Friday, December 24, 2010

தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது


வல்கள்  தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது?

தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது?

AddThis Social Bookmark Button
இக் கட்டுரையாசிரியர் ஒரு தொலைத் தொடர்புப் பொறியிலாளர். இத் துறைசார்ந்த 4ஜி தொழில்நுட்பம் குறித்த இவரது கட்டுரை,  இதே பகுதியில் முன்னரே வெளியாகியுள்ளது. இந்திய அரசியலில் தொலைபே ஒட்டுக் கேட்பது  தொடர்பாக தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் இவ்வேளையில் அது தொடர்பான ஒரு தொழில் நுட்ப விடயங்கள் தாங்கி வரும் இக்கட்டுரையை, கட்டுரையாளர் ரவிச்சந்திரன்அவர்களுக்கான  நன்றிகளுடன் இங்கே தருகின்றோம்.-4Tamilmedia Team
தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது?
இந்திய அரசியலை தற்போது மையம் கொண்டு தாக்கி வரும் புயல் ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள். இதனால் வெளிவரும் பல அரசியல் தகிடு தத்தங்கள். நான் அரசியல் தெரியாத ஒரு அப்பாவி:((( ஆனால் இந்த தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றி நன்றாக தெரியும். பல தொலை பேசி/செல்பேசி நிறுவனங்களுக்கு இந்த ஒட்டு கேட்கும் தொழில் நுட்ப கட்டமைப்பை வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றிய சிறிய விளக்கம்.
Lawful Interception (LI) என்பது நாட்டிலுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டு கேட்பதற்காக ITU (International Telecommunication Union - http://www.itu.int ) மற்றும் ANSI (American National Standards Institute - http://www.ansi.org ) போன்ற நியம அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்ட தகவல் பறிமாற்ற வரையறை.
இதன்படி ஒவ்வொரு தொலைபேசி/செல்பேசி நிறுவனத்தின் கட்டமைப்பிலுள்ள தொலைபேசியை எப்படி ஒட்டு கேட்க வேண்டும் அதற்கான தேவையான கட்டமைப்பு தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப் படும் தொழில்நுட்பம் என்பதால் மிகக் கடுமையான பலத்த பாதுகாப்பு வரையறைகள் இந்த தொழில்நுட்பத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் தொலைபேசி வழியாக பேசும் பேச்சுகள் தொலைபேசி கட்டமைப்பிலுள்ள பல விசைமாற்றிகள் (Switches) வழியாக கன நேரத்தில் கடத்தி செல்லப்படுகின்றன.
விசைமாற்றியில் ஒரு கொக்கி போட்டு பேசுபவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் விசைமாற்றி அவர்கள் பேசுவதை அப்படியே ஒரு காப்பி எடுத்து CBI, RAW  போன்ற உளவுத்துறை நிறுவனத்திலிருக்கும் LEMF (Law Enforcement Monitoring Facility) என்றழைக்கப்டும் ஒட்டு கேட்கும் நிலையங்களுகு அனுப்பி வைத்து விடும்.
சற்று விரிவாக பார்க்கலாம்...
உளவுத்துறை ஒருவரை சந்தேகத்திற்குரிய நபர் என்று அடையாளம் கண்டு கொண்டவுடன் அவ்ருடைய தொலைபேசியை ஒட்டுகேட்க வேண்டும் என்ற வாரண்டை உளவுத்துறை அதிகாரி LEMF செண்டரில் உள்ள கம்யூட்டரில் பதிவு செய்வார்.


