவுடன்
அவர்கள் முகத்திலோ ஒரு சோகம்!
இங்கு வந்தவுடன் தொலைபேசி அழைப்பு
ஏன் வாப்பா உள்ளே சென்ற தாங்கள்
திரும்பி வரவில்லை என்ற தேம்பல் அழுகை
என்ன சொல்லி சமாளிக்க!
நம் நெஞ்சோ சோகத்தால் கனக்க!
குடும்பத்தோடு சேர்ந்து வாழ வழி
இல்லையா என்று உள்ளம் கலங்க
என்ன செய்வோம் எத்தனை காலம்
இந்த அடிமை வாழ்க்கை!
நாம் பிடித்தது புலி வால் அல்லவா?

ஊருக்கு சென்று தொழில் வைக்கலாம்
எல்லோரும் சொல்லும் வார்த்தை!
சென்றவர்கள் சில காலம் கழித்து
மீண்டும் வளைகுடா வாழ்க்கையில்!
ஊரில் நிரந்தரமாகி விட வேண்டும்
என்ற உறுதி இவர்களைப் பார்த்தால்
குலைந்துவிட என்ன செய்ய
மீண்டும் மனப்போராட்டம்!

ஊரில் சிறு தொழில் வைக்காதே
பெரிதாக தொழில் தொடங்கு
ஆலோசனை இலவசம்!
பணத்தை எந்த மரத்தில் பறிக்க
காலம் இப்படியேதான் போகுமா?
குடும்பத்தோடு சேர்ந்து
வாழ்வது எப்பொழுது?


கல்வி இல்லாமல் வந்தவர்கள்
கஷ்டப்படும் நிலையை பார்த்து
கல்வியை கற்றுக்கொண்டு வா!
என்றார்கள், கல்வி கற்று வந்ததும்
நல்ல வேலை மனைவி மக்களுடன்
வாழ்க்கை சிலருக்கு!
கல்வி கற்ற பலர் தனிமரமாக!


ஊரில் கணக்கில்லா சொத்து
உள்ளவனை பார்த்து
ஏன் இங்கு வந்தாய் என்றால்
இங்கு உள்ள சுகாதாரம்
ஊரில் வருமா அதனால்தான் என்றான்?
இங்கு வந்து வாழும்
குடும்ப பெண்களிடம்
கேட்டால் ஊர் போல் வருமா
வளைகுடா என்றார்கள்!



நாம் இழந்தது என்ன?
தாய் தந்தை சேவையை!
குடும்பத்தின் சுக துக்கத்தை!
நம் உறவுகளின் அனுசரணையை!
தென்றல் வீசும் காற்றை!
மழலையின் வார்த்தையை!
மழையின் மண்வாசனையை!

பள்ளி விட்டு வந்ததும்
பள்ளியின் கதை சொல்ல
தந்தையை தேடும்
பிள்ளை செல்வங்களை!
தந்தையுடன் செல்லும்
பிள்ளைகளை பார்த்து
நம் தந்தை அருகில்
இல்லையே என்று வாடும்
நம் பிஞ்சுகள் இழக்கும் சந்தோஷத்தை!

வாகனத்தில் செல்லும்பொழுது
சாலைகளில் இருபுறமும்
பசுமை மரங்களோடு
சேர்ந்து வரும் தென்றலை!
இன்னும் நிறைய!
பணம் உண்டு இங்கு
நம் மனம் மட்டும் ஊரில்!
இயந்திரத்தனமாக தொடர்கிறது
புலிவாலை பிடித்த வாழ்க்கை!

Tuesday, March 8, 2011

dinamani.தலையங்கம்: பொறுப்பில்லாத பிரதமர்!

First Published : 09 Mar 2011 01:34:00 AM IST
Last Updated : 09 Mar 2011 05:30:53 AM IST

தான் செய்த தவறுக்கான பழியை அடுத்தவர் மேல் போட்டுத் தப்பித்துக் கொள்வது என்பது அதிகார வர்க்கத்துக்கே உரித்தான "உயரிய' பண்புகளில் ஒன்று. இந்தியாவின் இந்நாள் பிரதமரான மன்மோகன் சிங், ஒரு முன்னாள் அரசு உயரதிகாரி என்பதால், அவரது அடிப்படை மனோபாவம் மாறாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
பிரதமரின் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது முதலே பிரதமரின் முடிவு சர்ச்சைக்குரியதாகி இருக்கிறது. நமது தலையங்கத்தில் முன்பே குறிப்பிட்டிருந்ததுபோல, ஒரு பிரதமர் தனக்கு எதுவுமே தெரியாது என்றோ, தனக்குத் தெரியாமல் நடந்துவிட்ட தவறு என்றோ குறிப்பிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது, கூடாது. நூறு கோடி இந்தியர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் பதவியில் இருப்பவர், அந்தப் பதவிக்கே உரித்தான பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
பி.ஜே. தாமûஸ ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டபோதே ஊடகங்களில் பலத்த எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தவண்ணம் இருந்தன. கேரள மாநிலத்தில் நடைபெற்ற பாமாயில் இறக்குமதி ஊழலில் பி.ஜே. தாமஸ் சம்பந்தப்பட்டிருப்பதும், அவர் மீது விசாரணை நடைபெற்று வருவதும் அநேகமாக இந்தியாவிலுள்ள அத்தனை தினசரி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் பரபரப்பான செய்தியாக வெளியானது. தாமஸ் மீது அப்படி ஒரு விசாரணை இருப்பது பற்றியே தெரியாமல் இருந்திருப்பதாகப் பிரதமர் கூறுவது உண்மையானால், நமது பிரதமர் இந்தியப் பத்திரிகைகளைப் படிக்கிற, தொலைக்காட்சிச் சேனல்களைப் பார்க்கிற பழக்கமில்லாதவர் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. ஒருவேளை, லண்டன் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் போன்ற மேலைநாட்டுப் பத்திரிகைகளைத்தான் படிக்கிறாரோ என்னவோ, யார் கண்டது?
""தாமஸ் நியமனத்தில் ஏற்பட்ட தவறுக்கு உயர்மட்டத் தேர்வுக் குழுவின் தலைவர் என்பதாலும், பிரதமர் என்ற முறையிலும் நான் முழுப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'' என்று பவ்யமாக ஒத்துக்கொள்வதுடன் பிரதமர் நிறுத்தியிருந்தால், "மறப்போம், மன்னிப்போம்' என்று விட்டுவிட்டிருக்கலாம். அடுத்தாற்போல அவர் அவிழ்த்து விட்டிருக்கும் அண்டப்புளுகுகளைத்தான் நம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
செப்டம்பர் 3-ம் தேதி நடந்த ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்துக்கான உயர்மட்டக் குழுவின் கூட்டத்துக்கு வருவதுவரை, அந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டிருந்த மூன்று நபர்களில் ஒருவரான பி.ஜே. தாமஸ் மீது விசாரணை நடந்து கொண்டிருப்பது பற்றித் தனக்குத் தெரியாது என்று நா கூசாமல் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார் பிரதமர். இதற்கு அவர் கூறும் காரணம் என்ன தெரியுமா?
""பி.ஜே. தாமஸ் கேரள மாநிலத்தின் தலைமைச் செயலராக இருந்தவர். மத்திய அரசின் செயலராகப் பணியாற்றியவர். இந்தப் பணி நியமனங்களுக்கு முன்னால் அவரது பின்னணி கண்காணிப்புத் துறையால் பரிசீலிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தேன். உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில், மூன்று உறுப்பினர்களில் ஒருவரான எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ், பி.ஜே. தாமûஸ நியமிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதுதான், தாமஸ் மீது ஊழல் விசாரணை நடைபெறுவது பற்றிய விவரமே எனக்குத் தெரியும்'' - இது மாநிலங்களவையில் நேற்று பிரதமர் அளித்திருக்கும் தன்னிலை விளக்கம்.
அது உண்மை என்றே நம்புவோம். இப்படி ஒரு குற்றச்சாட்டை எதிர்க்கட்சித் தலைவியும், மூன்று பேர் குழுவில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் முன்வைத்தவுடன், பிரதமர் என்ன செய்திருக்க வேண்டும்? கூட்டத்தைத் தள்ளி வைத்துவிட்டு, பி.ஜே. தாமஸின் பின்னணியைப் பற்றித் தீர விசாரித்த பிறகு, நியமனத்தை உறுதிப்படுத்துவதுதானே நியாயம்? ஏன் செய்யவில்லை?
தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஒரு "மெகா' ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அந்தத் துறையின் செயலராக இருந்தவர் பி.ஜே. தாமஸ். தனது துறையில் நடந்த ஊழலைப் பற்றி விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு அதிகாரமில்லை என்று அறிவித்தவர் பி.ஜே. தாமஸ். அவசர அவசரமாக அதே பி.ஜே. தாமûஸ ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க வேண்டிய அவசியம் என்ன? இதுகூடப் பிரதமருக்குத் தெரியாது என்று நம்மை நம்பச் சொன்னால் எப்படி?
அதையெல்லாம்விட மிகப்பெரிய வேடிக்கை பிரதமர் மன்மோகன் சிங், பழியைத் தனது பிரதமர் அலுவலக இணையமைச்சராக இருந்து இப்போது மராட்டிய மாநில முதல்வராக இருக்கும் பிருதிவிராஜ் சவாண் மீது போடுவதுதான். ""இதுபோன்ற கூட்டங்களுக்கான குறிப்புகளைத் தயார் செய்வது, பணியாளர் நியமனத் துறையின் இணையமைச்சர்தான். அவர் தயாரித்துத் தந்த குறிப்பில் தாமஸ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பற்றி எதுவும் இருக்கவில்லை'' என்கிறார் பிரதமர்.
அப்படியானால் நமது பிரதமர் சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவர் அல்லவா? தனக்கு யாரோ தரும் குறிப்புகளின் அடிப்படையிலும் வேறு யாரோ வழங்கும் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் செயல்படுபவரா? வேறு யாராவது கூறியிருந்தால், ""இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று கேட்கலாம். பிரதமரை எப்படிக் கேட்பது?''
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பற்றிக் கேட்டால், அது அமைச்சர் ஆ. ராசாவின் முடிவு, தனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரிக்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பல கோடி கொள்ளை போயிருக்கிறதே என்றால், ""அப்படியா? தவறு செய்தவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டோம்'' என்றுகூறித் தனக்குத் தொடர்பே இல்லை என்று நழுவப் பார்க்கிறார். தாமஸ் நியமனம் பற்றிக் கேட்டால் அவர் மீது விசாரணை இருப்பதே தெரியாது என்று மாநிலங்களவையில் வாக்குமூலம் அளிக்கிறார். அப்படியானால், நமது பிரதமருக்குப் பதவி சுகத்தை அனுபவிப்பதைத் தவிர, வேறு ஒன்றுமே தெரியாதா?
கடைசியாக ஒரு கேள்வி. இன்றைய இந்தியாவைப் பிடித்திருக்கும் மிகப்பெரிய கேடு என்று கருதப்படும் ஊழலைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையர் என்கிற பொறுப்பான அரசியல் சட்ட நியமனப் பதவிக்கான தேர்வு நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்வதற்கு முன்னால், சம்பந்தப்பட்ட கோப்புகளைப் படித்து, பட்டியலிலுள்ள நபர்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு கூட்டத்தில் கலந்துகொள்வதுதானே முறை! அதைக்கூடச் செய்யாத பொறுப்பற்றதனம் ஒரு பிரதமருக்கு இருக்கலாமா?

கருத்துகள்
இப்படி ஒரு அண்டப்புழுகன் பிரதமராக இருப்பது இந்த நாட்டுக்கே கேவலம்.ஒவ்வொரு இந்தியனும் வெட்கப்படவேண்டிய விஷயம். கோயபல்ஸ் தேவலாம் .
By gopal
3/9/2011 10:27:00 AM
இவர் நமது உண்மையான பிரதமர் இல்லை. ஒரு மூளையில்லாத பினாமி! தேச துரோகி! கேவலம், இதுபோன்றவர்களிடம் பல முட்டாள்களிடம் நாடு பல ஆண்டுகளாக பரிதவிக்கிறது. இதற்க மகாத்மா காந்தி சுதந்திரம் வாங்கினார்? By wq
3/9/2011 10:25:00 AM
appadi podunga. i want to write in tamil. what should i do
By Arul Amalan
3/9/2011 10:22:00 AM
energy waste go and relax IT IS INDIA
By JASRIAN
3/9/2011 10:21:00 AM
அருமையான தலையங்கம். சவுக்காலடித்தமாதிரி ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். ஒன்றாம்வகுப்புப் படிக்கும் குழந்தை "தெரியாம உச்சாப்போயிட்டேன் டீச்சர்" என்று கூறுவதற்கும் இவரது பேச்சுக்கும் என்ன வித்தியாசம்?. நமது தலைஎழுத்தை என்னெவென்று கூறி அழுவது? வரும் தேர்தலில் இந்த காங்கிரசையும் தி மு க வையும் டெபாசிட் இழக்கச்செய்து வீட்டுக்கு அனுப்புவது ஒன்று மட்டுமே நம் கையில் உள்ள மகத்தான சக்தி. நாட்டோரே, நல்லோரே, தயவுசெய்து சிந்தித்து செயல்படுங்கள். அனைவரும்-அனைவரும் தவmறாமல் வாக்களித்து இந்தக்கேடுகெட்ட ஜென்மங்களை வீட்டுக்கு அனுப்புவோம். என்ன?
http://www.dinamani.com

