Tuesday, June 7, 2011

கட்டுரைகள்என்னே இந்த வீழ்ச்சி! என். முருகன்


கட்டுரைகள்
என்னே இந்த வீழ்ச்சி!

First Published : 30 May 2011 02:00:09 AM IST


இந்தியாவின் மீது நல்லெண்ணம் கொண்ட பல வெளிநாட்டுத் தலைவர்களும், அரசியல் பார்வையாளர்களும் நமது நாடு ஓர் இக்கட்டான கால சதுக்கத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் சமீபகாலங்களில் வெளியான மூன்று மிகப்பெரிய ஊழல்கள்தான்.
அவை, மும்பை நகரின் ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் மற்றும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் ஆகியன.
இந்த ஊழல்களால் நமது நாட்டின் நிர்வாகம் செயலிழந்துவிட்டது எனவும், அதற்கு முழு முதற்காரணம் கையாலாகாத பிரதமர் மன்மோகன் சிங்தான் எனவும் குற்றம்சாட்டுகின்றனர். அவர் ஒரு ""நொண்டி வாத்து'' (லேம் டக்) பிரதமர் எனவும், கையாலாகாதவர் என்றும், நிர்வாகத்தை நடத்திச் செல்ல முடியாதவர் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை வர்ணிக்கிறார்கள். இது எந்த அளவுக்குச் சரி என்ற கேள்வி எழுகிறது.
மத்திய அரசின் நிதித்துறையில் செயலராகப் பணிபுரிந்த மன்மோகன் சிங், மிகச்சிறந்த பொருளாதார நிபுணரென்று பெயரெடுத்தவர். இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், உலக வங்கியின் இயக்குநராகவும் இருந்தவர்.
1991-ம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் கடுமையான அன்னியச் செலாவணி பிரச்னையில் சிக்கியபோது பொருளாதாரத் தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்தியவர். உலக அரங்கில், குறிப்பாக வளர்ச்சி அடைந்த நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு ஆதரவு ஏற்படுத்தியதில் மன்மோகன் சிங்குக்கு முக்கியப் பங்கு உண்டு.
இந்தத் தாராளமயமாக்கல் கொள்கையால் இந்தியப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைந்தது. அதன் முழுப்பயனும் நம் நாட்டின் மத்தியதர மக்களைச் சென்றடைந்து அவர்களின் வாழ்க்கைத்தரம் பெருகியது. அவர்கள் யாவரும் மன்மோகன் சிங்கின் விசிறிகளாக உருவெடுத்து, இவர் ஒரு மிகச்சிறந்த நிர்வாகி, அப்பழுக்கற்ற நேர்மைவாதி என்ற பெயரை இவருக்கு வாங்கித் தந்தது.
அரசியல்வாதியாகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்து, கட்சி அரசியலின் ஏற்றத்தாழ்வுகள், கோஷ்டி அரசியல், ஊழல் பின்னணி எதுவுமே இல்லாமல், ஒரு சிறந்த அரசுச் செயலர் என்ற தகுதியுடனும் எளிமையானவர், நேர்மையானவர் என்ற பெயருடனும் பிரதமர் பதவிக்கு வந்தவர் மன்மோகன் சிங்.
ஆனால், தனது கடமையைச் சரிவரச் செய்யாமல் தனது அமைச்சரவை சகாக்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல்களைச் செய்யும்போதுகூட, மௌனம் காப்பதும், பலநேரங்களில் அந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களின் செயல்களை நியாயப்படுத்துவதும், அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் இவரின் தனிமனித நேர்மை உயர்பதவி வகிக்க வேண்டும் என்ற இவரது பேராசைக்குமுன் விலைபோய்விட்டதோ என்கிற ஐயத்தை எழுப்புகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த பிரதமர் மன்மோகன் சிங், 2007-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசாவுக்குத் தான் ஒரு கடிதம் எழுதி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விஷயத்தில் நேர்மையான நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.
ஆனால், அவ்வாறு கடிதம் எழுதிய பின்னரும் சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்க விதிமுறைகள் சட்டத்துக்குப் புறம்பாக வளைக்கப்படுகின்றன. பணம் அதிக அளவில் விளையாடுகிறது எனத் தொலைத்தொடர்புத் துறையின் பெரிய நிறுவனங்கள் வெளிப்படையாகப் புகார்கள் செய்து பத்திரிகைச் செய்திகள் வந்தபோதும், பிரதமர் அலுவலகத்துக்கே புகார்கள் அனுப்பப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே ஏன் என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில் விசித்திரமானது.
