Tuesday, April 12, 2011

-என் பக்கம்-@ யாசர் அரஃபாத் கவிதைகள் ~~~****



அஸ்ஸலாமு அலைக்கும்,
குருவிக் கூடு..


gulf room.jpg


அழுக்கு ஆடையும்
வழுக்கும் குளியலறையும்
இனிமையாய் வரவேற்க;

அட்டவணைப்படி
அடிப்படிகள்
புகையைக் கக்க;

மாலையானதும்
மடிக்கணினிகள்
எங்கள் மடியைக்
கனக்கச் செய்ய;

இரவினில்
சதுரப்பலகை சப்தமிட;

சப்தமில்லாமல் 
சொப்பனம்
சமாதானம் வீச;

மனம் மட்டும் ஏங்கும்;
தூங்கா அணுக்கள்
அலைப்பாயும்;
வடு இல்லா வலிகளால்
ரணம் பாயும்;
தினம் விழிக் காயும்!

நாடுவிட்டு;நாடு வந்து;
கூட்டுக்குள் குருவியாய்
குளிர்காயும் பிரம்மச்சாரிகள்;
மணம் முடித்திருந்தாலும்!  




முதியோர் இல்லம்

OldAgeHomePeople.JPG


அழுது புலம்பும்
பிரசவத்தில்;
அரை மயக்கத்திலும் உன்
அழும் குரலுக்கு
ஆனந்தமாய் நான் அன்று!

பாலுக்கு ஏங்கி
உன் சிவந்த
இதழ்கள் இரண்டும்
பிதிங்கியதைக் கண்டு;
மனம் பதுங்கியக்
காலம் அன்று!

பள்ளிக்கு
முரண்டுப் பிடிக்கும்
உன் பாதம்
இரண்டையும் பக்குவமாய்
திருப்பியக் காலம் அன்று!

நீ மெத்தப் படிக்க
ஒத்த வீட்டையும்
விற்றுத் தீர்த்து;
உன் படிப்பிற்குத்
தீணியானது அன்று!

தனியாய் நடைப்போடும்
உனக்குத் துணைத்தேடி;
விழி சிலிர்க்கும்
இணையை உன்
கரம் சேர்த்தேன் அன்று!

இன்று
துவண்டுப்போன இளமையால்;
முட்டி நிற்கும் என் முதுமை
உனக்கு பாரினில்
பாரமென்று ஆனதா;
முதியோர் இல்லம் வந்து
சேர்ந்ததா?


ஊனமான நிலம்..

for2.JPG

மணக்கும்
மருந்துகளால் ரணமாகி
ஊமையாய்;
ஊனமான நிலம்;

நாவு வறண்டு;
உதடுகள் வெடித்து;
நீர் இல்லாமல்
நிலத்திற்குக் கருக்கலைப்பு!

அடிக்கல் நட்டு
அடிமாட்டு விலையிலிருந்து;
அசுர விலைவரை;
விவசாயத்திற்கு
குழித்தோண்ட;
குழித்தோண்டி வீடுக் கட்ட;
கிரயமாகும் நிலம்!



-
 

அந்தோ பணத்திற்கு

failure.jpg


வாய் விட்டு அழ
வயது தடுக்க;
விழிகள் நீரில்
நீச்சலடித்து
நீந்திச் செல்ல;
கைப்பேசிக் கனமாகி;
இதயம் ரணமாக;
என் குழந்தையின்
முனகல் என் மனதை
முட்டித்தள்ளும் போது!

அருகில் இல்லாமல்
போன இல்லாள்;
மென்மையானக் குரலில்
வன்மையான
வார்த்தைகளால்;
வழி மொழிவாள்;
வருவது எப்போது!
பிதுங்கி வரும்;
கண்ணீரைக் கண்களுக்கு;
அர்ப்பணம் செய்தேன்;
அந்தோ!பணத்திற்கு! 


-- 

நம் இலக்கணம்
..


photos.jpg

தனிமையோடு முகம்வாடி;
என் உறவுகளோடு உறவாடி;
என் பிரிவால்
உன் மனம் வெறிச்சோடி;
தொலைவில் இருக்கும்
நமக்கு உறவாகத்
தொலைத் தொடர்பு!

அழும் குழந்தைக்கு
உணவூட்டி;
பள்ளிக்கு அனுப்ப;
அதற்கு நீ வழியனுப்ப;
ஓயாமல் ஓடும்
உன் தியாகம்!

மிகுந்துப்போன உணவுகள்
குப்பைக்குச் செல்லாமல்;
உன் இரைப்பையிற்குச் செலுத்தி;
சிக்கனம் பிடிக்கும்
உன் இலக்கணம்!

ஒழுக்கத்திற்கு
அழுக்கேற்றாமல்;
கற்பிற்குக்
கரைப் படியாமல்;
என் விடிப்பிற்கு
ஒயாமல் ஏங்கும்  
உன் விழிகளுக்காக
என் கற்பை விற்காமல்
காத்திருகிறேன்
உன்னைப்போலவே!


-- 

நீ அழுதக் கடிதம்..



vidi.jpg


விருந்து வைத்து
விடைக்கொடுத்து;
விட்டுப்பிரிந்து உன்
கண்ணீரைத் தொட்டுவிட்டு;
கரம் அசைத்து;
மரக்கட்டையாக
மகிழுந்தில் நான்!

நீ அழுதக் கடிதங்கள்
என் விரல் பிடிக்க;
நண்பர்களுக்கு வெட்கப்பட்டுக்
கண்களிலேக் கரைந்துவிடும்
என் கண்ணீர்!

சோகங்களைச்
சோர்வடையச் செய்ய;
என்னைப் போலவே
ஏக்கத்துடன்;
கூட்டத்துடன் தனிமையில்
சுதந்திரச் சிறை
அறை நண்பர்கள்!

கேலியும் கிண்டலும்;
அழுது வடியும் மனதை;
ஆசுவாசப்படுத்த!

அமைதியைக் கக்கும்
இரவோ என் இருதயத்தை
கசக்கிப்பிழிய;
சப்தமில்லாமல் சரணடையும்
என் கண்ணீர் தலையணைக்கு!


--
2011/3/12 

இறுதி பிடி...



death.jpg

தொழுகை மறந்தக்
காலமும்;
உறவுகளை ஒதுக்கித்
தள்ளிய நேரமும்
நினைக்கையிலே;
குமுறும் நெஞ்சம்
மரணத்தைக் கண்டு
வெடித்து நிற்கிறது!

வறண்ட விழிகள்
வழியைப் பார்த்து நிற்க;
வலிக்கொண்ட மேனியோக்
கதறி நிற்க;
முட்டி மோதும் மூச்சியோத்
தொண்டைக்குழியை
குத்திக் கிழிக்க;
புரியாதப் பயம்
தொற்றிக்கொள்ள;
காரணமே அறியாமல்
கண்கள் நீர் சொரிய!

நிமிடங்களே எனத்
தெரிந்தப்பின்னும்;
கெஞ்சிக் கேட்கும் உள்ளம்;
இன்னொரு முறை
அவகாசம் கிடைக்காதா
என ஏங்கித் தவிக்கும் மனம்!

முந்தவும் செய்யா;
பிந்தவும் செய்ய;
மூச்சைப் பறிக்கும்
மரணம் வந்தப்பின்னே;
குமுறி அழுது என்னப் பயன்;

இருக்கும் காலம்
இறைவணக்கத்தை
இறுக்கப் பிடி;
இல்லையேல்
இறுதி நேரம்
இருக்காது
இலகுவாய் 
இறைவனின்
இறுதிப்பிடி!


--

No comments:

Post a Comment