Monday, March 7, 2011

அற்புதப் படைப்பாளன்" - இப்பிரபஞ்சத்தின் இறைவன் !கருத்தரங்கம் 13/03/2011 ஞாயிற்றுக் கிழமை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! சென்னையில் இயங்கி வரும் "இக்ராமுல் முஸ்லிமீன் சாரிடபுல் டிரஸ்ட்" என்ற அமைப்பின் சார்பாக "அற்புதப் படைப்பாளன்" - இப்பிரபஞ்சத்தின் இறைவன் பற்றிய கருத்தரங்கம் என்ற நிகழ்ச்சியை வரும் 13/03/2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடத்த உள்ளோம் - இன்ஷா அல்லாஹ். (கருத்தரங்கம் நடைப்பெறும் இடத்தின் முகவரி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது) நிகழ்ச்சியில்:- 1. சகோதரர் முஹிப்புல்லாஹ் (முன்னாள் புத்த பீட்சு - சுவாமி ஆனந்தாஜி), 2. சகோதரர் M. C. முஹம்மது (முன்னாள் கிருத்துவ போதகர் - கிருஸ்து ராஜா), . 3. சகோதரர் அஹமது சுஃபியான், ஆகியோர் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகின்றனர் மற்றும் 4. டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) & 5. முஃப்தி உமர் ஷெரிஃப் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். சகோதர, சகோதரிகளே! சென்னையை சேர்ந்த, தங்களுக்கு தெரிந்த, அறிமுகமான இஸ்லாத்தை அறிந்துக்கொள்ள நினைக்கும் மாற்று மத சகோதர, சகோதரிகளை இந்நிகழ்ச்சிக்கு அனுப்பி வையுங்கள். அல்லது எங்களுக்கு அவர்களின் முகவரி அல்லது மொபைல் எண் கொடுத்தால் அவர்களை நாங்கள் சந்தித்து / தொடர்பு கொண்டு அழைப்பிதழ் கொடுத்து வரவழைக்கின்றோம். பலர் இஸ்லாத்தை தெரிந்துக்கொள்ள விரும்புகின்றனர் ஆனால் அவர்களுக்கு சரியான தருணங்கள், விளக்கங்கள் கிடைப்பதில்லை. எனவே இதுபோன்ற நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையலாம். மாற்றார்களை இஸ்லாத்தின் பக்கம் வர தாஃவா செய்வது நமது கடமை; அதன் மூலம் அவர்களுக்கு இதாயத் தருவது இறைவனின் உரிமை. இத்துடன் நிகழ்ச்சியின் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள: +91-91766 33023 - என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அன்புடன் சகோதரன் ஹைதர் ஹுசேன் சென்னை ---------------- என்றும் மாறா அன்புடன்...முத்து இஸ்மாயில்,

வரலாறு - தோழர்கள் !

புதன், 02 மார்ச் 2011 14:20
அந்நுஃமான் பின் முகர்ரின் அல்-முஸனீ



மதாயின் நகரம். பாரசீகத்தின் பேரரசன் யஸ்தஜிர்து கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அவனது பேரவைக்கு ஒரு பிரதிநிதிக்குழு வந்திருந்தது. அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு என்னென்னவோ பேச, சக்கரவர்த்திக்கு இரத்தம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.

“பிரதிநிதிகளைக் கொல்லக் கூடாது என்ற நடைமுறை மட்டும் இல்லாதிருப்பின் உங்களையெல்லாம் நான் கொன்றிருப்பேன். உங்களுக்கெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. திரும்பிச் செல்லுங்கள்" ம்ஹூம், போதாது; வெறுமனே இவர்களை அதட்டி அனுப்பினால் போதாது. அவமானப்படுத்த வேண்டும்! அவர்களது முகத்தில் மண் பூச வேண்டும் என்று கதறியது அவன் மனம்.


"மூட்டை நிறைய மண் எடுத்து வாருங்கள்"

உடனே எடுத்து வந்தார்கள் சேவகர்கள். “இவர்களது குழுவில் உயர்குடி வகுப்பினன் எவனோ அவனது முதுகில் மணல் மூட்டையை ஏற்றி வைத்து, மக்களெல்லாம் காணும் வகையில் இவர்களை மதாயின் நகரை விட்டே துரத்துங்கள்"

விரைந்து எழுந்தார் ஆஸிம் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு. "இந்தக் குழுவில் உயர்குடியைச் சேர்ந்தவன் நானே" என்று பரிசு வாங்கச் செல்பவர்போல் அந்த மணல் மூட்டையைப் பெருமிதமாய் ஏற்றுக் கொள்ள, மக்களெல்லாம் பரிகாசமும் நையாண்டியுமாய்ப் பார்க்க அந்தத் தூதுக்குழு தங்களது படை முகாமிற்குத் திரும்பியது. படைத் தலைவர் ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆவலுடன் கேட்டார், “சென்ற காரியம் என்ன ஆயிற்று?"

“மனம் மகிழுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ், அவர்களது அரசாங்கத்தின் சாவியை நம்மிடம் ஒப்படைத்துவிட்டான்" என்று மணல் மூட்டையை இறக்கி வைத்தார் ஆஸிம்.

யஸ்தஜிர்த் மண் மூட்டையை ஏற்றி வைத்ததோ அவமானப்படுத்த. அதைச் சுமந்து வந்ததில் எவ்வளவு அவமானம் ஆத்திரம் ஏற்பட்டிருக்க வேண்டும்?. ஆனால், அவன் தனது நிலத்து மண்ணை அள்ளித் தானாகத் தந்து, தங்களது வெற்றிக்கு வித்திட்டுவிட்டான் என்று பெருமிதமடைந்தார்கள் தோழர்கள்! அல்லாஹ்வின் பாதையில் களமிறங்கியதும் என்ன பிரச்சினையானாலும் சரி, சிக்கலானாலும் சரி அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை! அனைத்தையும் ஆக்கபூர்வமாகவே பார்க்கும் பரந்த நோக்கு இருந்திருக்கிறது அவர்களுக்கு. ரலியல்லாஹு அன்ஹும்.




oOo

மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் ஓர் ஊர் இருந்தது. அங்கு முஸைனா எனும் கோத்திரத்தினர் வாழ்ந்து வந்தனர். நபியவர்கள் மதீனா புலம்பெயர்ந்தபின் மக்காவிலிருந்து மற்ற முஸ்லிம்களும் மெதுமெதுவே மதீனா வந்தடைய ஆரம்பித்தனர். அவர்களெல்லாம் முஸைனாவைக் கடந்துதான் செல்ல வேண்டும். வழக்கத்திற்கு மாறான, அதிகமான போக்குவரத்து; மதீனாவில் நிகழ்ந்துவரும் மாற்றம்; இவையெல்லாம் முஸைனா குலத்து மக்கள் மத்தியல் செய்தியாக ஆரம்பித்தன. “என்னதான் நடக்கிறது அங்கே?" என்று ஆவலும் ஆர்வமுமாய் விசாரிக்க, பதிலாய்க் கிடைத்த தகவல்களெல்லாம் அவர்களுக்கு ஆச்சரியமளித்தன!

“அப்படியா? உண்மையாகவா? இப்படியெல்லாம்கூட வாழலாமா? சிறப்பாக இருக்கே!"

கோத்திரங்களுக்கெல்லாம் சில தலைவர்கள், பெருந்தலைவர் என்று உண்டு. முஸைனா கோத்திரத்திற்கும் ஒருவர் இருந்தார்; அந்நுஃமான் இப்னுல்-முகர்ரின். அவருக்கு ஒன்பது சகோதரர்கள். சனான், ஸுவைத், அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், அகீல், மஅகல், நயீம், மார்தி, தர்ரார்.

ஒருநாள் மாலை சகோதரர்கள், நண்பர்கள், பெரியவர்கள் என்று கூட்டமாய் அமர்ந்து பேசி்க்கொண்டிருந்தார்கள். நுஃமான் மனதில் சிலநாளாய் ஓர் எண்ணம் ஓடிக்கொண்டிருந்ததது. அன்று வாய்ப்பு அமைந்துவிட, பேசினார்:

“என் மக்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். முஹம்மது என்றொருவர் இங்கு யத்ரிபிற்கு வந்திருக்கிறாரே, அவர் மக்களுக்குக் கருணை கற்றுத் தருகிறாராம்; நீதியும் நேர்மையும் போதிக்கிறாராம். இன்னும் அவரைப் பற்றிக் கேள்விப்படுவதெல்லாம் நல்லவையாகவே இருக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து மக்களெல்லாம் முந்திக்கொண்டு அவரிடம் செல்கிறார்கள். நல்லவற்றை ஏற்றுக்கொள்வதை நாம் ஏன் தாமதப்படுத்த வேண்டும்? என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால் நான் முடிவு செய்துவிட்டேன். நாளைக் காலை முதல் வேலையாக நான் யத்ரிப் சென்று அவரைச் சந்திக்கப் போகிறேன். என்னுடன் வர விருப்பமுள்ளவர்களெல்லாம் பயணத்திற்குத் தயார் செய்து கொள்ளுங்கள்"

அச்சொற்கள் விழுந்த செவிகள் அறிவுக் கூர்மையுள்ள செவிகள். மறுநாள் பொழுதுவிடிந்தது. நுஃமான் வெளியே வந்து பார்த்தால் அவரின் அனைத்து சகோதரர்களும் நானூறு போர்வீரர்களும் என்று ஒரு படையே பயணத்திற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது.

புருவம் உயர்த்தி யோசித்தார் நுஃமான். ‘இத்தனைபேர் செல்கிறோம்; இறைத்தூதர் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறோம்; வெறுங்கையுடன் எப்படிச் செல்வது? ஏதாவது அன்பளிப்பு அளிக்க வேண்டுமே..’ சோதனையாய் அந்த ஆண்டில் மழையின்றி, விளைச்சல் இன்றி, வறுமையில் இருந்தார்கள் அவர்கள். கால்நடைகளும் ஏதும் அதிகமில்லை. பஞ்சத்திலிருந்து காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த ஆடுகள் சில அவரது வீட்டிலும் அவரின் சகோதரர்கள் வீட்டிலும் இருந்தன. அவற்றையெல்லாம் தேற்றி ஓட்டிக்கொண்டு, கிளம்பியது அந்தப் படை - மதீனாவை நோக்கி.

“வருகிறது ஒருபடை, தங்களை ஆரத் தழுவிக்கொள்ள" என்ற நற்செய்தி நபியவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பெருமகிழ்வுடன் அவர்களை வரவேற்க நபியவர்கள் தயாரானார்கள்.

நானூற்று சொச்சம் பேரும் வாகனப் பிராணிகளும் ஆடுகளும் என்று பாலை வெயிலில் நடந்து வந்தால் எப்படி இருக்கும்? காற்றில் மணல் புழுதி பறக்க, நிலம் திடும் திடுமென அதிர மதீனாவில் நுழைந்தார்கள் நுஃமானும் சகோதரர்களும் முஸைனி குலத்துப் போர் வீரர்களும். மதீனாவே மகிழ்ச்சியில் அதிர்ந்தது! எத்தனையோ கோத்திரத்திலிருந்து வருகிறார்கள்; தனித்தனியாக வருகிறார்கள், சிறு குழுவாய் வருகிறார்கள்; இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்க, தம் சகோதரர்கள் அனைவரும் தம் குலத்தின் நானூறு போர் வீரர்களும் திருமண நிகழ்ச்சிபோல் ஒரு கோத்திரமே வந்து இணைவதைக் காண்பது மதீனாவிலிருந்த முஸ்லிம்களுக்குப் புதுசு. வரலாற்றில் தனித்தன்மையை பெற்றுவிட்ட ஒரு பெருநிகழ்வு அது.

அவர்கள் அளித்த பரிசை நபியவர்கள் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள். குர்ஆனிலுள்ள சூரா தவ்பாவின் 99ஆவது வசனம் இந்நிகழ்வை இப்படிக் குறிக்கிறது -

"கிராமப்புறத்தவர்களில் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கின்றார்கள்; தாம் (தர்மத்திற்காகச்) செலவு செய்வது தங்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தையும், இறைத் தூதரின் பிரார்த்தனையும் (தங்களுக்குப்) பெற்றுத்தரும் என நம்புகிறார்கள்; நிச்சயமாக அது அவர்களை (அல்லாஹ்வின்) அண்மையில் கொண்டு சேர்ப்பதுதான்; அதி சீக்கிரத்தில் அல்லாஹ் அவர்களைத் தன் பேரருளில் புகுத்துவான் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்"

நுஃமான் ஒரு கோத்திரத்தின் தலைவர். மிகுந்த செல்வாக்குடன் வாழ்ந்து கொண்டிருந்தவர். ஆள் பலம், படை பலம் உள்ளவர். வீர தீர சகோதரர்களே பத்துப் பேர். இவர்கள் அனைவரும் மெனக்கெட்டு ஊரிலிருந்து பயணம் கிளம்பிச் செல்கிறார்கள். பணம் கொடு, பதவி கொடு, மந்திரி சபையில் இடம் கொடு, இட ஒதுக்கீடு கொடு என்றெல்லாம் பேசவில்லை! உலக ஆதாயங்களைப் பற்றி மூச்சே இல்லை.

‘ஒரே இறைவன் என்கிறீர்கள். நன்றாக அறிவுக்குப் புரிகிறது. நல்லறம் போதிக்கிறீர்கள்; தீய செயல்களைச் செய்யக் கூடாதெனச் சொல்கிறீர்கள். மனதில் ஆனந்தம் பொங்குகிறது. நாங்கள் பத்துப் பேர் மட்டுமே சகோதரர்கள் இல்லை; இஸ்லாத்தினுள் காலடி எடுத்துவைத்த எல்லோருமே சகோதரர்கள் என்கிறீர்கள். அதன் உன்னதம் சிலிர்க்கிறது. இங்கு வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தென்படுகிறது. நிரந்தரம் என்பது மறுமைக்குள் ஒளிந்திருப்பதை உணர முடிகிறது. போதும்! இது போதும் எங்களுக்கு!’ என்று தலைமைப் பகட்டு, இறுமாப்பு அனைத்தையும் கழட்டி வைத்துவிட்டு அடக்கமாய் இஸ்லாத்திற்குள் நுழைந்தார் அந் நுஃமான் இப்னு அல்-முகர்ரின், ரலியல்லாஹு அன்ஹு.

