Saturday, May 28, 2011

தஜ்ஜால் - ஒரு பார்வை



 
உலகம் ஒருநாள் அழியும் என்று நம்புவது முஸ்லிமான அனைவரின் மீதும் கடமை என்பதை விட
யுக முடிவு நாளை நம்பினால் தான் அவர் முஸ்லிம் என கொள்ளலாம் .,நிற்க அத்தைகைய முடிவு நாள் பற்றி எண்ணற்ற வேத வரிகளும் ,தூதர் மொழிகளும் உள்ளன ., அந்நாளுக்கு முன்பாக ஏற்படக்கூடிய செயல் பாடுகள் பலவற்றை அண்ணல் அவர்கள் பட்டியலிட்டுள்ளார்கள். அவைகளை குறித்து இனி காண்போம்,இறை நாடினால் ...
 

தஜ்ஜால்
கீழ்திசை நாடுகளில் ஒன்றிலிருந்து புறப்படுவான். வலக் கண்குருடாயிருக்கும். இரு கண்களுக்கிடையே காஃபிர் - இறைமறுப்பாளன் என்றுஎழுதப்பட்டிருக்கும். 
தஜ்ஜால் என்பவன் மகா பொய்யன். இவன் உலக அழிவுக்குமுன் தோன்றுவான்.இவனுக்கு மஸீஹுத் தஜ்ஜால் (Anti Christ) என்று மற்றொரு பெயரும் உண்டு.
தஜ்ஜால் தன்னை இறைவன் என்று சொல்லிக்கொள்வான். அவன் செய்து காட்டும் அற்புதங்களைக் கண்டு ஏமாந்து, மக்கள் பலர் அவன் வலையில் சிக்கிவிடுவார்கள். உலக நாடுகளையெல்லாம் சுற்றிவிட்டு, பைத்துல் முக்தஸை (ஜெருசலேம்) நோக்கி அவன் செல்லும்போது, இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் வானிலிருந்து இறங்கி வந்து அவனைக் கொல்வார்கள். 
தஜ்ஜாலின் வருகையும், அவனது செயல்களும் ஈமானை இழக்கச் செய்யும் மிக ஆபத்தான விஷயம் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

'ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டது முதல் அந்த (மறுமை) நாள் வரும்வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் எதுவும் ஏற்படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அவர்கள், ''அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன். அறிந்து கொள்ளுங்கள்! மஸீஹுத் தஜ்ஜால் வலக் கண் குருடனாவான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும்'' என்று கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
''எல்லா இறைத்தூதர்களும் தம் சமூகத்தினருக்கு ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்)பற்றி எச்சரிக்காமல் இருந்ததில்லை! அந்தப் பொய்யனுடைய இருகண்களுக்கிடையே காஃப் ஃப ரா (காஃபிர்) என்று எழுதப்பட்டிருக்கும்'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) 
தஜ்ஜால் - அவன் தன்னுடன் சொர்க்கம் மற்றும் நரகம் போன்றதைக் கொண்டுவருவான். அவன் எதைச் சொர்க்கம் என்று கூறுகிறானோ, அதுதான் (உண்மையில்)நரகமாக இருக்கும். (புகாரி, முஸ்லிம்)
தஜ்ஜால் (யுக முடிவு நாளுக்குமுன்) புறப்பட்டு வருவான். அவனுடன் நீரும்நெருப்பும் இருக்கும், மக்களுக்கு நீராகக் காட்சி தருவது (உண்மையில்)கரிக்கும் நெருப்பாகும். மக்களுக்கு நெருப்பாகக் காட்சி தருவது(உண்மையில்) குளிரான சுவை நீராகும். உங்களில் யார் அந்த இடத்தை அடைகிறாரோ அவர் நெருப்பாகக' காட்சியளிப்பதில் விழட்டும்! ஏனெனில் அதுநல்ல சுவை நீராகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

''மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது.அவற்றின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர்கள் அணிவகுத்து அவனைத்தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம்)

அவனை பற்றி சுருக்கமாய் ...
அவன் குழந்தை இல்லாத மலடன். 
ஒரு கண் ஊனமுற்று மற்றொரு கண் நிலைகுத்திய நிலையில் பச்சை நிறக் கண்ணாடி போன்று பார்வை உடையவன்.

குட்டையானவன், குண்டானவன்.
அதிக இடைவெளி உள்ள கால்களைக் கொண்டவன். 
மழை பொழிய வைப்பான்,
மலை போன்ற உணவுக்குவியல்களை வைத்திருப்பான்.
பிறவிக் குருடு மற்றும் வெண் குஷ்டம் போன்ற நோய்களை குணப்படுத்துவான்.

ஒரு இறைநம்பிக்கையாளரைக் கொன்றுவிட்டு மீண்டும் அவரை உயிர்ப்பிப்பான்.உயிர்ப்பித்த அவரை மறுமுறையும் அவனால் கொல்ல இயலாது.

மேயச் செல்லும் கால்நடைகளை ஒரே பகலில் கொழுக்க வைப்பான். பூமியில் புதையல் உள்ள இடங்களை அறிந்திருப்பான்.

தானே இறைவன் என வாதிட்டு மக்களை ஈமான் - நம்பிக்கை கொள்ளச்செய்வான்.
பாலஸ்தீனத்திலுள்ள லுத்து எனும் நகரத்தின் தலைவாயிலருகே வைத்து நபி ஈஸா (அலை) அவர்கள் அவனைக் கொல்வார்கள்.


அவனிடமிருந்து பாதுகாப்புபெற...
''உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக அல்கஹ்ஃபு அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒவ்வொரு தொழுகையிலும் தஜ்ஜாலிடமிருந்து பாதுகாப்புபெற வேண்டிய பிரார்த்தனைகளயும் நபி (ஸல்) அவர்கள் நமக்குக்கற்றுத்தந்திருக்கிறார்கள்...
''உங்களில் ஒருவர் தமது (தொழுகையில்) இரண்டாவது அமர்வை முடிக்கும்போதுநரகவேதனை, கப்ர் - மண்ணறை வேதனை. வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனை,மஸீஹுத் தஜ்ஜாலுடைய தீங்கு ஆகிய நான்கில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,(முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா) 
''அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக்க மின் அதாபில் கப்ரி, வ அவூதுபிக்க மின் ஃபித்னதில் மஸீஹுத் தஜ்ஜாலி, வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாதி, அல்லஹும்ம இன்னீ அவூதுபிக்க மினல் மஃஸமி வல் மஃஹ்ரமி'' என்ற துஆவைநபி (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஓதுபராக இருந்தார்கள். (புகாரி,முஸ்லிம், அபூதாவூத், நஸயீ)

பொருள்: இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன், தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவங்கள் புரிவது, கடன் தொல்லை ஆகியவற்றை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
இதே கருத்தில் இன்னொரு பிரார்த்தனை.

''அல்லாஹும்ம இன்னாவூதுபிக்க மின் அதாபி ஜஹன்னம், வ அவூதுபிக்க மின் அதாபிர் கப்ர், வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹுத் தஜ்ஜாலி, வ அவூதுபிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்,'' என்ற துஆவாவை குர்ஆனில் உள்ள சூராவை கற்றுத் தருவது போன்று நபி (ஸல்) அவர்கள்கற்றுத்தந்தார்கள். (முஸ்லிம்)
பொருள்: இறைவா! நரக வேதனையை விட்டும் உன்னிடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம். கப்ர் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்,தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனையை விட்டும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

தஜ்ஜாலின் அனைத்துத் தீங்குகளிலிருந்தும் இறைவன் பாதுகாப்பானாக

No comments:

Post a Comment