Tuesday, December 21, 2010

வெங்காய நியாயம்

தலையங்கம்
தலையங்கம்: வெங்காய நியாயம்!

First Published : 21 Dec 2010 04:01:24 AM IST

வெங்காயத்தின் விலை கடந்த சில தினங்களாக கிலோ ரூ.60 முதல் 70 வரை உயர்ந்து மக்கள் மத்தியில் அதைப் பற்றிய பேச்சு எழுந்தவுடன், தேசிய வேளாண் கூட்டுறவுத் தொழில்கள் சம்மேளனம் (நாபெட்) உடனடியாக வெங்காய ஏற்றுமதியைத் தடைசெய்து அறிவித்துள்ளது. அதாவது ஜனவரி 15-ம் தேதி வரை யாரும் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது. அப்படிச் செய்வதானால் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு 1200 அமெரிக்க டாலராக இருந்தால்தான் அனுமதி என்றும் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையை ஏதோ திறமையான செயலாக எண்ணி வியக்க முடியவில்லை. காரணம், வெங்காய ஏற்றுமதிக்கும் உள்ளூர் விலை உயர்வுக்கும் எந்த நாளிலும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. இந்த நடவடிக்கை, ஒட்டகத்தின் முதுகிலிருந்து ஒரு துரும்பை எடுத்து அதன் கண்ணெதிரில் கீழே போட்டு, ஒட்டகத்துக்கு எடை குறைக்கப்பட்ட மனநிறைவைத் தரும் செயலே தவிர, அரசின் இந்த நடவடிக்கையால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு இதேபோன்று வெங்காயத்தின் விலை உயர்ந்து இருந்தபோது, நவம்பர் மாதம் இதே நாபெட் ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் குறைந்தபட்ச விலையாக இருந்த 375 டாலரை, ஒரு டன்னுக்கு 525 டாலர் என்று உயர்த்தியது. ஏற்றுமதியைத் தடைசெய்வதால் அல்லது கட்டுப்படுத்துவதால் ஏதாகிலும் பயன் விளைந்திருக்க வேண்டுமென்றால், அப்போதே அதன் பலன் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் உள்நாட்டுச் சந்தையில் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்தியாவில் உற்பத்தியாகும் வெங்காயத்தின் அளவில் 10 விழுக்காடு மட்டுமே மலேசியா, வங்கதேசம், சிங்கப்பூர், மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் தரமும் நமது உள்ளூர்ச் சந்தையில் கிடைக்கும் வெங்காயத்தின் தரமும் ஒன்றல்ல. ஏற்றுமதிக்கான வெங்காயத்தின் அளவு குறைந்தது 6 செ.மீ. அகலம் இருக்க வேண்டும். எல்லா வெங்காயமும் ஒரே சீரான நிறம், அளவில் இருக்க வேண்டும். இந்த வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படாமல் உள்நாட்டுச் சந்தைக்கு திருப்பப்பட்டாலும்கூட, இதன் தரம் கருதி உள்நாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ ரூ.70 ஆகத்தான் இருக்குமே தவிர, குறைவாக இருக்க வாய்ப்பே இல்லை.
தற்போது வெங்காயத்துக்கு இந்த விலை உயர்வு ஏற்பட மூன்று காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, உற்பத்தி குறைந்துள்ளது. 2008-09-ம் ஆண்டில் 13.5 மில்லியன் டன்னாக இருந்த வெங்காய உற்பத்தி, கடந்த 2009-10-ம் நிதியாண்டில் 12.17 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது. காரணம், வெங்காய சாகுபடிப் பரப்பு குறைந்துவிட்டது என்பதுதான்.
ஏற்றுமதிக்கான வெங்காயம், உள்ளூர்த் தேவைக்கான வெங்காயம் இரண்டுக்கும் தேவைப்படும் அளவுக்குச் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கச் செய்வதிலும், சாகுபடி செய்ய ஊக்குவிப்பதிலும் கடந்த (ஏப்ரல் மாதம் முதலாகவே) 9 மாதங்களில் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால், வெங்காயத் தட்டுப்பாடு இல்லாமல் செய்திருக்க முடியும். செய்யத் தவறிவிட்டது.