அதன்பிறகு -

அகழி யுத்தம், இதர யுத்தங்கள் என்று இஸ்லாத்திற்காக நடைபெற்ற போர்களிலெல்லாம் நபியவர்களுடன் இணைந்து களத்தில் ஒரே வீரவிளையாட்டுதான். போரில் நபியவர்களின் கொடியை ஏந்திச் செல்லும் பொறுப்பும் பெருமையும் அவருக்குக் கிடைத்தது. மக்கா படையெடுப்பின்போது பெரும் படை சென்றது; அதில் பத்தாயிரம் வீரர்கள்வரை இருந்தனர் என்று முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோமல்லவா? அதில் நுஃமானின் முஸனி கோத்திரத்தின் வீரர்கள் மட்டுமே ஆயிரத்து முந்நூறு பேர்.

oOo

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவிற்குப் பிறகு அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் மூன்று முக்கியப் பிரச்சினைகள் அவரை நெருக்கின. முதலாவதாக உஸாமா பின் ஸைதையும் அவர் தலைமையில் படையையும் ரோமர்களை நோக்கி அனுப்பி வைப்பது. இரண்டாவது, "நானும் நபி, நானும் இறைத் தூதுவன்" என்று கிளம்பினார்களே கிறுக்கர்கள், அவர்களிடம் போர் தொடுப்பது. மூன்றாவது இஸ்லாத்திலிருந்து தடம் புரண்டு போனதுமில்லாமல் தூற்றத் தொடங்கியவர்களை நேர்படுத்துவது.

ஒரு பாராவில் எழுதிவி்ட்டாலும் இவை மூன்றுமே நாம் கற்பனை செய்தும் பார்க்க முடியாத பெரும் சோதனைகள். அவை அனைத்தையுமே தமது இரண்டரை ஆண்டுகால ஆட்சியிலேயே அபூபக்ரு எதிர்கொண்டு சாதித்துக் காட்டியது இன்ஷா அல்லாஹ் நாம் படித்தறிய வேண்டிய தனி வரலாறு.

முன்னர் நாம் பார்த்த சில தோழர்களின் வரலாற்றில் பொய்யன் முஸைலமா பிரதானமாய் தென்பட்டிருப்பான். இங்கு நேர்வழியிலிருந்து பிறழ்ந்துபோன கூட்டங்களுடன் நடைபெற்ற ரித்தா போர்க் காட்சிகள் சிலவற்றைப் பார்த்துவிடுவோம்.

நபியவர்கள் மரணிக்குமுன் புதிதாய் இஸ்லாத்தில் நுழைந்த கோத்திரத்தினர் சிலர் இருந்தனர். அவர்கள் மத்தியில் ஓரிறைக் கொள்கை முற்றிலும் வேரூன்றாமல் இருந்தது. பண்டைய பழக்க வழக்கங்களில் ஊறித் திளைத்திருந்த அவர்கள் மனதிலிருந்து அப்பழக்கம் முழுவதுமாய் விடுபடவில்லை. நபியவர்களின் மரணச் செய்தி கிடைத்ததும், ‘சரி தான்! புதிதாய் முஹம்மத் தோற்றுவித்த கலாச்சாரம் அது. ஆட்டம் முடிந்தது’ என்று அவர்களது மனதில் குலப் பெருமை, அதிகார வேட்கை, பண ஆசை ஆகியனவெல்லாம் திரும்பவும் குடியேற ஆரம்பித்தன.

“ஸகாத்தா? என் பணம்; என் காசு; என் சொத்து. அதெல்லாம் தரமாட்டேன். போனால் போகிறது, தொழுது கொள்கிறேன்; நோன்பு நோற்கிறேன்" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

'மதீனாவிலிருந்து முஸ்லிம் வீரர்களின் பெரும் படை உஸாமாவின் தலைமையில் ரோமர்களை நோக்கிச் சென்றுவிட்டது; கலீஃபாவும் முஸ்லிம்களும் முஹம்மதை இழந்த சோகத்தில் மனமும் உடலும் நொடித்துப் போய் கன்னத்தில் கைவைத்து அமர்ந்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் வலுவிழந்து விட்டனர். அவர்களால் நம்மை எதுவும் செய்துவிட முடியாது' என்ற இறுமாப்பும், இஸ்லாத்திலிருந்து விலகிப்போன முர்த்தத்களிடம் குடிகொள்ளலாயிற்று.

இஸ்லாமிய வரலாற்றில் கடுங்கொந்தளிப்பான காலகட்டம் அது.

முஸ்லிம்களுக்கு எதிராக பனூ கதஃபான், பனூ அஸத், பனூ தாய் ஆகியோர் போர்களத்திற்கு வந்துவிட்டார்கள். பனூ தால்பா பின் ஸஅத், பனூ மர்ரா, பனூ அபாஸ் எனும் கோத்திரத்தினர் தங்களது படையுடன் மதீனா நகருக்கு அருகே அமைந்துள்ள அப்ராக் எனும் திறந்தவெளிக்கு வந்துவிட்டனர். பெருங் கூட்டமாய்க் கூடி நெருக்குதல் அளித்தால் கலீஃபா அபூபக்ரு இணங்கிவிடுவார் என்ற திட்டம் இருந்தது அவர்களுக்கு. அப்படி இல்லையா மதீனாவைத் தாக்கிக் கைப்பற்றுவோம்! கிள்ளுக்கீரை என்று நினைத்துவிட்டனர் ஸித்தீக்குல் அக்பரை.

அந்தக் கோத்திரங்களின் குழுவொன்று அபூபக்ருவைச் சந்தித்து, “ஸகாத்தெல்லாம் முஹம்மது நபி இருக்கும்போது கேட்டார்கள்; தந்தோம். அவர் சென்றுவிட்டார். அதனால் அதை நாங்கள் உங்களுக்குத் தரத் தேவையில்லை. எங்களை ஸகாத் கடமையிலிருந்து விடுவித்துவிடுங்கள். இல்லையா எங்களுக்கு இஸ்லாமெல்லாம் தேவையில்லை. நாங்கள் வெளியேறுகிறோம்"

உமர் (ரலி) உட்பட மூத்தத் தோழர்கள் மத்தியில் இந்த முர்தத்களை எதிர்த்துப் போர்தொடுப்பதில் தயக்கம் இருந்தது. பயமல்ல; அரசியல் தயக்கம்.

"ஸகாத் மட்டும்தானே தரமாட்டேன் என்கிறார்கள். ஆனால் தொழுது கொள்கிறேன், இதர கடமைகள் செய்கிறேன் என்கிறார்கள்; எனில் அவர்களும் முஸ்லிம்களாகத்தானே கருதப்பட வேண்டும். கலிமாச் சொல்லியிருக்கும் இவர்களிடம் எப்படிப் போரிடுவது?"

அதற்கு அபூபக்ரு (ரலி) உரைத்த பதில் சுருக்கமானது. வலிமை வாய்ந்தது. “அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். தொழுகைக்கும் ஸகாத்திற்கும் இடையில் வேறுபாடு காண்பவன் யாராக இருந்தாலும் நிச்சயம் அவனை எதிர்த்து நான் போரிடுவேன. ஸகாத் அவர்களது சொத்தின் மீதான உரிமையாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபியவர்களிடம் சிறியதொரு பெண் ஆட்டை ஸகாத்தாக கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் இப்பொழுது எனக்குத் தரமறுத்தால் போர்தான். அவ்வளவு ஏன், மூக்கணாங்கயிறு ஒன்றை ஸகாத் கடமையாய் அவர்கள் நபியவர்களிடம் அளித்திருந்து அதை இப்பொழுது தர மறுத்தாலும் சரியே"

நமக்கு இதில் பாடம் இருக்கிறது. ‘எவ்வளவு நேரம்தான் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருப்பது, கொஞ்சம் தொழுதுவிட்டுப் போகலாம் என்று வந்தேன். நேற்றுதான் இரண்டு ஏழைக்கு மீந்துபோன சோற்றைப் போட்டேன்; இன்று ஸகாத்தும் கொடுக்கணுமா?’ என்று சொல்வதற்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் என்ன பொழுது போக்கா? அவை மார்க்கத்தின் அடித்தளமல்லவா!

அபூபக்ருவின் அந்த பதில், வந்த குழுவினரைப் பேச்சடைத்துப் போகச் செய்தது. அதேநேரத்தில் அபூபக்ருவின் திட்டவட்டமான இந்த பதில் உமர், இதரத் தோழர்களின் உள்ளங்களைத் திறக்க, பளீரென உண்மை அவர்களுக்குப் புரிந்தது.

தம் பதிலால் வந்தவர்கள முகத்தில் தெரிந்த மாறுதலைத் தெளிவாகப் படித்துவிட்டார் அபூபக்ரு. அவர்கள் போருக்குத் தயாராகி மதீனாவைத் தாக்கத் திட்டமிடுகிறார்கள் என்பது நிச்சயமாகத் தெரிந்தது.

திரும்பிய குழு, தங்கள் தலைவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தது. அந்த அனைத்துக் கோத்திரத்தின் தலைவர்களும் பரபரவென்று ஆலோசனை செய்தார்கள். ‘முஸ்லிம்களின் பெரும் படையொன்று மதீனாவை விட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டதால் போதிய படை பலம் இன்றி முஸ்லிம்கள் பலகீனமான நிலையில் இருக்கிறார்கள். நம் தாக்குதலை எதிர்க்கும் அளவிற்கெல்லாம் அவர்களிடம் இப்போது வலுவில்லை. இதுதான் சரியான தருணம். மதீனா நம் கையில் வந்துவிட்டால் அதன் நிர்வாகம் நமதே' அந்த ஒவ்வொரு கோத்திரமும் வெற்றியில் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய லாபத்தைக் கனவு கண்டு, வாயைத் துடைத்துக்கொண்டு, “நாங்கள் தயார்" என்று ஏகமனதாய் அறிவித்துவிட்டன.

இங்கு மதீனாவில் தற்காப்பு ஏற்பாடுகள், போர் ஏற்பாடுகள் என உடனே மளமளவென்று காரியத்தில் இறங்கினார் கலீஃபா அபூபக்ரு. முதற்காரியமாகப் பெண்களையும் குழந்தைகளையும் கோட்டைகளுக்குள்ளும் மலைகளுக்கும் அனுப்பி வைத்தார். மதீனா நகருக்கு வெளியே காவல்படை அமைக்கப்பட்டது. பிறகு, இஸ்லாத்தில் திடமாய் நிலைத்திருந்த இதர கோத்திரத்தினருக்கு உடனே தகவல் அனுப்பப்பட்டது. வழி தவறிப்போனவை சிலகோத்திரங்கள்தாமே. இஸ்லாம் ஆழ வேரூன்றிக் கிடந்த அஸ்லம், கிஃபார், அஷ்ஜா, ஜுஹைனா, கஅப் மற்றும நுஃமானின் முஸைனா கோத்திரங்களுக்குத் தகவல் வந்து சேர்ந்ததுமே, குதிரைகள், ஒட்டகங்கள், போர்த் தளவாடங்கள் என்று மதீனாவின் வீதிகள் அக்கோத்திரங்களின் முஸ்லிம் வீரர்களால் நிறைந்தன.

அபூபக்ருவின் யூகம் தவறாகவில்லை. எதிரிகள் வந்து பேசிச் சென்று மூன்று நாட்கள்கூட ஆகியிருக்கவில்லை. அஸத், கத்ஃபான், அப்ஸ், திப்யான், பக்ரு கோத்திரங்கள் படை திரண்டனர். தீஹுஸ்ஸா என்ற பகுதியில் முகாம் அமைத்துக் கொண்டு குறிப்பி்ட்ட அளவிலான படை வீரர்கள் முதலில் மதீனாவை நோக்கிக் கிளம்பினர்.

நகருக்கு வெளியே இருந்த காவல் படைவீரர்கள் கிளம்பி வரும் ஆபத்தை உடனே கலீஃபாவுக்குத் தெரிவிக்க, "அங்கேயே இருங்கள். இதோ வந்துவிட்டேன்" என்று கலீஃபா அபூபக்ரும் இன்னும் சில போர் வீரர்களும் உடனே அங்கு விரைந்தனர்.

போன வேகத்தில் அப்படியே முஸ்லிம்களைத் துவட்டி துவம்சம் செய்துவிட்டு மதிய உணவை மதீனாவில் சாப்பிடலாம் என்று படு அலட்சியத்துடன் வந்த எதிரிகள் மதீனா நகருக்கு வெளியே அத்தகைய பாதுகாப்பையும் முஸ்லிம் போர்வீரர்களையும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மதீனா நோக்கிச் செல்லும் சாலையெங்கும் திறமையான முஸ்லிம் போர்வீரர்கள் காவல் நிற்க, துவங்கியது சண்டை! நிறைய நேரம் எடுக்கவில்லை. சற்று நேரத்திலேயே எதிரிகளை விரட்ட ஆரம்பித்துவிட்டனர் முஸ்லிம்கள். மிரண்டு திரும்பி ஓடஆரம்பித்தனர் எதிரிகள். விடாமல் அவர்களை விரட்டிக் கொண்டு சென்றது முஸ்லிம் படை. வெற்றிச் செய்தியை எதிர்நோக்கி முகாமிட்டுக் காத்திருந்த எதிரிப் படையின் இதர போர்வீரர்கள், மூச்சிரைக்க தங்களது படை ஓடிவருவதையும் அவர்களை முஸ்லிம் படையினர் ஆவேசமாய்த் துரத்திக் கொண்டு வருவதையும் பார்த்துத் திடுக்கி்ட்டு எழுந்தனர். தங்களுக்கு பலத்த உயிர்ச்சேதம் ஏற்படப் போகிறது என்று தெளிவாகத் தெரிந்தது.

உடனே ஒரு காரியம் செய்தார்கள். தங்களிடமிருந்த முரசுகளையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு ஆவேசமாய்க் கொட்ட ஆரம்பித்தார்கள். பயங்கரமான முரசு ஒலிகள். அத்திட்டம் சரியாக வேலை செய்தது. முஸ்லிம்களின் ஒட்டகங்கள் அவ்வொலியில் மிரண்டு திக்குத் தெரியாமல் ஓடத் துவங்கின. அவற்றையெல்லாம் சமாளித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குள் முஸ்லி்ம் படைகளுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. ஒருவழியாய் உயிரிழப்பு எதுவும் இல்லாமல் மதீனா திரும்பியது முஸ்லிம்களின் படை.

