Monday, September 26, 2011

வாடிக்கையாளருக்குச் சாதகமான விதிமுறைகள் வருவது எப்போது?


திருப்பூரில் பட்டப்பகலில் ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் ஆறு பேர் நுழைந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். இதில் தொடர்புடையவர்களைக் காவல்துறை கண்டுபிடிக்கும், கைது செய்யும். ஆனால், இத்தகைய சம்பவங்களுக்குப் பின்னால், பாதிக்கப்படும் வாடிக்கையாளர் நிலைமையைப் பற்றி வங்கிகளோ, தனியார் நிதிநிறுவனங்களோ எண்ணிப்பார்ப்பதே இல்லை.

 அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்களைப் பொறுத்தவரை அவற்றின் பல கிளைகளில் ஏதோ ஒரு கிளையில் திருட்டு அல்லது கொள்ளை நடைபெற்றுள்ளது. அவர்களது மொத்த நிதியை ஒப்பிடும்போது, திருட்டு அல்லது கொள்ளைபோன பணத்தின் மதிப்பு மிகக் குறைவாக இருக்கும். இதற்கான காப்பீட்டுத் தொகை பெறுதல், காவல்துறை புலனாய்வின் மூலம் இழந்ததைப் பெறுதலுக்கான சாத்தியங்களும் உண்டு. அதற்கான காலஅவகாசம் அவர்களது கழுத்தை நெரிக்கும் சுமையாக இருப்பதில்லை.
 ஆனால் நுகர்வோர் அல்லது வாடிக்கையாளர் நிலைமைதான் எப்போதுமே பெருந்துயரமாக இருக்கிறது. அடமானம் வைக்கப்பட்ட நகை ரசீதுடன் போனால், போலீஸ் விசாரணை முடிந்த பிறகு இதுபற்றிப் பேசுவோம் என்பார்கள். மேலும், எந்தவொரு நகைக்கும் அதன் முழு மதிப்பில் 75 விழுக்காடுதான் நகை மதிப்பீட்டுத் தொகையாகக் குறிக்கப்படும். சில தனியார் நிறுவனங்கள் தங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த விரும்பாமல், ரசீதுகளில் குறிப்பிட்டுள்ள நகை மதிப்பீட்டுத் தொகையை திருப்பித் தந்தாலும், குறைந்தபட்சம் 25 விழுக்காடு மதிப்பீட்டை ஒரு நுகர்வோர் மறைமுகமாக இழக்க நேரிடுகிறது. அதுவும் இந்த மதிப்பீடு, அடகுவைத்த தேதியில் இருந்த தங்கத்தின் மதிப்பைப் பொறுத்தது.
 ஒரு வங்கி வளாகத்துக்குள் நடக்கும் எந்தத் திருட்டுக்கும் வங்கி நிர்வாகம்தான் பொறுப்பு. அதாவது பணம் செலுத்துவதற்காகவோ அல்லது பணம் பெற்றுக் கொண்டோ வங்கி வளாகத்தில் இருக்கும்போது நடைபெறும் திருட்டுகளுக்கு வங்கி நிர்வாகம்தான் பொறுப்பு. அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டிய வங்கிகள், அவ்வாறு செய்யத் தவறியதால் அவர்கள்தான் பொறுப்பு என்று நீதிமன்றத் தீர்ப்புகள்கூட தெளிவாகச் சுட்டுகின்றன. ஆனால், எந்தக் கிளை மேலாளரும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார். சில வங்கிகளில் காசாளர் கவுன்ட்டர் முகப்பிலேயே, "நாங்கள் பொறுப்பல்ல' என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.
 நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் அளிக்கும் பாதுகாப்புப் பெட்டக வசதியும்கூட, நுகர்வோர் அல்லது வாடிக்கையாளருக்குச் சாதகமானதாக இருப்பதில்லை. பெட்டியை வாடகைக்குத் தந்தவர், வாடகைக்கு எடுத்துக்கொண்டவர் என்ற அடிப்படையில்தான் ஒப்பந்தமே தவிர, அதில் உள்ள பொருள்கள் காணாமல்போனால், நாங்கள் பொறுப்பல்ல என்கின்றன வங்கிகள். வாடிக்கையாளர் வைக்கும் நகை, ஆவணங்கள் குறித்து எந்தப் பதிவும் எங்களிடம் இல்லாதபோது நாங்கள் எப்படி அவர்கள் சொல்லும் மதிப்பீட்டுக்கு இழப்பீடு வழங்க முடியும் என்று சொல்கிறார்கள்.
 பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை குனியமுத்தூரில் உள்ள நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் சுவரைப் பெயர்த்து, பாதுகாப்புப் பெட்டகத்தின் பின்பக்கமாக வெல்டிங் கருவிமூலம் வெட்டியெடுத்து, திருட்டு நடந்தது. வழக்குப் பதிவானது. ஆனால், யார்யார் என்னென்ன நகை வைத்திருந்தனர் என்பதைக் காவல்துறையிடம் கொடுக்கும்படியும், அவை மீட்கப்பட்டால் கேட்டுப்பெற, அல்லது காவல்துறையே வழங்க ஏதுவாக இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சில வங்கிகள் மிக எச்சரிக்கையாக, உங்கள் ஆவணங்கள், ரொக்கப்பணம் செல்லரிக்கப்பட்டால் வங்கி நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் நிபந்தனையை சேர்த்துக் கொள்கின்றன.
 பணம் புழங்கும் நிறுவனங்கள் எல்லாவற்றிலும், தனியார் நிதிநிறுவனங்கள், வங்கிகள் அனைத்திலும் சிசிடிவி வைக்கப்பட வேண்டும், பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் காவலுக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்துவதாகவும், ஆனால் பல வங்கிகள் இவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை என்றும் இந்தச் சம்பவத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 இதற்கு முக்கிய காரணம் வங்கி ஊழியர்களின் அலட்சியம்தான். சிசிடிவி வைத்தால், அது திருடர்களை மட்டுமல்ல, வேலை செய்யாமல், இருக்கையிலேயே உட்காராமல் இருக்கும் ஊழியர்களையும் பதிவு செய்யுமே என்பதுதான் அவர்களது கவலை. கொஞ்சம் தைரியமான மேலாளராக இருந்தால், இதை வைத்தே அந்த ஊழியர் மீது அத்தாட்சியுடன் நடவடிக்கை எடுத்துவிட்டால் தாங்கள் பாதிக்கப்படலாம் என்கிற முன்னெச்சரிக்கை உணர்வுகூட காரணமாக இருக்கலாம்.
 வங்கியில் பணம் செலுத்தும்போது, ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருந்தால், கிழித்து விடுகிறார்கள். நல்லது. அதைத் திருப்பித் தந்தால் மீண்டும் புழக்கத்துக்குப்போகும் என்பதால் அதைக் கிழிப்பதுதான் முறையான செயல். ஆனால், அந்த வாடிக்கையாளர் குறிப்பிட்ட இடத்தில் உள்ள குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம்-மில் எடுத்த பணம் என்று முறையிட்டால், அதைக் குறைந்தபட்சம் பதிவுசெய்ய வேண்டாமா? எப்படி நம்புவது என்று கேட்கிறார்கள்.
 வங்கிகள், நிதிநிறுவனங்களில் திருட்டு, கொள்ளை, கையாடல், பொருள்இழப்பு ஏற்பட்டால் அவை வாடிக்கையாளருக்கு இழப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. வாடிக்கையாளருக்குச் சாதகமான விதிமுறைகள் வருவது எப்போது?
THANK S BY DINAMANI 
தலையங்கம்: வாடிக்கையாளர்கள் ஏமாளிகள்!

First Published : 26 Sep 2011 02:53:01 AM IST

Last Updated : 26 Sep 2011 04:30:10 AM IST

 

No comments:

Post a Comment