இரண்டாவதாக, அண்மையில் பெய்த மழையும் ஒரு காரணம். ஏற்கெனவே சாகுபடிப் பரப்பும் உற்பத்தியும் குறைந்திருக்கும் வேளையில், மழையால் வெங்காய சாகுபடி மட்டுமன்றி, லாரிகளில் வந்த வெங்காயமும்கூட அழுகியதால், அந்தப் பொருளிழப்பை ஈடுசெய்ய வியாபாரிகள் விலையை உயர்த்துகிறார்கள். தட்டுப்பாடு விலை உயர்வுக்கு வழிகோலத்தானே செய்யும்.
அரசு ஊழியரின் சம்பள உயர்வு அறிவிப்பு வந்ததும் எல்லோருக்கும் வீட்டுவாடகை உயர்வதைப்போல பெட்ரோல் விலை உயர்வைக் காரணம் காட்டி, லாரி அதிபர்கள் வாடகையை உயர்த்தியுள்ளனர்.
வெங்காயத்தை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று தடைவிதித்தவுடன் அதே வியாபாரிகள் இப்போது வெங்காயத்தை பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யத் தொடங்கி விட்டார்கள். முதல்கட்டமாக 13 டிரக்குகளில் சுமார் 1,000 டன்னுக்கும் அதிகமான வெங்காயம் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு - குறிப்பாக தில்லிக்கு - வந்து சேரவிருக்கிறது. சுங்கவரி உள்பட இந்த வெங்காயத்தின் அடக்கவிலை கிலோ ரூ.18 மட்டுமே என்று சொல்லப்படுகிறது. ஆகவே, மீண்டும் கிலோ ரூ.30க்கு தில்லி காய்கறிச் சந்தையில் வெங்காயம் கிடைப்பது திண்ணம்.
நம்முடைய கேள்வி இதுதான் - பாகிஸ்தானில் இவ்வளவு மலிவான விலையில் வெங்காயம் கிடைக்கும் என்றால், அதை ஏன் முன்னதாகவே இறக்குமதி செய்து, சந்தையில் வெங்காயத்தின் விலை உயராமல் இருக்கும்படி அரசு செய்திருக்கக் கூடாது? மக்கள் மீது உண்மையாகவே அக்கறை இருக்கும் என்றால் இதைத்தானே அரசு செய்திருக்க வேண்டும். இதையும் வியாபாரிகள் தான் தங்கள் லாபத்துக்காகச் செய்ய வேண்டுமா? நாபெட் ஏன்  இதில் முனைப்புக் காட்டியிருக்கக் கூடாது?
வெங்காயத்தில் இப்படியான நிலைப்பாடு என்றால், சர்க்கரையில் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை அல்லவா இந்திய அரசு எடுக்கிறது.
தீபாவளி நேரத்தில் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்காதீர்கள். உள்நாட்டில் சர்க்கரை விலை உயரும் என்று எல்லோரும் சொல்லியாகிவிட்டது. ஆனால், செப்டம்பரில் 2.5 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேட்டால், இந்தியாவில் நடப்பாண்டு 25  மில்லியன் டன் உற்பத்தி சர்க்கரை கிடைக்கும். மேலும் கடந்த ஆண்டு இருப்பு 50 லட்சம் டன். ஆகையால் இந்த ஏற்றுமதியால் விலை உயராது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கூறினார். ஆனாலும் தீபாவளி நேரத்தில் சர்க்கரையின் விலை கிலோ ரூ.35 வரை உயர்ந்தது.
இப்போதும்கூட 5 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். 2011 ஏப்ரல் மாதத்துக்குள்ளாக 10 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய வேண்டிய கடப்பாடு இருக்கிறது என்கிறது அரசு.
சர்க்கரை விலை உயரும் என்றால் ஏற்றுமதியைத் தடைசெய்ய மாட்டார்களாம். வெங்காய ஏற்றுமதியைத் தடை செய்தாலும் பெரிய மாற்றம் இருக்காது என்று தெரிந்திருந்தும் தடை செய்வார்களாம். இந்த நியாயத்தை என்னவென்று சொல்வது. என்ன நியாயமோ, வெங்காயம்.

No comments:

Post a Comment