இதனிடையே முஸ்லிம்களை எப்படியும் வென்றுவிடுவோம் என்று தப்புக்கணக்குப் போட்டிருந்த எதிரிகள் முன்னமேயே தில்-கிஸ்ஸா பகுதியிலிருக்கும் தங்கள் நண்பர்களுக்குத் தகவல் அனுப்பியிருந்தனர். “முஸ்லிம்கள் நோஞ்சான் நிலையில் இருக்கிறார்கள். வேறொரு வழிபிடித்துக் கிளம்பி வாருங்கள். பிய்த்து எறிந்துவிடலாம்" அந்த தில்-கிஸ்ஸா மக்களும் ஒரு படை திரட்டிக் கொண்டு மதீனா நோக்கி வர ஆரம்பித்தனர். இந்தப் படை அணியும் மதீனாவை எளிதாய்க் கைப்பற்றி விடலாம், பெரிதாய் எதிர்ப்பெல்லாம் இருக்காது என்று ஏகப்பட்ட நம்பிக்கையுடனும் அலட்சியத்துடனும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு விதி வேறுவிதமாய் மதீனாவில் காத்திருந்தது.

‘தம்பி உடையான படைக்கு அஞ்சான்’ என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு தம்பிக்குப் பதிலாய் அண்ணன் தம்பிகள் பத்துப்பேர் கிடைத்தால்? அபூபக்ரு ரலி படை திரட்டினார். வலப்பக்க அணிக்குத் தலைமை நுஃமான் இப்னு முகர்ரின். இடப் பக்க அணிக்கு அவர் சகோதரர் அப்துல்லா இப்னு முகர்ரின். காலாட் படைக்குத் தலைமை மற்றொரு சகோதரர் ஸுவைத் இப்னு முகர்ரின். மதீனாவிலிருந்து கிளம்பியது இந்தப் படை. எதிரிகளை அவர்கள் சற்றும் எதிர்பாராமல் தாக்கும் திட்டம் தீட்டப்பட்டது. எனவே முஸ்லிம் படையினர் படு கவனமாய் எச்சரிக்கையுடன் சப்தமே எழுப்பாமல் மிக மிக அமைதியாய் முன்னேறிச் சென்று கொண்டிருந்தனர்.

இருள் முற்றிலும் விலகாத விடியற்காலை நேரம்.

தங்களது அருகில் நெருங்கிவிட்ட முஸ்லிம் படைகளின் குசுகுசுப்பான சப்தம்கூட கேட்காத நிலையில் இருந்த எதிரிகளை பாய்ந்து தாக்கியது முஸ்லிம் படை. “என்ன, ஏது" என்று உணர்வதற்குள் வாள்கள் சுழன்றன; ஈட்டிகள் பாய்ந்தன; அம்புகள் பறந்தன. எதிரிகளின் உடல்களை சரமாரியாகத் துளைக்க ஆரம்பித்தன.

பொழுது விடிந்து சூரியன் எழுவதற்குள் எதிரிகள் சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டனர். அவர்களில் பலர் களத்தை வி்ட்டு ஓட, மீதமிருந்தவர்களை முஸ்லிம் படையினர் துரத்த, தில்-கிஸ்ஸாவரை எதிரிகளை ஓடஓட விரட்டினர் முஸ்லிம்கள். இறுதியில் எதிரிகளின் கால்நடைகள் முஸ்லிம்கள் வசமாயின.

பின்னர், அந் நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் ஒரு படைப்பிரிவை அப்பகுதியில் காவலுக்கு நிறுத்திவிட்டு கலீஃபா அபூபக்ரு மற்ற வீரர்களுடன் மதீனா திரும்பினார். இந்நிலையில் அலீ (ரலி) முக்கியமான ஆலோசனையொன்றை அறிவித்தார். கலீஃபா இத்தகைய அபாய நடவடிக்கைகளில் தாமே நேரடியாக ஈடுபடாமல் மற்ற தோழர்களைத் தளபதியாக அனுப்ப வேண்டும் என்ற அவரது ஆலோசனையை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டு அதை அபூபக்ருவிடம் எடுத்துச் சொல்லித் தடுத்தனர்.

அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட அபூபக்ரு, காலீத் பின் வலீத், இக்ரிமா பின் அபூஜஹ்ல் போன்ற திறமையான பதினொரு தளபதிகள் தலைமையில் பல பகுதிகளுக்கும் படையனுப்பினார். அவர்களில் ஒருவர் நுஃமானின் சகோதரர் ஸுவைத் இப்னு முகர்ரின். அவரது தலைமையில் ஒரு படைப்பிரிவு திஹாமா பகுதிக்குச் சென்று போரிட்டது. பின்னர் முர்தத்கள் அனைவரின் மீதும் ஏககாலத்தில் முழுவீச்சில் போர் தொடுக்கப்பட்டு அவர்களது பிரச்சினை ஒருவழியாய் முடித்து வைக்கப்பட்டது.

oOo

கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் ஆட்சிக் காலத்தில் பாரசீகர்களுடன் காதிஸிய்யாவில் நிகழ்வுற்ற யுத்தம் சில பல அத்தியாயங்களுக்கு நீளும் தனி வரலாறு. சுவையான வீர வரலாறு.

பாரசீகம் நோக்கிச் சென்ற முஸ்லிம் படைகளும் போர்களும் பற்றி முன்னர் ஆங்காங்கே பார்த்துக் கொண்டே வந்தோம். பாரசீகத்தினுள் முஸ்லிம் படைகள் நுழைய ஆரம்பித்த நாளாய் பற்பல போர்கள். அவற்றுள் மிக முக்கியமான ஒன்றுதான் இந்த காதிஸிய்யா. பாரசீகர்களின் முதுகெலும்பை ஒடித்த யுத்தம் அது.

அப்போரில் முஸ்லிம் படைகளுக்குத் தலைவராக ஸஅத் பின் அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹுவை நியமித்தார் உமர். பிரம்மாண்டமான பாரசீகப் பேரரசின் வலிமையான படைகளை எதிர்கொள்ள முஸ்லிம் படைகள் தயாராகிக் கொண்டிருந்தன. அப்பொழுது ஸஅதுக்கு உமரிடமிருந்து கடிதமொன்று வந்தது.

“அவர்களுடைய வலிமையைப் பற்றிக் கேள்விபட்டு, அவர்களிடமுள்ள போர்த் தளவாடங்களின் பிரம்மாண்ட எண்ணிக்கையைக் கண்டு தயங்கவோ அஞ்சவோ வேண்டாம். அல்லாஹ்வின் உதவியை நாடுங்கள்; அவனிடமே நம்பிக்கைக் கொள்ளுங்கள். அறிவிலும் துணிவிலும் சிறந்த நம் தோழர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து அந்த அரசனிடம் அனுப்பிவைத்து அவனை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலில் அழைப்பு விடுங்கள்"

கலீஃபா உமரின் ஆலோசனைப்படி ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களில் முதல் ஆள் நுஃமான் இப்னு முக்கர்ரின். மற்றவர்கள் பி்ஸ்ரிப்னு அபீரஹ்ம் அல் ஜுஹானி, ஹம்லா இப்னு ஜுவை அல்-கினானி, ஹன்ளலா இப்னு அர்-ரபீஉத்-தமீமி, ஃபுராத் இப்னு ஹிப்பான் அல்-அஜாலி, அதிய் இப்னு ஸுஹைல், அல்-முகீரா இப்னு ஸராரா.

மேற்கொண்டு ஏழுபேரை உமர் தேர்ந்தெடுத்து ஸஅதுக்குத் தகவல் அனுப்பினார். அவர்கள் அதாரிதிப்னு ஹாஜிப் அத்-தமீமி, அல்-அஷ்அத் பின் ஃகைஸ் அல்-கின்தி, அல்-ஹாரித் இப்னு ஹஸன் அத்-துஹாலி, ஆஸிம் இப்னு அம்ருத்-தமீமி, அம்ரிப்னு மஅதிகரிப் அஸ்-ஸுபைதி, அல்-முகீரா இப்னு ஷுஅபா அத்-தகஃபி, அல்-முஸன்னா இப்னு ஹாரிதா அஷ்-ஷைபானி.

முஸ்லிம்கள் சென்று சந்தித்துப் பேசவிருப்பது அக்கால வல்லரசு ஒன்றின் பேரரசனிடம். எனவே படுகவனமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அது. அறிவிலும் துணிவிலும் மதி நுட்பத்திலும் மிகச் சிறந்தவர்கள் அவர்கள். இந்தப் பதினாலுபேர் அடங்கிய முஸ்லிம்களின் பிரதிநிதிக் குழுவிற்கு அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைவராக நியமிக்கப்பட்டார். பாரசீகத் தலைநகர் மதாயின் வந்தடைந்தார்கள் அவர்கள். யஸ்தஜிர்தின் பேரவையில் சந்திப்பு நிகழ்ந்தது.

முன்னர் போர்களில் ஏற்பட்டிருந்த தோல்விகளால் ஏற்கெனவே உஷ்ணத்தில் இருந்தான் அவன். மொழிபெயர்ப்பாளரை அருகில் வைத்துக் கொண்டு அவர்களுடன் உரையாடினான். “உங்களை இங்கு வரவழைத்தது எது? எங்களது நிலத்திற்குள் இந்தளவு படையெடுத்து ஊடுருவ உங்களை ஊக்குவித்தது எது? நாங்கள் வேறு பல வேலைகளில் மும்முரமாய் இருப்பதால் எங்களைத் தாக்கலாம் என்று உங்களுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிட்டதோ?"

நுஃமான் தன்னுடன் வந்திருந்த தோழர்களை நோக்கி, “நீங்கள் விரும்பினால் நான் இவனிடம் பேசுகிறேன். அல்லது நீங்கள் யாராவது அவனிடம் பேச விரும்பினால் முன் செல்லவும்"

“நீங்கள் பேசுங்கள் நுஃமான்" என்றவர்கள் யஸ்தஜிர்திடம் இவர் பதிலுரைப்பார் என்று நுஃமானைக் காட்டினர்.

அல்லாஹ்விற்கு நன்றியும் புகழும் உரைத்துவிட்டு, அவன் தூதர் மீது ஸலாவத் சொல்லிவிட்டுப் பேச ஆரம்பித்தார் நுஃமான்.

“அல்லாஹ் எங்கள் மீது இரக்கம் கொண்டான்; தூதர் ஒருவரை அனுப்பினான். அவர் எங்களுக்கு நேர்மையைக் கற்றுத் தந்தார்; அதை ஒழுகும்படி கட்டளையிட்டார். தீமைகளைப் பற்றி எச்சரித்தார்; அதையெல்லாம் நாங்கள் கைவிட எங்களுக்குக் கட்டளையிட்டார். மிக சொற்ப காலத்தில், அல்லாஹ் எங்களது ஏழ்மையை நீக்கி வளம் அளித்தான்; கீழ்நிலையிலிருந்த எங்களுக்கு கீர்த்தி அளித்து உயர்த்தி வைத்தான்; எங்கள் மத்தியில் நிலவிய விரோதத்தையும் போரையும் சகோதரத்துவமாகவும் கருணையாகவும் மாற்றிவிட்டான்.

“அவர் அழைப்பிற்கு இணங்கி நாங்கள் அடிபணிந்து நடந்தால் அல்லாஹ் எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்பேறு அளிப்பான் என்று சத்தியவாக்கு அளித்துள்ளார். சில கோத்திரங்கள் ஏற்றுக் கொண்டனர்; வேறு சிலர் மறுத்துவிட்டனர். அவரை எதிர்த்த அரபு மக்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழைக்க எங்களுக்கு உத்தரவிட்டார். முதலில் அந்த அரபு மக்களிடமிருந்து எங்கள் பணியைத் துவக்கினோம். தொடக்கத்தில் சிலர் விருப்பமின்றி இம்மார்க்கத்தில் இணைந்து அதன்பிறகு இதிலுள்ள உன்னதத்தை உணர்ந்து தங்களது முடிவு தவறில்லை என்று பெருமகிழ்வடைந்தார்கள். வேறுசிலர் துவக்கத்திலேயே விருப்பத்துடன் இணைந்து அனைத்து நன்மைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.

“பின்னர் அண்டை தேசத்து மக்களை அழைக்க அவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். நீங்கள் எங்களது அண்டை நாட்டுக்காரர்கள். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறோம். நல்லொழுக்கத்தைப் பண்பாய் போற்றும் மார்க்கம் இது. அதை நோக்கியே மக்களை ஊக்குவிக்கிறது. கீழ்மை, அற்பத்தன்மையை எல்லாம் இம்மார்க்கம் நிந்திக்கிறது. அவற்றிலிருந்து விலகிவிடும்படி இது நம்மை எச்சரிக்கிறது. இதை ஏற்றுக் கொள்பவர்கள் அநீதியிலிருந்தும் ஏகஇறை நம்பிக்கையற்ற இருட்டிலிருந்தும் விலகி, நீதியும் ஒளிவாய்ந்த இறைநம்பிக்கையும் உள்ள இடத்தை வந்தடைவார்கள்.

“நீங்கள் எங்களது இஸ்லாமிய அழைப்பை ஏற்றுக் கொண்டால், அல்லாஹ்வின் வேதத்தை தங்களிடம் விட்டுச் செல்வோம். நீங்கள் அதற்குப் பாதுகாப்பாளன் ஆவீர்கள். அதன் சட்டதிட்டப்படி நடப்பது உங்களது கடமையாகிறது. உங்களது காரியங்களை நீங்களே நிர்வகித்துக் கொள்ளலாம். எங்களது தலையீடு இருக்காது.

“நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் நிர்ணயிக்கப்படும் ஜிஸ்யா வரியை நீங்கள் எங்களுக்குச் செலுத்த வேண்டும். நாங்கள் உங்களுக்கு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பளிப்போம்.