கூட்டணி தர்மப்படி ஒரு கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் மாற்றுக்கட்சி அமைச்சரை ஓர் அளவுக்குமேல் தான் கட்டுப்படுத்த முயற்சிப்பது கூட்டணியில் முறிவை ஏற்படுத்தும். அதனால் அரசு கவிழ்ந்து திடீர் தேர்தல் நடைபெறும் அவசியம் உருவாகலாம் எனவும், 6 மாதங்களுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல் நடத்தினால் இந்தியா போன்ற ஒரு வளரும் பொருளாதார நாட்டுக்கு மிகப்பெரிய கேடு எனவும் விந்தையான பதிலை அளித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.
நம் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷனுக்கு ரூ. 2,000 கோடியும், கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் ஒரு தொகுதிக்கு ரூ. 30 கோடி என்று அதிகபட்சமாகக் கணக்கிட்டாலும்கூட ரூ.15,000 கோடி செலவாகும். மொத்தச் செலவு ரூ. 17,000 கோடி. நமது நாட்டின் ஓராண்டு பொருளாதார வருமானமான தொகையில் அது வெறும் (ஜிடிபி) 0.03 சதவிகிதம்.
இதனால் நம் பொருளாதாரம் பாதிக்கப்படுமா அல்லது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் நமது பொருளாதாரம் இழந்த ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடிகளால் பாதிக்கப்படுமா என்பது நமது பொருளாதார மேதை மன்மோகன் சிங்குக்குப் புரியவில்லையா அல்லது பிரதமர் பதவியில் ஒட்டிக்கொள்ளும் ஆசையில் அவர் ஓர் அரசியல்வாதியாக மாறிப் பேசுகிறாரா என்ற சந்தேகம் சராசரி இந்தியனுக்கு உருவாகிறது.
நாடாளுமன்றத்துக்கு திடீர் தேர்தல்கள் ஓரிருமுறை ஏற்பட்டாலும் அதனால் நேர்மையான நிர்வாகம் உருவாகும் என்றால் அதுவே சிறப்பான ஆட்சிமுறை. அதனால் விளையும் பொருளாதார முன்னேற்றம் இப்போதுள்ள நிலைமையையும்விட மிக அதிகமானதாகவும் சிறப்பாகவும் நிரந்தரமானதாகவும் அமையும் என்பது பல வெற்றிபெற்ற ஜனநாயகங்கள் நமக்கு உணர்த்தும் பாடம்.
கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத்தான் 2009-ம் ஆண்டு மந்திரி சபையில் ராசா சேர்த்துக் கொள்ளப்பட்டார் என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அதாவது, ராசா ஏற்கெனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பல தவறுகளுக்குக் காரணமானவர் எனத் தெரிந்திருந்தும் திமுகவின் நிர்பந்தத்துக்குப் பணிந்து, ஆறு மாதத்துக்கு ஒருமுறை தேர்தல் வேண்டாம் என்று தான் நினைத்ததால் அவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டேன் எனக் கூறினார் பிரதமர். ஆனால், உண்மை அதுவல்ல.
எதைச் செய்ய வேண்டும் காங்கிரஸ் மேலிடம் (சோனியா) உத்தரவிடுகிறதோ அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் மன்மோகன் சிங்குக்கு உண்டு என்பதுதான் உண்மை. அதை மறுத்தால் பிரதமர் பதவி போய்விடும் என்ற பயம்தான் ஆ.ராசாவுக்குத் தொலைத்தொடர்புத்துறையை ஒதுக்கித் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டதற்குக் காரணம்.
திடீர் தேர்தல் எனும் பிரதமரின் விளக்கத்தை காங்கிரஸில் பல தலைவர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் துவிவேதி என்பவர், ""1920-ல் மகாத்மா காந்தி வெற்று அரசியல் எனும் நிலையற்ற தீமை எனது நேர்மையான கொள்கை முடிவுகளைப் பாதிப்பதை நான் ஒருபோதும் அனுமதித்ததில்லை என்று கூறினார்'' என கூட்டணி விளக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் கூறியதை எல்லோரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
நமது பிரதமரின் கையாலாகாத்தனம் மிகப்பெரிய ஊழலைத் தடுக்கத் தவறியது மட்டுமன்றி அதை நியாயப்படுத்தும் வகையில் திமுக தலைவர் பாணியில் சில விளக்கங்களையும் அவர் அளித்தபோது நேர்மையாளரான இவரா இப்படித் தரம்தாழ்ந்து ஊழலுக்குச் சப்பைக்கட்டு கட்டுகிறார் என்று எல்லோரையும் திகைக்க வைத்தது. குறைந்த விலையில் 2ஜி அலைக்கற்றை விற்பனை செய்ததை எதிர்ப்பவர்களும், உணவுப்பொருள்களுக்கும், விவசாய உரங்களுக்கும் அரசு மானியம் வழங்குவதை எதிர்ப்பவர்களும் ஒரே ரகம் எனக் கூறி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டார் பொருளாதார மேதையான பிரதமர் மன்மோகன் சிங்.
