Wednesday, December 22, 2010

கட்டுச்சோற்றுக்குப் பூனை காவலா?

கட்டுரைகள்
கட்டுச்சோற்றுக்குப் பூனை காவலா?

First Published : 21 Dec 2010 01:57:36 AM IST


தொலைத் தொடர்பு அலைக்கற்றை வழங்கியதில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தைக் குறைந்த விலைக்கு மகன்களுக்கு அளித்த கர்நாடக முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு, பணத்துக்காக பள்ளிச் சிறுவர்கள் கடத்தப்படுவது அதிகரிப்பு- இப்படிப்பட்ட செய்திகளுக்கு இடையில்தான் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் சில செய்திகளும் வெளிவந்துள்ளன.
  "மதுரையில் உடல்நலமின்றி உயிரிழந்த பெண் குழந்தையை அடக்கம் செய்ய வழியில்லாமல் ஆற்றில் வீசிய பூக்கட்டும் தாய். வறுமை காரணமாகக் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய்மார்கள். வறுமையாலும், பெற்ற கடனை அடைக்க முடியாமலும் தற்கொலை செய்வோர் அதிகரிப்பு' என்ற செய்திகள்தான் அவை.
  அனைவருக்கும் சமமான அந்தஸ்து, அறிவுப் பகிர்வு, அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு என்ற சமதர்ம சமுதாயத்தைக் காண்பதற்குத்தானே கனவு கண்டோம். ஆனால் இப்போது நடப்பது என்ன? சுதந்திரதின பொன்விழா கொண்டாடிய பிறகும் நமது லட்சியத்தின் அருகிலாவது சென்றிருக்கிறோமா? விரும்பிய சமூகச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறோமா?
  நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்களைக் கூறுவோரும், அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வறுமை ஒழிப்பில் வெற்றியடைந்துவிட்டதாக  உரக்க முழங்குவோரும் வறுமையால் வாடியும், வாழ வழி தெரியாமலும் தினமும் தற்கொலை செய்யும் அடித்தள மக்களின் அவலநிலை குறித்து அறிவார்களா?
  இலவசக் கல்வி என்று அறிவித்துவிட்டு அரசு கல்லூரி, பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த முன்வரவில்லையே! அரசு கல்வி மையங்களில் கழிப்பறைகளும், குடிநீர் வசதியும் கூட இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை என்பதை ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் அறிவார்களா?  அரசியல் பிழைப்போருக்கு வருவாய் அள்ளித்தரும் பொன்முட்டையிடும் வாத்தாக அல்லவா கல்வித்துறை காட்சியளிக்கிறது.
 தர்ம காரியமாக இருந்த மருத்துவச் சிகிச்சைகள் கூட, கடந்த நான்கு ஆண்டுகளாக காசு இருப்பவருக்கு மட்டுமே சாத்தியம் என்ற கஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதே!
 ஆள்பற்றாக்குறை, சீர்செய்யப்படாமல் முடங்கிய மருத்துவ சாதனங்கள், இயங்க எரிபொருள் இல்லாமலும், ஓட்டுநர் இல்லாமலும் காணப்படும் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள்.  பிறந்த குழந்தையைப் போர்த்தவும், இறந்தவரை பிரேதப் பரிசோதனை செய்து கட்டிக்கொடுக்கவும் துணிவாங்கக்கூட காசில்லாத அரசு மருத்துவ நிர்வாகம். இந்த அவலங்களைப் போக்க வழிகாண முயலாமல், ஆள்பவர் பெயரில் புதிய காப்பீட்டுத்  திட்டமாம்!
  இப்போது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்ரே, ஸ்கேன், பரிசோதனை என அனைத்துமே பணம் கட்டினால்தான் கிட்டுகிறது. மருத்துவமனைகளில் இருக்கும் கழிப்பறைகளையும் கூட இப்போது விட்டுவைக்காமல் நோயாளிகள் கட்டணம் செலுத்தும் வகையில் தனியாரிடம் தாரை வார்த்துள்ளனர். மாணவர், சமூக ஆர்வலர் எனப் பலரிடமும் இலவசமாகப் பெறும் ரத்தத்தைக் கூட அல்லவா அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைக்கு விற்கலாம் என்று அரசாணை பிறப்பித்துள்ளது.
  அரசு மருத்துவமனை அனைத்தையும் கட்டண மருத்துவமனையாக்கிவிட்டு மருத்துவ சிறப்புத் திட்டங்கள் என அறிவிப்பதால் என்ன பயன்?  இப்படிப்பட்ட "அவல' சிந்தனையின் மூலமே நமது அரசியல் தலைவர்கள் நம்மை வழிநடத்துகிறார்களே என்ன காரணம்? முன்பெல்லாம், திறமையான வழக்கறிஞர்கள், டாக்டர்கள், தொழிலதிபர்கள் என வசதிபடைத்தோர், சேவைநோக்குடனும், அதன்மூலம் மக்களிடம் புகழ் பெறவும் மட்டுமே ஆசைப்பட்டு அரசியலுக்கு வந்தனர். அவர்களுக்கு அரசியல் ஒத்துவரவில்லை என்றால், தமது பழைய தொழிலுக்கே சென்றுவிடும் திறமையும் இருந்தது. இதனால் அரசியலில் பெயரெடுக்க மட்டுமே ஆசைப்பட்டனர். பொன், பொருள் சேர்க்க ஆசைப்படவில்லை.
   ஆனால், இப்போதைய தலைமுறையினர் அரசியலையே பிரதானத் தொழிலாக அல்லவா நினைத்துச் செயல்படுகிறார்கள். இப்படிப்பட்டோர் அதிகாரத்துக்கு வந்தால் என்னவாகும் என்பதைத்தானே இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
   பூனைகளுக்குக் கட்டுச்சோறு என்பது மிகவும் பிடித்தமான உணவு. அப்படி இருக்கையில் கட்டுச்சோற்றைக் காவல் காக்குமாறு பூனைகளை வீட்டு எஜமான் அமர்த்திய கதையாகத்தானே  ஜனநாயகத்தையும் நாம் சிலரிடம் ஒப்படைத்திருக்கிறோம்.
   எது எப்படி இருந்தாலும், அரசியலில் பிழை செய்வோர் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். சேர்க்கும் செல்வமெல்லாம் நிலையில்லாதவை! மக்கள் நலன் காக்கும் திட்டங்களே அவர்களது பெயரை காலத்தாலும் மங்காமல் காப்பவை என்பதே ஆகும்.


No comments:

Post a Comment