“அதையும் மறுத்தால், போர் ஒன்றே தீர்வு"

இவை அத்தனையையும் கேட்ட யஸ்தஜிர்து கோபத்தில் துடித்தான். ‘யார் இவர்கள்? எங்கிருந்து கிளம்பி வந்தார்கள்? நாம் யார்? நம் அந்தஸ்து என்ன? பெருமை என்ன? கீர்த்தி என்ன? யாரைப் பார்த்து என்ன பேச்சு இது?’

யஸ்தஜிர்து பேசினான்:

“உலகத்திலேயே உங்களைப் போன்ற கீழ்த்தரமான மக்கள் இருந்ததில்லை. குறைந்த எண்ணிக்கையில் இருந்தீர்கள். துண்டு துண்டாய்ப் பிரிந்து போய்க் கிடந்தீர்கள். ஏழ்மையில் உழன்றுக் கொண்டிருந்தீர்கள். எங்களது மாநில ஆளுநர்களுக்குக் கீழ்படிந்து கிடந்தீர்கள். அவர்களும் உங்களை இலகுவாய் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒருகாலத்தில் பாரசீகத்தை எதிர்த்து நிற்பதையெல்லாம் கனவிலும் நீங்கள் நினைத்துப் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது நீங்கள் எங்களை வீழ்த்திவிடலாம் என்று நினைத்தால் அது உங்களுடைய மிகப் பெரிய முட்டாள்தனமாகும்"

சற்று நிதானப்பட்டவன், பரிதாபப்பட்டவனாக, “வறுமையினால் துன்பப்படுகிறீர்கள் என்றால் சொல்லுங்கள். உங்களது நிலைமை சீரடையும்வரை நாங்கள் உண்ண உணவளிப்போம். உடுத்த உடை அளிப்போம். உங்களின் தலைவர்களைக் கௌரவிப்போம்; உங்களை கனிவுடன் நடத்தி நிர்வாகம் செய்ய ஓர் அரசனையும் நியமிப்போம்"

முகீரா இப்னு ஸராரா எழுந்து நின்றார். “நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். சொல்லப்போனால் அதைவிட மோசமான நிலையிலிருந்தோம். அதெல்லாம் கடந்த காலம்" என்று சொல்லிவிட்டு பின்னர் அல்லாஹ் தன் கருணையினால் எப்படித் தங்களை உயர்த்தினான் என்பதையெல்லாம் விவரித்து, இறுதியில் நுஃமான் சொன்னதையே மீண்டும் கூறினார்.

அதற்குமேல் அவனால் பொறுக்க முடியவில்லை.

“பிரதிநிதிக் குழு கொல்லப்படக் கூடாது என்ற நடைமுறை மட்டும் இல்லாதிருப்பின் உங்களையெல்லாம் நான் கொன்றிருப்பேன். உங்களுக்கெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. திரும்பிச் செல்லுங்கள்" ம்ஹூம், போதாது; வெறுமனே இவர்களை அதட்டி அனுப்பினால் போதாது. அவமானப்படுத்த வேண்டும்! அவர்களது முகத்தில் மண் பூச வேண்டும் என்று கதறியது அவன் மனம்.

“மூட்டை நிறைய மண் எடுத்து வாருங்கள்"

உடனே எடுத்து வந்தார்கள் சேவகர்கள். “இவர்களது குழுவில் உயர்குடி வகுப்பினன் எவனோ அவனது முதுகில் மணல் மூட்டையை ஏற்றி வைத்து, மக்களெல்லாம் காணும் வகையில் இவர்களை மதாயின் நகரை விட்டே துரத்துங்கள்"

விரைந்து எழுந்தார் ஆஸிம் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு. "இந்தக் குழுவில் உயர்குடியைச் சேர்ந்தவன் நானே" என்று பரிசு வாங்கச் செல்பவர்போல் அந்த மணல் மூட்டையைப் பெருமிதமாய் ஏற்றுக் கொள்ள, மக்களெல்லாம் பரிகாசமும் நையாண்டியுமாய்ப் பார்க்க அந்தத் தூதுக்குழு தங்களது படை முகாமிற்குத் திரும்பியது. படைத் தலைவர் ஸஅத் இப்னு அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு ஆவலுடன் கேட்டார், “சென்ற காரியம் என்ன ஆயிற்று?"

"மனம் மகிழுங்கள்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ், அவர்களது அரசாங்கத்தின் சாவியை நம்மிடம் ஒப்படைத்துவிட்டான்" என்று மணல் மூட்டையை இறக்கி வைத்தார் ஆஸிம்.

அதன் பிறகு ருஸ்தம் தலைமையில் மிகப் பெரும்படை கிளம்பி வந்ததும், மகா உக்கிரமான போர் காதிஸிய்யாவில் நிகழ்வுற்றதும் அதில் முஸ்லிம்கள் அசகாய வெற்றி பெற்றதும் இறுதியில் ருஸ்தம் கொல்லப்பட்டதும் அவையெல்லாம் அத்தியாயம் அத்தியாயமாய் விரியும் தனி வரலாறு.

oOo


தொடர்ந்து பாரசீகத்தின் உள்ளே சிறிது சிறிதாக முன்னேறிச் சென்று கொண்டேயிருந்தன முஸ்லிம் படைகள். எப்படியாவது ஒருகட்டத்தில் முஸ்லிம் படைகளைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும், அவர்களை வென்று பாரசீகத்திலிருந்து விரட்டிவிட வேண்டும், என்ன செய்யலாம்? என்று கவலையுடன் யோசித்துக் கொண்டேயிருந்தான் யஸ்தஜிர்த்.

“அடுத்தக்கட்டப் போருக்குத் தயாராகுங்கள்!" என்று அறிவித்து விட்டான். ரம்ஹொர்முஸ் என்ற நகரில் ஹுர்முஸான் தலைமையில் பாரசீகப் படைகள் தயாராயின. இச்செய்தியை ஸஅத் பின் அபீவக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு, கலீஃபா உமருக்குத் தகவல் தெரிவிக்க, மதீனாவிலிருந்து போர்க் கட்டளைகள் விரைந்து வந்தன.

பஸ்ரா நகரிலிருந்து ஸஹ்லிப்னு அதிய்யி தலைமையில் ஒரு படையை அனுப்பி வைக்கும்படி அபூமூஸா அல்அஷ்அரீக்குக் கட்டளையிடப்பட்டது. அதே நேரத்தில் கூஃபா நகரிலிருந்து அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் ஒரு படை புறப்பட வேண்டும். இந்த இருபடைகளும் ரம்ஹொர்முஸ் நோக்கி முன்னேற வேண்டும். இருபடைகளும் ஓர் இடத்தில் இணைந்து, அந்த ஒருங்கிணைந்த படைக்கு, நபியவர்களோடு பலபோர்களில் கலந்துகொண்ட அபூஸப்ரா இப்னு அபீருஹ்ம் அல்ஆமிரீ தலைமை ஏற்க வேண்டும்.

அதன்படி கூஃபா நகரிலிருந்து அந்நுஃமான் தமது படையுடன் ரம்ஹொர்முஸ் நோக்கிப் புறப்பட்டார்.

இந்தச் செய்திகளையெல்லாம் அறிந்த ஹுர்முஸான் திட்டம் தீட்டினான். பஸ்ரா நகரிலிருந்து வரும் படை நுஃமானின் படையுடன் ஒன்றிணைந்துவிட்டால் முஸ்லிம்களது பலம் அதிகமாகிவிடுமே என்று அவனுக்குக் கவலை. நுஃமானின் படையை வழியிலேயே சந்தித்து முறியடித்துவிட்டால்? காரியம் எளிதாகிவிடும்! எனவே அவன் தனது படைகளுடன் நுஃமானின் படையை எதிர்கொள்ளக் கிளம்பிச் சென்றான். அர்பக் எனும் பகுதியில் இரு படைகளும் மூர்க்கமாய் முட்டிக்கொண்டன. கடுமையான யுத்தம் மூண்டது. அந்தப் போரில் நுஃமான் ஹுர்முஸானை வென்றார். போர் தோல்வியில் முடிந்ததும் அங்கிருந்து தப்பித்த ஹுர்முஸான் ரம்ஹொர்முஸுக்குத் திரும்பாமல் தஸ்தர் எனும் நகருக்கு ஓடினான். பின்தொடர்ந்தது நுஃமானின் படை.

பின்னர் தஸ்தர் வெற்றி கொள்ளப்பட்டதும் அப்போரில் மற்றொரு தோழரின் வீரசாகசமும் முன்னர் படித்தது நினைவிருக்கிறதா? அவர் முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ.

oOo

காதிஸிய்யாப் போருக்குப்பின் நான்கு ஆண்டுகள் கழித்து மற்றொரு பெரும் போர் நிகழ்ந்தது. அது நஹாவந்த் போர். அந்த நான்கு ஆண்டுகளும் பாரசீகப் படைகளைத் துரத்தித் துரத்தி, மூச்சுவிடக்கூட அவர்களுக்கு அவகாசம் அளிக்காமல் போருக்குமேல் போர் புரிந்து நகருக்கு மேல் நகரங்களைக் கைப்பற்றி, பாரசீகத்தின் வெகுஉள்ளே ஊடுருவி விட்டிருந்தனர் முஸ்லிம்கள். அந்தத் தோல்விகளும் அவமானமும் பாரசீகர்களை அளவிலாத கோபத்திலும் விரக்தியிலும் ஆழ்த்தியிருந்தன.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத யஸ்தஜிர்தோ மீண்டும் பெரும் படையொன்றைத் திரட்டினான். இலட்சத்து ஐம்பதினாயிரம் வீரர்கள் அடங்கிய பெரும்படை. அவர்களுக்கு ஃபைரஸான் என்பவனைத் தளபதியாக நியமித்தான். போர்க் களமாக நஹாவந்த் குறிக்கப்பட்டது.

இதனிடையே கஸ்கர் எனும் நகருக்கு அந்நுஃமானை ஆளுநராக நியமித்திருந்தார் கலீஃபா. உமர், தம் ஆளுநர்களைத் தேர்ந்தெடுக்கும் லாவகமே தனிக் கட்டுரை சமாச்சாரம். அதில் முக்கியமான ஒரு விஷயம் - உமர் ஒருவரை ஆளுநராய் நியமிக்கிறார் என்றால் அது அவரது தரத்திற்கான மாபெரும் சான்று.

ஒருகாலத்தில் ஒரு கோத்திரத்திற்கே தலைவராக இருந்தவர் நுஃமான். மக்களை ஆண்டவர்; தலைமைக்குரிய பெருமிதங்களை அனுபவித்தவர். பின்னர் இஸ்லாத்தில் நுழைந்தபின் ஓய்வு ஒழிச்சலற்ற ஓட்டம், இடைவிடாத போர் என்றாகிப்போனது வாழ்க்கை. அவையெல்லாம் எத்தகைய களைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்? இந்நிலையில் அதிகாரமும் பதவியும் கிடைத்தால் அதைப் பெற்றுக்கொண்டு, இறுமாப்பெல்லாம் இல்லாது போகட்டும், ‘உஸ்... அப்பாடா..' என்று சாய்ந்து அமர்ந்து கொண்டு சேவகர்களை ஏவல் புரிந்து நிர்வாகம் பார்த்துவிட்டு, சொகுசை அனுபவித்திருக்க வேண்டுமல்லவா? இதென்ன பதவி, அந்தஸ்து, சொகுசு என்று அதெல்லாம் நுஃமானுக்குக் கொஞ்சம்கூட சரிப்பட்டு வரவில்லை. தம் மன உளைச்சலை உமருக்குக் கடிதம் எழுதினார்:

‘எனக்கும் கஸ்கருக்குமான உவமை என்ன தெரியுமா? இளைஞன் ஒருவன் அலங்காரமும் நறுமணமும் பூசிக் கொண்டு மினுமினுக்கும் ஓர் அழகிய பரத்தையின் பக்கத்தில் இருப்பதைப் போன்றுள்ளது என் நிலை. உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். அல்லாஹ்விற்காக என்னை எனது இந்தப் பதவியிலிருந்து விடுவித்து முஸ்லிம் படைகளிடம் அனுப்பிவையுங்கள்"

அவரின் இறையச்சத்தை, அவரின் இந்த மனோபாவத்தை இதைவிடச் சிறப்பாய் வேறெந்த வரிகள் விவரித்துவிட முடியும்? நாமெல்லாம் வாழ்க்கையில் எதை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? அவர், ரலியல்லாஹு அன்ஹு!

நஹாவந்த் போர் ஆயத்தச் செய்தி மதீனா வந்தடைந்த நேரத்தில்தான் நுஃமானிடமிருந்தும் கடிதம் வந்து சேர்ந்தது. உமர் தம் ஷூரா குழுவினருடன் ஆலோசித்தார். அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் முஸ்லிம் படைகள் பாரசீகர்களை எதிர்கொள்ள வேண்டும் என்று முடிவானது.

பதிலெழுதினார் உமர். “நஹாவந்த் செல்லுங்கள். அங்குள்ள நம் படைக்குத் தலைமையேற்றுக் கொள்ளுங்கள்"

அப்படையின் குழுத் தலைவர்களாய் ஹுதைஃபா இப்னுல்-யமான், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹும் நியமிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் படையில் முப்பதாயிரம் வீரர்கள் இருந்தனர். இலட்சத்து ஐம்பதினாயிரம் வீரர்களை எதிர்த்து முப்பதாயிரம் வீரர்கள்! நுஃமான் தலைமையில் அந்தப் படை நஹாவந்த் வந்தடைந்தது.

