Tuesday, June 7, 2011

வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03


வங்கி மைனஸ் வட்டி (இஸ்லாமிய வங்கி) Part-03 இரா. முருகன்

1)    தொழில் தொடங்கும் முன்பே முதலாளியும் உழைப்பாளியும் லாபம் வரும்போது எந்த விகிதத்தில் அதைப் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள். இந்த லாபப் பிரிவினை, பண முதல் தரும் வருமானத்தை (return on capital) அடிப்படையாகக் கொண்டதில்லை. முழுக்க முழுக்கத் தொழிலில் கிட்டும் லாபத்தைச் சார்ந்தது (profit sharing agreement).
‘நான் இவ்வளவு பணம் தருவேன். நீங்கள் இவ்வளவு உழைப்பீர்கள். நிர்வகிப்பீர்கள். தொழில் முன்னேற்றம், பிரச்சனைகள் பற்றி என்னோடு தகவல் பகிர்ந்து கொள்வீர்கள். நான் அதிகம் பணம் உதவவேண்டி வந்தாலோ, நீங்கள் இன்னும் திறமையாக, இன்னும் கடுமையாக உழைக்கவேண்டி வந்தாலோ, மனமுவந்து அதைச் செய்வோம்’ என்று அந்த ஒப்பந்தம் தெளிவாக்கும்.
2)    இப்படி ஒருவருக்கு ஒருவர் இணக்கமான அக்கறையோடும் முழு முனைப்போடும் தேவையான நிதி அடிப்படையோடும் நடக்கும் தொழிலில் நஷ்டம் வந்தால் இருவருமே பாகுபாடு இன்றி வெவ்வேறு வடிவத்தில் அந்த இழப்பைத் தாங்கிக் கொள்கிறார்கள். இழப்பையும் கடந்து முன்சென்று ஒப்பந்தப்படி வெற்றி கண்டு லாபத்தைப் பங்கு வைப்பது என்ற லட்சியம் தொடர சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளன.
முதலாளி திடீரென்று பண உதவியை நிறுத்தினாலோ, ஒப்பந்ததுக்கு மாறாக, போட்ட பணத்தை உடனே திரும்பக் கேட்டாலோ, அல்லது ஒப்பந்தப்படி பணம் தர மறுத்தாலோ நஷ்டம் ஏற்படலாம். அப்போது அந்த உழைப்பாளி இதே தொழிலை வேறு யாருடனாவது ஒப்பந்தம் செய்துகொண்டு வெற்றிகரமாக நடத்தி இருந்தால் குறைந்தபட்சமாக என்ன லாபம் பெற்றிருப்பாரோ அதை நிதியாளர் கட்டாயம் செலுத்தியாகவேண்டும்.
முதரபாவில் இரண்டு வகை உண்டு. நிதி கொடுக்கிற தொழில் பங்காளியான ராப்-உல்-மால், அந்த நிதியைப் பயன்படுத்தி எந்தத் தொழில் செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம். உழைக்கும் பங்காளி முதரிப் இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். நிபந்தனையோடு கூடிய முதரபா என்ற பொருள் தரும் ‘அல்-முதரபா அல்-முகய்யதா’ (al-mudarabah al-muqayyadah) எனப்படும் இது.
எத்தனை வருடம் முதரபா செயல்படலாம் என்று ஒப்பந்தத்திலேயே இருப்பதும் உண்டு. அதற்குப்பிறகு தானாகவே ஒப்பந்தம் ரத்தாகிவிடும். இது ஒரு பிரிவு இஸ்லாமிய வங்கியியல் அறிஞர்களின் கருத்து. அப்படி அதிக பட்சக் காலத்தை நிர்ணயிக்க முடியாது என்று இன்னொரு பகுதியினர் கருதுகிறார்கள். இருவரும் ஒன்றுபடுவது ஒரு விஷயத்தில் – முதரபாவுக்கு குறைந்தபட்ச நடப்புக் காலம் என்று எதையும் நிர்ணயம் செய்ய முடியாது.
முதல் கட்டமாக, வங்கியில் பணம் போடுகிற வாடிக்கையாளர்கள் (depositor customers) செலுத்திய பணம் வங்கியின் முதலீட்டுக் கணக்கில் (Investment Account) வரவாகிறது. இந்த முதலீடு ஈட்டும் லாபத்தில் பங்குபெற அந்த வாடிக்கையாளர்கள் உடன்படுகிறார்கள். முதலீட்டு நிதியைத் திறமையாக நிர்வகிக்கும் ஒரு நிர்வாகியாக (Manager of funds) வங்கி செயல்படுகிறது.
முதரபாவின் இரண்டாவது கட்டம் வங்கியின் தொழில்முனைவர்களான வாடிக்கையாளர்கள் (Entrepreneurial customers) பங்குபெறுவது. தொழில் தெரியாமல் ஆர்வக் கோளாறு காரணமாக வெற்று உற்சாகத்தோடு   இப்படியானவர்களில் சிலர் நிதி உதவிக்காக வந்து நிற்கலாம். வங்கி, இவர்களை ஜாக்கிரதையாக அலசி ஆராய்ந்து, வேண்டுமென்றால் நிராகரித்து, ‘தொழில் கத்துக்கிட்டு வாங்கப்பா’ என்று அனுப்பி விடும்.

No comments:

Post a Comment