உடனே அந்த தகவல் அந்த சந்தேக நபரின் தொலைபேசி நிறுவனதிலுள்ள IMC (Interception Management Centre) எனப்படும் கம்யூட்ருக்கு HI-1 (Hand Over Interface-1) என்ற தகவல் பாதை வழியாக வந்து சேரும். அதை நிர்வாகம் செய்யும் அதிகாரி யார்? ஏன்? என்ற எந்த கேள்வியும் கேட்காமல் உடனே அந்த தொலைபேசி எண்ணை ஒட்டு கேட்க IMC-யில் பதிவு செய்து விடுவார்.
இந்த IMC-யை ஆபரேட் செய்வதற்கு பலத்த பாதுகாப்பு வரையறைகள் உள்ளன. அவ்வளவு சுலபமாக இதை யாரும் ஹேக் செய்ய முடியாது. IMC கம்யூட்டரை நிர்வகிக்க ITU மற்றும் ANSI நியமனப்படி தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை தொலைபேசி நிறுவணம் பின்பற்றா விட்டால் அதன் லைசன்ஸ் ரத்து செய்யப் பட்டு விடும். இது தெரியாமல்தான் நீரா ராடியா தன்னுடைய நிறுவனமான டாடா நிறுவன செல்பேசி வழியே பேசினால் யாரும் ஒட்டு கேட்க மாட்டார்கள் என்ற தப்புக் கணக்கு போட்டு “வல்லவனுக்கு வல்லவன்” இந்த உலகத்தில் உண்டு என்ற உண்மையை உணராமல் மாட்டிக் கொண்டார்:( ஒரு சில முறை தப்பு செய்து மாட்டிக்கொள்ளவில்லை என்றால் நாம் செய்யும் தப்பை யாராலும் கண்டு கொள்ள முடியாது என்ற அகம்பாவம் மனிதனுக்கு வந்து விடுகிறது. எனவே தொடர்ந்து தப்புகளை செய்கிறான். ஆனால்... “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு கொள்வான்” இதுதான் உண்மை. Law of Average!

சந்தேக நபர் கால் செய்யும்போதோ அல்லது அவருக்கு கால் வரும்போதோ அந்த தொலைபேசி எண் ஒரு சந்தேகப் பேர்வழியின் எண் என்று விசைமாற்றி (Switch)-க்கு தெரிந்து விடும். உடனே அவர் யாருக்கு போன் செய்கிறார் அல்லது யாரிடமிருந்து போன் வருகிறது என்ற தகவல்களை HI-2 (Hand Over Interface-2) என்ற தகவல் பாதை வழியாக உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF-செண்டருக்கு அனுப்பி விடும். உடனே... பழைய படத்தில் வில்லன் நம்பியார், பி.ஸ்.வீரப்பா அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் சிவப்பு கலர் பல்பில் லைட் எரிவது போல் LEMF செண்டரில் உட்கார்ந்திருக்கும் உளவுத்துறை அதிகாரியின் மேசையில் சிவப்பு கலர் அலராம் அடிக்க ஆரம்பித்து விடும். அவர் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு ரெடியாக உட்கார்ந்து விடுவார்.
இப்போது இருவரின் தொலைபேச்சுகளை விசைமாற்றி கொக்கி போட்டு அப்படியே LEMF செண்டருக்கு HI-3 (Hand Over Interface-3) என்ற தகவல் பாதை வழியாக அனுப்பி வைத்து விடும்.இந்த பேச்சுகள் LEMF செண்டரிலுள்ள ஹார்டு டிஸ்க்கில் MP-3 பைலாக சேமிக்க படும். ஆனால்.. நம் ஊடகங்கள் (Media) டேப் என்று சொல்லி ஏதோ டேப்பில்தான் ரெக்கார்ட் செய்யப்ப்டுகிறது என்று நம் காதில் பூ சுற்றிக் கொண்டுள்ளார்கள்:) இந்த காலத்தில் யார் டேப் பயன்படுத்துகிறார்கள்? டேப்பில் பதிவு செய்தல் ஒரு காயலான் கடை தொழில்நுட்பம்:)))
தேவைப்ப்ட்டால் இந்த பேச்சுகளை CBI, RAW, Economic Enforcement, State Police போன்ற பல உளவுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அந்தந்த உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF செண்டருக்கு அனுப்பி வைக்க முடியும். எனவே சந்தேக நபர் பேசுவதை பல உளவுத்துறை நிறுவனங்கள் ஒரே சமயத்தில் கண்காணிக்க முடியும்.
தொலைபேசி பேச்சுகள் மட்டுமன்றி சந்தேக நபர்களின் மின்னஞ்சல் (E-mail), மின் அரட்டை (Chat) போன்றவைகளையும் இதே தொழில் நுட்ப அடிப்படையில் ஒட்டு கேட்கலாம்.
போனில் பேசும்போது பார்த்து சூதனமா பேசுங்க... சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்:)))
-ரவிச்சந்திரன்

No comments:

Post a Comment