நஹாவந்த் பலமான அரண் கொண்ட நகர். உயர்ந்த நெடிய சுவர். ஆழமான அகழி. தவிர குதிரைகள் முன்னேற முடியாத வகையில் கூர்மையான இரும்பு முள்கள் நிலங்களில் பரப்பி மறைத்து வைக்கப்பட்டன. சுவர்களின் மேலே திறமையாய் அம்பெய்யும் பாரசீக வீரர்கள் தகுந்த இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

விரைந்த முன்னேறிவந்த முஸ்லிம்களின் குதிரைப்படை இரும்பு முள் குத்தி, நிலைகுத்தி நின்றுவிட்டது. திறமையான தற்காப்பு நடவடிக்கை அது. நகரின் அரண் சுவரை நெருங்கவிடாமல் தடுக்கும் இரும்பு முள்கள், அதைத் தாண்டி அகழி என்று இவற்றையெல்லாம் சமாளித்து சில முஸ்லிம் வீரர்கள் சுவரருகே நெருங்கினால் மேலிருந்து அம்புகள் மழையாய்ப் பொழி்ந்து தாக்கின.

பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாமல் இப்படியே இரண்டு நாள் கழிந்தது. படைத் தலைவர்களையெல்லாம் அழைத்து ஆலோசனை நிகழ்த்தினார் நுஃமான். அப்பொழுது துலைஹா இப்னு குவைலித் அல்-அஸதி ஒரு யோசனையை முன்வைத்தார்.

“முஸ்லிம்களின் குதிரைப்படை பாரசீகர்களுடன் சண்டையைத் துவங்க வேண்டும். அவர்கள் தூண்டப்பட்டு நகரின் சுவருக்குப் பின்னாலிருந்து வெளிவருவார்கள். அவர்களைக் கண்டதும் பயந்து பின்வாங்குவதுபோல் குதிரைப்படை பின்வாங்க வேண்டும். அதைக் கண்டால் பாரசீகர்கள் என்ன செய்வார்கள்? ‘விடாதே! துரத்து!’ என்று பின் தொடர்ந்து துரத்த ஆரம்பிப்பார்கள். அது அவர்களை அவர்களது அரணை வி்ட்டு, தொலைவிற்கு இட்டு வந்துவிடும். முஸ்லிம்களின் படையொன்று அங்கு மறைந்திருக்க வேண்டும். அப்பொழுது பாரசீகர்களை மறைந்துள்ள முஸ்லிம்களின் படை திடீரென்று வந்து தாக்கத் துவங்கினால் மீண்டும் தங்களது அரணுக்குள் ஓடிவிட முடியாத நிலை பாரசீகர்களுக்கு ஏற்படும். முடித்துவிடலாம்"

மற்றொரு குறிப்பில், "இரவு கவிழ்ந்ததும் தீப்பந்தம் ஏற்றுங்கள். எதிரியின் கவனத்தைக் கவரும்படி நிறைய தீப்பந்தங்கள் எழட்டும். அதை ஏந்திக்கொண்டு வேகமாய்ப் பின்வாங்குங்கள். பயந்து பின்வாங்கும் முஸ்லிம்களைப் பிடித்து விடவேண்டும் என்று ஆசையில் அவர்கள் வெளியே ஓடிவருவார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் அடிநாதம், எதிரிப்படைகளை அவர்களது அரணுக்கு வெளியே தந்திரமாக வரவழைப்பது.

அந்த யோசனை நுஃமானுக்குப் பிடித்திருந்தது. உடனே காரியங்கள் நடைபெறத் துவங்கின. தனது படையை மூன்று குழுவாகப் பிரித்தார் நுஃமான்.

முதல் பிரிவுக்குத் தலைவராக காஃகா இப்னு அம்ரு. இப்பிரிவு குதிரைப்படை. இவர்களது பணி எதிரிகளின் அரண் சுவரைத தாக்கி போரைத் துவங்க வேண்டும்.

இரண்டாவது பிரிவுக்கு நுஃமான் தலைவர். இந்தப் படையினர் தகுந்த இடங்களில் பதுங்கி மறைந்திருக்க வேண்டும். எதிரிகள் நெருங்கியதும் களத்தில் குதித்து அவர்களுடன் நேருக்கு நேரான போர் தொடுப்பது என்று முடிவானது.

மூன்றாவது பிரிவு மற்றொரு குதிரைப் படை. இவர்கள் முஸ்லிம் படைகளிலேயே வலிமையான வீரர்கள். இவர்களும் தூரத்தில் மறைந்திருக்க வேண்டும். எதிரிகள் நெருங்கியதும் அவர்களின் இருபுறமிருந்தும் தாக்குதல் தொடுக்க வேண்டும்.

"எல்லோரும் அவரவர் இடங்களில் பதுங்கிக் கொள்ளவும். நான் உத்தரவு அளிக்கும்வரை சண்டையைத் துவங்கக் கூடாது" என்று கட்டளையிட்டார் நுஃமான். நபியவர்களிடம் பயின்ற தோழர் அவர்.

“நான் மூன்று முறை தக்பீர் உரைப்பேன். முதல் தக்பீரில் தயாராகி விடுங்கள். இரண்டாவது தக்பீருக்கு உங்கள் ஆயுதங்களை உருவிக் கொள்ளுங்கள். மூன்றாவது தக்பீரில் நாம் அனைவரும் ஒரே நேரத்தில் எதிரிகளின் மீது பாய்வோம்"

காஃகா (ரலி) தம் வேலையைச் சிறப்பாக ஆரம்பித்தார். மிகுந்த சாதுரியத்துடன் காரியமாற்றினார். தமது குதிரைப் படையுடன் அவர் பின்வாங்குவதைக் கண்ட பாரசீகர்கள் உற்சாகமடைந்தார்கள். "பிடியுங்கள் அவர்களை" என்று தாங்கள் நிலத்தில் பரப்பி வைத்திருந்த இரும்பு முள்களை தாங்களே அகற்ற ஆரம்பித்தனர். குதிரைகளில் ஏறி முஸ்லிம்களைத் துரத்த வேண்டுமல்லவா? முஸ்லிம் வீரர்களுக்குத் தங்களது குதிரைப் படையைச் செயலிழக்க வைத்த இரும்பு முள் பிரச்சினை அகன்றது.

‘ஹோ’வென்று கடலலைபோல் பாரசீகப் படைகள் பாய்ந்து வெளியே ஓடிவந்து முஸ்லிம்களைத் துரத்த ஆரம்பித்தன. நன்றாக அவர்களை முன்னேறி வரவி்ட்டுக் காத்திருந்தது மறைந்திருந்த முஸ்லிம்களின் படை. அவர்கள் எளிதில் பின்வாங்கி அரணுக்குள் நுழைந்து கொள்ள முடியாத தூரத்தில் வந்ததுதான் தாமதம், உரத்து எழுந்தன மூன்று தக்பீர்கள். களத்தில தொம் தொம்மென்று வந்து குதித்தனர் நுஃமான் தலைமையிலான முஸ்லிம் படையினர். அதேநேரம் எதிரிகளின் இருபுறமிருந்தும் மறைந்திருந்த குதிரைப் படையினர் பாய்ந்தோடி வந்தனர். பின்வாங்குவதைப்போல் ஓடிக்கொண்டிருந்ததே காஃகா தலைமயிலான படை, அது சரேலெனத் திரும்பி நின்று எதிரிகளை நேருக்குநேர் நிமிர்ந்து பார்த்தது.

துவங்கியது மகா யுத்தம். எங்கிருந்து வந்தார்கள், எப்படி வந்தார்கள் என்று தெரியாமல் நாலாபுறமும் வசமே சூழப்பட்டனர் பாரசீகர்கள். என்ன ஏது என்று அடுத்து யோசிப்பதற்குள் வாள்கள் சுழல ஆரம்பித்தன. வீறுகொண்ட வேங்கையைப்போல் களத்தில் சுழன்று கொண்டிருந்தார் நுஃமான். வரலாறு பத்திரமாய்ப் பதிவு செய்து வைத்துள்ள மிக உக்கிரமான போர் அது. சரசரவென எதிரிகளை வெட்டி வீழ்த்த ஆரம்பித்தது முஸ்லிம்களின் படை. ஆட்டுக்கல்லில் அகப்பட்ட தானியத்தின் நிலைதான் அன்று பாரசீகர்களின் நிலை. உயிரற்ற உடல்கள் சரமாரியாக நிலத்தில் வீழ்ந்து கொண்டிருந்தன. குருதி பெருக்கெடுத்து ஓடியது. நிலமெங்கும் சடலங்கள். தப்பித்து ஓடியவர்களும் தாங்கள் வெட்டி வைத்திருந்த அகழியிலேயே வீழ்ந்து மடிந்தனர். துணியைக் கிழித்தெறிவதுபோல் அந்தப் போரில் பாரசீகப் படை கிழித்தெறியப்பட்டது. பாரசீகப் படைத் தலைவன் ஃபைரஸானை காஃகா பின்தொடர்ந்து சென்று பிடிக்க, அவன் கதை முடிந்தது.

குதிரையின்மேல் அமர்ந்து நுஃமான் போரிட்டுக் கொண்டிருக்க ஓர் அசந்தர்ப்ப தருணத்தில் அவரது குதிரை தடுமாறி விழுந்துவிட்டது. கீழே விழுந்த அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் ரலியல்லாஹு அன்ஹு அங்கேயே அப்பொழுதே வீரமரணம் அடைந்தார். அதைக் கண்டுவிட்ட நுஃமானின் சகோதரர் உடனே ஒரு காரியம் செய்தார். நுஃமானின் கையிலிருந்த கொடியை தாம் ஏந்திக் கொண்டு, நுஃமானின் சடலத்தை ஒரு துணி கொண்டு மறைத்து அதை முஸ்லிம்கள் காணாமல் மறைத்து விட்டார்.

போரெல்லாம் முடிந்து வெற்றியடைந்தவுடன்தான் முஸ்லிம்கள் தங்களின் படைத் தலைவரைத் தேட ஆரம்பித்தனர். நுஃமானின் சகோதரர் துணியை விலக்கி, “இதோ உங்கள் படைத்தலைவன். வெற்றியைத் தரிசிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கிய அல்லாஹ் வீரமரணத்தையும் அவருக்குப் பரிசளித்துள்ளான்" என்று சத்தியம் சொன்னார்.

கலீஃபா உமருக்கு செய்திகள் அறிவிக்கப்பட்டன. நுஃமானின் மறைவைக் கேட்டு “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" என்றவர் கண்ணீர்விட்டு அழுதார். வேறு யாரெல்லாம் வீரமரணம் அடைந்தார்கள் என்று விசாரிக்க, பட்டியல் தெரிவிக்கப்பட்டது.

“முஸ்லிம்கள் மத்தியில் அவர்கள் பரிச்சயமில்லாதவர்களாக இருக்கலாம். அதனாலென்ன? அவர்களுக்கு வீரமரணத்தைப் பரிசாய் அளித்த அந்த ஒருவனுக்கு அவர்களின் முகமும் மரபும் வமிசமும் நன்றாகவே தெரியும். உமர் அறிந்தால் என்ன, அறியாவிட்டால் என்ன?" என்றார் உமர்.

சொகுசெல்லாம் புறந்தள்ளி, வாழ்வெல்லாம் போராக, ஒவ்வொரு கணமும் இறைப்பணியாக வாழ்ந்து வீரமரணம் எய்தி, இவ்வுலகிலிருந்து மறைந்தார் அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின்.

ரலியல்லாஹு அன்ஹு!

இன்னும் http://www.satyamargam.com வருவர், இன்ஷா அல்லாஹ்.

படக் கருவியும் படைக் கலனே!

மத்தியக் கிழக்கு என்றழைப்பார்கள் அந்தப் பகுதியை.

உலகப் பிரச்சினைகளின் மையமாக இருப்பதாலும், பெரும்பாலான யுத்தங்களுக்கு கிழக்காக இருப்பதாலும் அவ்விதம் சொல்லப்படுவதும் ஒருவகையில் பொருத்தமே. அங்கே நாடற்றவர்களின் நாடான பஃலஸ்தீனில் வயது பேதமின்றி கையில் கிடைத்த ஆயுதங்களை ஆக்ரமிப்பாளர்களுக்கெதிராக ஏந்தியிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். அதே நாட்டின் மாய் மஸ்ரி (Mai Masri) என்கிற பெண்மணி ஏந்தியதோ படக்கருவியை!
மத்தியக் கிழக்கின் ஒவ்வொரு காலநிலையையும் உலகமே உன்னித்துப்பார்க்க இவருடைய ஆவணப்படங்கள் ஜன்னலைப் போல் அமைந்து வந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.

கடந்த 30 ஆண்டுகளாக லெபனானில் இஸ்ரேல் நிகழ்த்திய அத்துமீறல்களை; லெபனானின் உள்நாட்டு யுத்தங்களை; 2000ல் பஃலஸ்தீன் கண்ட ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சியை; - இப்படி ஒன்றையும் விடாமல் ஆவண(ப்பட)மாக்கி வைத்திருந்தாலும், மாய் மஸ்ரியுடைய நோக்கம் யுத்தத்தையும் அதன் இடிபாடுகளையும் படம் பிடிப்பதல்ல; மாறாக, அக்கட்டத்தில் இருக்கிற (அ) இல்லாமற் போகிற மனிதத்தன்மை, நாளாந்திர வாழ்க்கை, தினசரி இழப்புகள், கவலைகள், தோன்றி மறையும் (அ) மறைந்து தோன்றும் நம்பிக்கைகள் ஆகியவையே இவருடைய கோணம்.

யுத்தத்துடனும், யுத்தத்தின் போதும் அவற்றின் இருமுனைகளில் உள்ள பாமர மக்களின் அசந்தர்ப்பமான சூழல்களை மாய் வெளிப்படுத்துகிறார். ஓய்வு ஒழிச்சலின்றி தான் காணும் அகதி முகாம்கள், அரசியல் மாற்றங்கள், நம்பிக்கையையும், பயத்தையும் வெளிப்படுத்தும் சின்னஞ்சிறுசுகள், பெண்கள் என்று பதிவு செய்கிற மாய் தம் வாழ்க்கை மிகுந்த பொறுமையும் அலைக்கழிப்பும் நிரம்பியது. ஆனாலும் மாய் நம்பிக்கை இழப்பதாக இல்லை.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற படவிழா ஒன்றில், மாய் மஸ்ரியுடையதும், அவர் கணவர் லெபனீய இயக்குநர் ழான் ச்சாமோன் உடையதுமான படங்கள் திரையிடப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டன.