அதாவது குறைந்த விலையில் அலைக்கற்றை வாங்கிய தொலைபேசி நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தை மக்களிடம் வசூலிக்கும் என்ற வாதத்தை முன்வைத்தார் பிரதமர். சரி, அரசிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதைப் பல மடங்கு அதிக விலைக்கு வெளிநாட்டுத் தொலைபேசி நிறுவனங்களிடம் விற்றுவிட்டனவே பலனடைந்த நிறுவனங்கள்?
அதிக விலை கொடுத்து வாங்கிய வெளிநாட்டுத் தொலைபேசி நிறுவனங்கள் செல்போன் சேவைக்கு அதிகக் கட்டணம்தானே விதிப்பார்கள் என்ற கேள்விக்கு திமுக தலைவர்களிடமிருந்தும் பதில் இல்லை. பிரதமர் மன்மோகன் சிங்கிடமிருந்தும் பதிலில்லை.
இதுபோன்ற பொருளாதார, நிதி நிர்வாகப் படிப்பறிவு ஏனையோரிடம் இல்லை எனக் கூறலாம். பொருளாதார மேதையான பிரதமரும் திமுக தலைவர்கள்போல் மௌனம் சாதிப்பது ஏன்? கட்சி அரசியலும் கூட்டணி நிர்பந்தமும்தான் அதற்குக் காரணம் என்றால் அவரும் முன்போல் இல்லாமல் சுயநல, சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்பதுதானே அர்த்தம்?
நமது ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஓர் அங்கமான பத்திரிகைகளும் ஊடகங்களும் சமீபகாலமாக மிகவும் சிறப்பாகப் பணியாற்றி நமது நாட்டின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் வெட்டவெளிச்சமாக்கி நற்பணி செய்கிறார்கள் என மேல்நாட்டு அரசியல் ஆராய்ச்சியாளர்கள் பாராட்டுகிறார்கள்.
ஆனால், நமது பத்திரிகைகளும் ஊடகங்களும் ஊழல் விஷயங்களைப் பெரிதுபடுத்துவதால் நமது நாட்டின் பெயர் கெட்டுவிடும் எனவும் நமது மக்களின் தன்னம்பிக்கை பெரிதும் பாதிக்கப்படும் எனவும் கூறுகிறார் பிரதமர்.
ஜவாஹர்லால் நேருவுக்குப் பின் தான் பிரதமர் பதவியிலிருக்கும்போது அரசின் ஐந்தாண்டு சாதனைகளை முன்வைத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுத் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்கிற பெயரை வாங்கியவர் மன்மோகன் சிங். லைசென்ஸ், பெர்மிட் ராஜ்யத்தில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட்டாகச் சேர்ந்து ஊழல் செய்தார்கள் எனக் கூக்குரலிட்டவர் மன்மோகன் சிங்.
உணவுத் துறையிலும், எரிசக்தித் துறையிலும் வழங்கப்படும் மானியங்களாலும் இலவசத் திட்டங்களாலும் பொருளாதாரம் நிரந்தர வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தேக்க நிலை அடைவதாக வாதம் செய்பவர் பிரதமர் மன்மோகன் சிங்.
அப்படிப்பட்டவரின் இன்றைய நிலைமை என்ன தெரியுமா? பதவியில் தொடர்ந்தால் போதும் தனது நேர்மையாளர் என்கிற பெயர் கெட்டாலும் பரவாயில்லை என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதுதான். என்னே இந்த வீழ்ச்சி!
தனது பொருளாதார அறிவைப் புறந்தள்ளிவிட்டு தமிழக அரசின் இலவசங்களை நல்வாழ்வுத் திட்டங்கள் எனப் பாராட்டி கோவை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியபோது, "அடடா, உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசும் அரசியல் கலையில் தேர்ந்து பதவிக்காகத் தனது நேர்மை, நாணயம், பொருளாதார அறிவு எல்லாவற்றையுமல்லவா தியாகம் செய்யத் துணிந்துவிட்டார்' என்று ஏக்கப் பெருமூச்சுதான் விட முடிந்தது.
அமெரிக்க அரசியல் சட்டத்தில் ஒரு ஜனாதிபதி தேர்தலில் தோற்று, அடுத்த ஜனாதிபதி பதவி ஏற்கும் வரை எந்த நிர்வாக வேலையும் செய்யாமல் பெயரளவில் ஜனாதிபதியாகத் தொடர்பவர்களை "லேம் டக் பிரசிடெண்ட்' (நொண்டி வாத்துக் குடியரசுத் தலைவர்) என்று வர்ணிப்பார்கள். நமது பிரதமரை அப்படி வர்ணிப்பதுகூடத் தவறு போலிருக்கிறது. தென்மாவட்ட கிராமங்களில், "பன்றியுடன் சேர்ந்த பசுக்கன்றின் கதை' ஒன்று கூறுவார்கள். பாவம், பிரதமர் மன்மோகன் சிங்குக்காகப் பரிதாபப்படத்தான் முடிகிறது!

நன்றி  


.

No comments:

Post a Comment