“நீண்ட காலமாக ஆக்ரமிப்பில் உள்ள ஊரிலிருந்து வருகிறேன்” என்ற மாய் மேலும் சொன்னார்: “நான் (இப்போது) வாழ்ந்து வருவதும், ஒரு யுத்த பூமியில் (லெபனானில்) தான். அரசியல் படுகொலைகள், உள்நாட்டு கலகங்கள், எழுச்சி முழக்கங்கள் எல்லாம்தான் என் வாழ்வினூடாகக் கண்டு வருகிறேன்”.

மத்தியக் கிழக்கின் சிறந்த ஆவணப்பட இயக்குநராகத் திகழும் மாய் ஃபலஸ்தீனியத் தந்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர். 1982ல் இஸ்ரேல் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் லெபனானின் ஷாட்டிலா நகரில் ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் அரக்கத்தனத்துடன் கொத்துக்கொத்தாய் செய்த கொலைகளை, வன்புணர்வுகளைப் பார்த்திருக்கிறார்.

“அந்தக் கொடுஞ்சம்பவத்துக்குப் பின்னர் நாங்கள் தெருக்களில் சென்றபோது எங்கும் துயரமும் ஓலமுமாயிருந்தது. வாழ்வின் மிக மோசமான தருணம் அது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் கோரமுகம். அப்போதுதான், திடீரென்று ஒன்றுமறியா குழந்தைகளின் சிரிப்பொலி கேட்டேன். குண்டுகள் துளைத்திருந்த சுவர்களுக்குப் பின்னாலிருந்து நம்பிக்கைக் கீற்று மிளிர அந்தப் பிஞ்சுகளின் முகங்கள் தெரிந்தன. இறந்து கிடந்தவர்களெல்லாம் வாழத் திரும்பிவிட்டதைப் போன்றிருந்தது எனக்கு! அப்போது தான் படங்கள் எடுப்பதைத் தீர்மானித்தேன்” என்கிறார் மாய். “ அதன் மூலம் தான் ஆறுதல் தேடிக்கொள்கிறேன்”

“தொடக்கத்தில் 1980களில் படமெடுப்பது அத்தனை எளிதாக இல்லை. உளவாளிகளையும் (போர்)விமானங்களையும் பார்க்கும் பார்வையினையே படக்கருவிகள் மீதும் மக்கள் வைத்திருந்தார்கள். ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சி நிலையின் போது அந்த அச்சம் அகன்றது. ஒரு புரிந்துணர்வு அரும்பியது”

தன்னுடைய படங்களின் மூலம் வரும் லாபத்தை அகதி முகாம்களிலுள்ள குழந்தைகளின் படிப்புதவித் தொகையாகத் தந்து உதவி வருகிறார் மாய். “குழந்தைகளே மாற்றத்தின் விசை! அவர்கள் தன்னியல்பானவர்கள். சார்பற்றவர்கள், கற்பனாசக்தி நிரம்பியவர்கள்”

ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞியாக இருந்த காலங்களையும் நினைவு கூர்கிறார் மாய். “படம் எடுப்பவளாக, இப்போது நான் எதிர்கொள்ளும் அபாயங்களும் மிக யதார்த்தமானவை. துப்பாக்கிச்சூடுகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள், அதுவுமில்லாமல் கலவரக்காரர்கள் இவற்றினூடே தான் என் காமிராவும் பயணிக்க வேண்டியிருக்கிறது”

“இந்தக் காமிரா கூட ஓர் ஆயுதம் தான்” தனது படக்கருவியைச் சுட்டிக்காட்டுகிறார் மாய்.

“என்னிடமில்லாத வலிமையை இதன் மூலமே நான் பெறுகிறேன்” என்கிற மாய் ஒரு ஆவணப்பட இயக்குநராக மாற்று வழிகளையும் யோசித்துவைத்திருக்கிறார். தனது சொந்த ஊரான நபுலஸ்ஸுக்கு முதன்முறை மாய் சென்றிருந்தபோது அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பதுங்கிப் பதுங்கி பாதுகாப்பாக படம் பிடித்தேன். சூழலுக்கேற்ப நடந்துகொண்டேன். ஆவணப்படத்துக்கான கதைக்கருவை யோசிக்கத் தேவையேயில்லாமல் அங்கே நிலைமையே அதுவாக இருந்தது”

தனது ஆவணப்பட ஆக்கங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஃபலஸ்தீன் பற்றிய பிம்பத்தையே குறிப்பிடுகிறார் மாய். “உதுமானிய ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, கடைசியாக இஸ்ரேலின் ஆக்ரமிப்பு என்று காலாகாலத்துக்கும் அது நிழல்தேசமாகவே இருக்கிறது – அநாதரவானவர்களின் பூமியாக; மக்களே இல்லாமல் போகும் தேசமாக!

“ஒவ்வொரு ஃபலஸ்தீனியரிடத்திலும் ஒரு திரைப்படக் கரு இருக்கிறது. அவரவர்க்கு நிகழ்ந்த சம்பவங்களையும், செவியுற்றதையும் ஒவ்வொருவரும் மனதில் திரும்பத்திரும்ப ஓட்டிப்பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்” என்று மாய்-யின் கூற்று தான் எத்தனை உன்னிப்பானது!

விருது பெற்ற மாய் மஸ்ரியுடைய ஆவணப்படங்கள் யாவும் உண்மையின் தேடலாய் அமைந்தவையே. ஆனால் அவை யுத்தம் பற்றியதல்ல. மிக மோசமான சூழலிலும் இளைஞர்களின் கனவுகள், வாழத் தலைப்படும் நம்பிக்கைகள், அன்பின் சிரிப்பு ஆகியவற்றையே அப்படங்கள் பேசுகின்றன.



“யுத்தம் மக்களிடம் அவர்களின் நல்ல பக்கத்தையும், மோசமான தன்மையையும் வெளிக்கொணர்வதாக அமைகிறது” என்கிற மாய் மஸ்ரியுடைய இந்தப்படங்கள் ஏற்படுத்திய விளைவுகள் ஆச்சரியமானவை. ஒரு ஜப்பானிய இசையமைப்பாளர் இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு அகதிமுகாம் குழந்தைகளுக்கு இசைக்கருவிகள் அனுப்ப விரும்பினார். இவருடைய “33 நாள்கள்” படம் பார்த்த ஒரு இஸ்ரேல் தம்பதியினர் கண்கலங்கினார்கள். இதே படத்தை ஆம்ஸ்டர்டாமில் பார்த்த இஸ்ரேலிய பெண் இயக்குநர் ஒருவர் பித்துபிடித்தாற் போல மழையில் இரவு முழுக்க அலைந்து திரிந்திருக்கிறார். இப்படம் தந்த உந்துதலில் அதே இயக்குநர் “அர்னாவின் குழந்தைகள்” என்கிற திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இத்தாலியில் ஓர் ஊமைச் சிறுவன் “33 நாள்கள்” படத்தைப் பார்த்துவிட்டு, குமுறிப் பேசத் தொடங்கியிருக்கிறான்.

இப்படியாக, தனது போராயுதமான படக்கருவியால் உயிர்களைப் போக்கிடச் செய்யாமல் இதயங்களைத் தட்டி எழுப்புவதை மாய் செய்து வருகிறார் எனும் போது அது பாராட்டப்படவேண்டிய செயலல்லவா!


கட்டுரை: இப்னு ஹம்துன...
www.satyamargam.com

இஸ்லாத்தை ஏன் பின்பற்ற வேண்டும் - திரு. ஜாகிர் நாய்க் ?

கேள்வி:


உலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது - ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மட்டும் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!.


பதில்: 1.


இஸ்லாமிய மார்க்கத்திற்கும் - பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:


எல்லா மதங்களும் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையேப் பின் பற்ற வேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையேப் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதோடு நின்று விடாமல் - தனிமனிதனிடமும் - முழு மனித சமுதாயத்திடமும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்துகிறது.


இஸ்லாம். நன்மையை ஏவி - தீமையைத் தடுக்கக் கூடிய செயலை செய்யும் போது மனித சமுதாயத்தில் இருக்கும் மனிதத் தன்மையையும், சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்கும் நடைமுறைச் சிக்கலையும் கணக்கில் கொள்கிறது.


மனிதர்களை படைத்த இறைவனால் வழிகாட்டப்பட்ட மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் - தீனுல் ஃபித்ர் - அதாவது இயற்கையான மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.


2. உதாரணம்:


மனிதர்கள் திருட்டை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்வதோடு, சமுதாயத்திலிருந்து திருட்டை எப்படி ஒழிக்க முடியும் என்பத தீர்வையும் வைத்திருக்கிறது.


அ. இஸ்லாம் திருட்டை ஒழிக்கும் வழிவகைகளை நமக்கு கற்றுத் தருகிறது.


எல்லா முக்கிய மதங்களும் திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிக்கின்றன. இஸ்லாமும் அதனைத்தான் போதிக்கின்றது. அப்படியெனில் மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன?. திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிப்பதோடு நின்று விடாமல் - நடைமுறையில் திருடர்களே இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்றும் வழிகாட்டுகின்றது இஸ்லாம்.


ஆ. இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் தர்மம் வழங்க வலியுறுத்துகிறது.


இஸ்லாம் 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை ஒவ்வொரு இஸ்லாமியர் மீதும் கடமையாக்கியுள்ளது. இஸ்லாமியர்களில் யாரெல்லாம் 85 கிராம் தங்கம் அல்லது அதற்குரிய விலை அளவில் சேமித்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டரை சதவீதம் அளவிற்கு 'ஜக்காத்' என்னும் மார்க்க வரி வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு பணக்காரரும் தமக்குள்ள சொத்துக்களில் இரண்டரை சதவீதம் தர்மமாக கொடுத்தால், உலகத்தில் ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் போகும். இவ்வுலகில் ஓரு மனித உயிர் கூட பசியால் மரணிக்கக் கூடிய நிலை இருக்காது.


இ. திருடுபவனுக்கு தண்டனையாக அவனது கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது.


திருடினாhன் என்று நிருபிக்கப்பட்டவனின் கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் ஐந்து ஸுரத்துல் மாயிதாவின் 38வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது:


'திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.' (அல்-குர்ஆன் 5 : 38)


'ஆ!. இருபதாம் நூற்றாண்டில் திருடியவனுக்கு கையை வெட்டுவதா?. இஸ்லாம் கருணையில்லாத, காட்டுமிராண்டித் தனமான மார்க்கம்' என்று இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் சொல்லலாம்


ஈ. இஸ்லாமிய சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டிருந்தால் - சரியான பலன் கிடைத்திருக்கும்:


உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் மிக முன்னேறியுள்ள நாடாக இருக்க வேண்டும். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக அமெரிக்காதான் குற்றங்களும், திருட்டுக்களும், கொள்ளைகளும் நிறைந்துள்ள நாடாகவும் இருக்கின்றது.


அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், அதாவது எல்லா செல்வந்தர்களும் ஜக்காத் என்னும் தர்மம் வழங்க வேண்டும் (ஒவ்வொரு வருடமும் தமக்குள்ள சொத்துக்களில் 2.5 சதவீதம் தர்மமாக கொடுத்தல்) என்ற சட்டமும், திருடப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையாக அவர்களது கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற சட்டமும் அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் திருட்டுக் குற்றம் குறையுமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதே போன்றுதான் இருக்குமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்குமா?.


கண்டிப்பாக அமெரிக்காவின் திருட்டுக் குற்றங்கள் குறையத்தான் செய்யும். இஸ்லாம் வகுத்துள்ள கடுமையான சட்டங்கள் இருப்பதன் காரணத்தால் மேலும் திருட வேண்டும் என்று எண்ணமுள்ளவர்களும் திருடுவதற்கு தயங்கும் நிலைதான் உருவாகும்.


இன்றைக்கு உலகில் இருக்கும் திருட்டுக் குற்றங்களுக்கு தண்டனை என்ற பெயரில் கைகளை வெட்டுவோம் எனில் இன்று உலகில் லட்சக் கணக்கானோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற உங்களது வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். - ஆனால் நான் இங்கே வலியுறுத்த விரும்பும் கருத்து என்னவெனில் திருடுவோருக்கு தண்டனையாக கைகள் வெட்டப்படும் என்கிற சட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே திருட்டுக் குற்றங்கள் குறைய ஆரம்பித்துவிடும் என்பதைத்தான்.


திருட்டுத்தொழிலை வழக்கமாகக் கொண்டிருக்கும் திருடர்கள் கூட, திருடுவதற்கு முன்பு மிகவும் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். திருடுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டாலே - திருட்டு தொழில் செய்பவர்கள் பலர் திருடுவதை விட்டு விடுவார்கள். அதனையும் மீறி ஒரு சிலர் மாத்திரம் திருட்டுத் தொழிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் பிடிபட்டால் அவர்களின் கைகள் மாத்திரம் வெட்டப்படும். இவ்வாறு ஒரு சிலரின் கைகள் வேண்டுமெனில் வெட்டப்படலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


இவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியவையும், மனித சமுதாயத்திற்கு பலன்களை தரக் கூடியவையும்தான்.


மூன்றாவது உதாரணம்:


இஸ்லாம் பெண்கள் மானபங்கபடுத்தப்படுவதையும், வல்லுறவு கொள்ளப்படுவதையும் கடுமையான குற்றங்கள் என தடை செய்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய ஆடை முறைகளை பின்பற்ற சொல்வதோடு, வல்லறவு குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படுபவருக்கு கடுமையான தண்டனைகளையும் வலியுறுத்துகிறது.


அ. வல்லுறவு கொள்வதையும், மானபங்கப் படுத்தப்படுவதையும் தடுக்கும் முறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.


பெண்களோடு வல்லுறவு கொள்வதையும், பெண்கள் மானபங்கப்படுத்தப் படுவதையும் எல்லா மதங்களும் கொடுமையான பாவம் என்றுதான் சொல்லுகின்றன. இஸ்லாமிய மார்க்கமும் அதைத்தான் போதிக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மற்றுமுள்ள மதங்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?. பெண்களை மதிக்க வேண்டும் அறிவுரை கூறுவதோடு நின்று விடாமல் அல்லது பெண்களை மானபங்கப்படுத்துவதை வெறுத்துத் தள்ளுவதோடு நின்று விடாமல், வல்லுறவு கொள்வது மகாப்பெரிய பாவம் என்று சொல்வதொடு நின்று விடாமல், மேற்படி குற்றங்கள் சமுதாயத்தில் இல்லாமல் செய்வது எப்படி என்று வழிகாட்டவும் செய்கிறது.


ஆ. இஸ்லாம் வலியுறுத்தும் ஆண்களுக்கான ஆடைமுறையும் - நடை முறையும்.


இஸ்லாம் மனிதர்கள் முறையாக அணிய வேண்டிய ஆடைகளை (ஹிஜாப்) வலியுறுத்துகின்றது. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான 'ஹிஜாப்' பற்றி அறிவிப்பதற்கு முன்பாக, ஆண்களுக்கான 'ஹிஜாப்' பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் '(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்:


அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 24 : 30)


ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.


இ. பெண்களுக்குரிய 'ஹிஜாப்'


அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் '(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர, (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்.....ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.' என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.


ஹிஜாப் அணிவதற்கான வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.


நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.


ஈ. ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:


பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.


நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.


பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.


உ. இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:


இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.


கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். உடல் உறுப்புகளை மறைப்பதைவிட அதிகம் வெளியில் தெரியும்படியான ஆடைகளை பெண்கள் அணிவது - ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.


ஊ. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.


இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். ஒருசிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன்.


தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?.


நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து அவனைக் கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லுறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.


எ. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.


உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்காவில் 1,02,555 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை தெரிவிக்கிறது.


நடந்த வல்லுறவு குற்றங்களில்; 16 சதவீதம் குற்றங்கள் மாத்திரமே புகார் செய்யப்பட்டதாகவும் மேற்படி அறிக்கை தெரிவிக்கிறது. அப்படியெனில் அமெரிக்காவில் 1990 ஆம் ஆண்டில் மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்கள் எத்தனை என்று அறிய மேற்படி தொகையை (102,555) 6.25 கொண்டு பெருக்கினால் மொத்த வல்லுறவு குற்றத்தின் எண்ணிக்கை 640,968 ஆகும். மேற்படி கிடைக்கும் தொகையை 365 நாட்களை கொண்டு வகுக்கும் போது 1990 ஆம் ஆண்டு மாத்திரம் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நடந்த வல்லுறவு குற்றங்களின் எண்ணிக்கை 1,756 ஆகும்.


அதன் பிறகு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு மாத்திரம் 307,000 வல்லுறவு குற்றங்கள் புகார் செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறையின் மற்றொரு பிரிவான குற்றம் இழைக்கப்பட்டோர் பற்றி தேசிய அளவில் ஆய்வு செய்யும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.


மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்களில், 31 சதவீதம் மாத்திரமே புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் மேற்படி அறிக்கை கூறுகிறது. அவ்வாறெனில் 1996 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த மொத்த வல்லுறவு குற்றங்கள் (307,000 ஒ 3.226) 990,322. ஆகும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு 32 வினாடிக்கு ஒரு வல்லுறவு குற்றம் நிகழ்ந்திருக்கிறது.


மற்றுமுள்ள வருடங்களில் அமெரிக்கர்கள் இன்னும் கூடுதலாக வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 10 சதவீதம் பேர்கள்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக 1990ஆம் ஆண்டு எஃப். பி. ஐ. வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 1.6 சதவீதம்தான்.


மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம்பேர் அவர்கள் செய்த வல்லுறவு குற்றம் நீதி மன்றத்தின் முன்பு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு அர்த்தம் 0.8 சதவீதம் குற்றவாளிகள்தான் நீதி விசாரனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் 125 பேர் வல்லறவு குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டனை வழங்கப்படுவது ஒரேயொரு குற்றத்திற்கு மாத்திரம்தான். இவ்வாறான சட்டங்கள் இருந்தால் மனிதர்களில் பலர் வல்லுறவு குற்றம் புரிவதை ஒரு தொழிலாகவே வைத்திருப்பார்கள்.


இவ்வாறு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டபின் 1 வருடத்திற்கும் குறைவான சிறை தண்டனையைத்தான் பெறுகின்றனர் என மேற்படி அறிக்கை மேலும் கூறுகிறது. இவ்வளவுக்கும் ஒரு வல்லுறவு குற்றம் புரிந்த குற்றவாளிக்கு அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும். முதன் முறையாக வல்லறவு குற்றம் புரிந்த ஒருவனுக்கு கடுமையான தண்டனைகள் இன்றி நீதிபதி விடுதலை செய்யலாம் என்பது அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின் விதி. கற்பனை செய்து பாருங்கள்!. ஒரு மனிதன் 125 முறை வல்லுறவு குற்றம் செய்தாலும், அவன் தண்டனை பெறுவதற்குரிய சாத்தியக்கூறு ஒரேயொரு முறைதான். அந்த ஒரு முறையிலும் நீதிபதியின் கருணையினால் விடுதலை செய்யப்படலாம். அல்லது ஒரு வருடத்திற்கும் குறைந்த சிறை தண்டனையைப் பெறலாம்.


ஏ. இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால் சரியான பலன்களைப் பெறலாம்:


அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார்.


அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும்.


மேற்கண்டவாறு இஸ்லாமிய சட்டங்கள் அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் வல்லுறவு குற்றங்கள் குறையத்தான் செய்யும்.


4. மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு, இஸ்லாமிய மார்க்கம் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய தீர்வுகளை கொண்டுள்ளது.


இஸ்லாம் உலக வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகும் . ஏனெனில் அதன் கொள்கைகள் நடைமுறைக்கு ஒத்து வராத வாய் வார்த்தைகளை கொண்டதல்ல. மாறாக இஸ்லாமிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. தனி மனித அளவிலும், முழு மனித சமுதாய அளவிலும் இஸ்லாமிய மார்க்கம் சிறந்த தீர்வுகளை கொண்டுள்ளது.


இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் சிறந்த மார்க்கமாக திகழ்வதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியக் கூறான அதன் கொள்கைள்தான். இஸ்லாமிய மார்க்கம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேசத்தினருக்கோ சொந்தமானதல்ல. மாறாக இஸ்லாமிய மார்க்கம் அகிலம் முழுவதற்கும் சொந்தமானது.


நன்றி: நீடூர் இன்போ மற்றும் ஒற்றுமை
மேலும் கேள்வி பதில்களுக்கு : http://ottrumai.net/IslamicQA/index.htmFrom: அலாவுதீன் Add to Contacts

From: Mohamed Shahjahan
Date: 2011/3/7




பிரார்தனைகளுடன்...
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தும் 90 கோடி Computer-களுக்கு !

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (IE) எனும் உலாவியை பயன்படுத்தும் 90 கோடி Computer-களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் (MS) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (IE) உலாவியை பயன்படுத்துவோரின் Computer-யிலிருந்து அவர்களது ரகசிய விவரங்களும், சுய விவரங்களும் திருடப்பட்டுள்ளதாக டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.



புதிதாக பரவி வரும் வைரஸால் வின்டோஸ் XP (SP3), வின்டோஸ் விஸ்டா, வின்டோஸ் 7, வின்டோஸ் சர்வர் 2003 மற்றும் வின்டோஸ் சர்வர் 2008 (R2) ஆகிய வின்டோஸ் இயங்குதளங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.



இருந்த போதிலும் Mozilla Fire Fox (பயர் பாக்ஸ்), Google Chorme மற்றும் Safari போன்ற உலாவிகளை பயன்படுத்தி வரும் பயனாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளது.



வின்டோஸ் இயங்குதளத்திற்கு உள்ளேயே மட்டும் இந்த வைரஸ் பரவுவதாகவும், இதனைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது, குறிப்பிடத்தக்கது.


As received and Thanks to Brother :Shajahan Abdul Aziz Hussain [mailto:Hussians@rcyanbu.gov.sa]

உணவு !

5376. (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.
Volume :6 Book :70

5377. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) (அவர்களுக்கு) அவர்களின் (முதல் கணவர் மூலம் பிறந்த) புதல்வரான உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்
நான் ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் உணவு உண்டேன். தட்டின் ஓரங்களிலிருந்து எடுத்து உண்ணத் தொடங்கினேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு' என்று கூறினார்கள்.
Volume :6 Book :70

5379. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தையற்காரர் ஒருவர் தாம் தயாரித்த உணவுக்காக (விருந்துக்கு) அழைத்தார். நானும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள் உணவுத் தட்டின் நாலா பாகங்களிலும் சுரைக்காயைத் தேடுவதை கண்டேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.7
Volume :6 Book :70

5429. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் அது தடுத்துவிடுகிறது. எனவே, பயணி தாம் நாடிச் சென்ற நோக்கத்தை முடித்துக் கொண்டுவிட்டால், உடனே தம் வீட்டாரை நோக்கி விரைந்து வரட்டும்!
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.51

5431. ஆயிஷா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பி வந்தார்கள்

5445. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்

கைத்தொலைபேசியிலிருந்து மற்றுமொரு கைத்தொலைபேசிக்கு எப்படி இலவசமாக பேசுவது ?

2011-03-03 17:15:53
http://www.kingtamil.com
இன்று எல்லோருடத்திலும் GPRS ,கமரா, 3G என பல பல வசதிகள் கொண்ட கைத்தொலைபேசிகள்தான் அதிகம் காணப்படுகின்றது. அதுபோல் ஒரு சிம் கார்ட் வாங்கினாலும் சரி ரீலோட் பண்ணினாலும் சரி 30MB மொபைல் இன்டர்நெட் இலவசம் அல்லது மாதம் ஒருமுறை 10MB இன்டர்நெட் இலவசம் என பல நாட்டு தொலைத்தொடர்பு கம்பனிகள் வழங்கிக்கொண்டுருக்கின்றார்கள் அதுமட்டுமல்லாமல் இடத்திற்க்கு இடம் Wi-fi யும் இலவசமாக கிடைக்கின்றன.

இவ் வசதியை பயன்படுத்தி நாம் எப்படி கைத்தொலைபேசியிலிருந்து மற்றுமொரு கைத்தொலைபேசிக்கு இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்துவது என்று பார்ப்போம்.

முதலில் இந்த http://www.nimbuzz.com/en இணயத்தளம் சென்று கணக்கொன்றை ஆரம்பித்து நிம்பஸ் மென்பொருளை உங்கள் கைத்தொலைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள் (நிறுவ முன் கைத்தொலைபேசியின் மொடல் இலக்கத்தை சரியாக தெரிவு செய்துகொள்ளவும்) நிறுவும்போது மெமரி கார்டில் இடம் குறைவாக இருந்தால் கைத்தொலைபேசியின் Games பகுதியில் நிறுவலாம். பின்னர் திறந்ததும் உங்களுடைய பயணப்பெயர் மற்றும் கடவுச்சொல்லால் உள்நுழைந்து Google talk, Yahoo, Skpe, MSN/Windows live messenger மற்றும், Facebook ஊடாக உலகெங்கும் இலவசமாக பேசி மகிழலாம்.

இது போல அதனில் கொடுக்கபட்டுள்ள SIP ஆப்சன் ஊடாக voip முறை அழைப்புகளையும் ஏட்படுத்தமுடியும்.

மற்றும் இது போன்ற சேவையை fring ம் வழங்கிக்கொண்டிருக்கின்றது: http://www.fring.com/default.php

தொழுகையில் ஏற்படும் மறதி !

1232. 'உங்களில் ஒருவர் தொழத் தயாரானால் அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே இரண்டு ஸஜ்தாச் செய்யட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்


1226. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'என்ன விஷயம்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்' என ஒருவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்
தொழுகையில் ஏற்படும் மறதி
1224. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.
அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி(ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள்.


1225. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.
தொழுகை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள். அதன்பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.


1228. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துடன் தொழுகையை முடித்தபோது துல்யதைன்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா?' எனக் கேட்டார். 'துல்யதைன் கூறுவது உண்மைதானா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, மக்களும் 'ஆம்' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பிந்தைய இண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்து, பின் (அதிலிருந்து) எழுந்தார்கள். (தஷஹ்ஹுத் ஓதவில்லை.)
இப்னு அல்கமா கூறுகிறார்: நான் முஹம்மத் இப்னு ஸிரீனிடம் ஸஜ்தா ஸஹ்வில் தஷஹ்ஹுத் உண்டா? எனக் கேட்டேன். அதற்கவர், அபூ ஹுரைரா(ரலி) உடைய அறிவிப்பில் தஷஹ்ஹுத் இல்லைதான் என்றார்'

கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol

80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

கொலஸ்ட்ராலின் தன்மைகள்

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.

கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.

நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.

எது நல்ல கொலஸ்ட்ரால்?

LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர்.

ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)


கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.

Total Cholesterol <—>200 mgm%
மொத்த கொலஸ்ட்டிரால்

LDL Cholesterol <—>100 mgm%
குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

VLDLCholesterol <—>30 mgm%
மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

Triglycerides <130 mgm%
முக்கிளிசரைடுகள்

HDLP Cholesterol <50 mgm %
மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்


மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.

குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.


கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்

பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)

எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.

ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.

இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.

கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.

பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.

ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.

அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.

ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.

இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.


ஒமேகா 3 உள்ள உணவுகள்

மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்

ஒமேகா 6 உள்ள உணவுகள்

சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.


எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?

நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.


கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்
நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:

· சீரான உடற்பயிற்சி

· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.

· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.

· மது அருந்துவதைத் தவிர்ப்பது

· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.

· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.

· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .

· யோகாசன பயிற்சி செய்வது,

· தியானப் பயிற்சி செய்வது .