Saturday, June 4, 2011

மாணவர்களைக் காப்பாற்றுங்கள்!


மாணவர்களைக் காப்பாற்றுங்கள்!

First Published : 02 Jun 2011 02:40:48 AM IST


நியாயமற்ற செயல்களில் ஈடுபடும் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் மிகுந்த ஆறுதலைத் தருகிறது.
 தமிழகத்தைப் பொறுத்தவரை கல்வி வளர்ச்சியில் தனியார் பள்ளிகளின் பங்கு மிக முக்கியமானது. அதேவேளையில், கல்வியை ஒரு தொழிலாக மாற்றியதும் இந்தத் தனியார் பள்ளிகள்தாம்.
 கட்டுப்பாடு, ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்ற பெயரில் கட்டுப்பாடே இல்லாமல் செயல்படும் தனியார் பள்ளிகளே இங்கு அதிகம்.
 இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒவ்வோராண்டும் கல்விக் குழப்பத்தில் சிக்கி மாணவர்கள் தவிப்பதாகத் தெரிகிறது. இந்த ஆண்டு நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையிலான குழு ஒவ்வொரு தனியார் பள்ளிக்கும் கட்டண விகிதத்தை இன்னும் இறுதி செய்யாத நிலையில், பெரும்பாலான பள்ளிகள் தங்கள் விருப்பத்துக்குக் கட்டணம் வசூலித்து மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தியுள்ளன.
 திருநெல்வேலி போன்ற சிறிய நகரங்களில்கூட பிரபலமான பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கே ரூ.15 ஆயிரம் ஆண்டுக் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
 கட்டண வசூலில் மட்டும்தான் என்றில்லை... ஒவ்வொரு விஷயத்திலும் தனியார் பள்ளிகளின் நியாயமற்ற நடவடிக்கைகள் பெற்றோரை மிகுந்த வேதனைக்குள்ளாக்குகின்றன. வேறு பள்ளியிலிருந்து தங்கள் பள்ளியில் சேர வரும் மாணவர்களை பள்ளிகள் படுத்தும்பாடு இருக்கிறதே...
 வேறு பள்ளியில் ப்ரீகேஜி முடித்து எல்.கே.ஜி. சேர வருவதாயிருந்தால்கூட அவர்களுக்கு நுழைவுத் தேர்வு... அதில் மாணவர்களின் செயல்பாடு திருப்தி தரவில்லையென்றால், "உங்கள் பிள்ளைக்கு எங்கள் பள்ளியில் படிக்கும் அளவுக்கு அறிவுத் திறமை இல்லை, ஆதலால் மீண்டும் அதே வகுப்பில்தான் சேர்க்க முடியும்' என்ற மறைமுக மிரட்டல்.
 பிள்ளையின் படிப்பு ஓராண்டு வீணாகப் போய்விடும் என பெற்றோர் கெஞ்சிக் கேட்டால்கூட, "விருப்பம் இருந்தால் சேருங்கள், இல்லையெனில் வேறு இடம் பாருங்கள்' என்று இரக்கமேயில்லாத பதில்.
 அப்பாவி நடுத்தர மக்கள் தங்கள் பிள்ளைகளும் நான்கு வார்த்தை ஆங்கிலத்தில் பேச வேண்டுமே என்ற நியாயமான ஆசையுடன் இந்த அராஜகத்தை எல்லாம் பொறுத்துக் கொள்கின்றனர்.
 பத்தாம் வகுப்பில் நூறு சத தேர்ச்சியைக் காண்பிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, ஒன்பதாம் வகுப்பில் சுமாராகப் படித்துத் தேர்ச்சி பெறும் மாணவர்களைக்கூட, மீண்டும் ஒன்பதாம் வகுப்பிலேயே படிக்குமாறு பெற்றோரிடம் எழுதி வாங்கும் பள்ளிகளும் உண்டு. மறுக்கும் பெற்றோரிடம் மாணவரின் டி.சி.யைக் கொடுத்து அனுப்பும் கொடுமையும் நடக்கிறது.
 எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை "ஃபெயில்' ஆக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை தனியார் பள்ளிகள் இப்படி மறைமுகமாக மீறுகின்றன. சுமாராகப் படிக்கும் மாணவர்களை நன்றாகப் படிக்கச் செய்வதில்தான் ஆசிரியர்களின் திறமை இருக்கிறது. இப்படி சுமாரான மாணவர்களைக் கழித்துவிட்டு நாங்கள் நூறு சத தேர்ச்சி பெற்றுவிட்டோம் எனக் கூறுவதில் என்ன பெருமை?
 பெரும்பாலான பள்ளிகள் பல வழிகளில் "செல்வாக்குடன்' இருப்பதால் துணிந்து யாரும் புகார் கூறுவதில்லை. அப்படியே கூறினாலும் அது எடுபடுவதில்லை.
 இவைதவிர, அரசு விடுமுறை நாள்களிலும் வகுப்புகளை நடத்துவது, கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அரசு எச்சரித்தாலும் அதைச் சிறிதும் பொருள்படுத்தாமல் அடுத்த ஆண்டுக்குரிய பாடங்களை கோடை விடுமுறையிலேயே நடத்துவது, மாணவர்களை அடிக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவை மதிக்காமல் அடித்துத் துன்புறுத்துவது என தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் மிக மோசம்.
 இந்தச் சூழ்நிலையில்தான் தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டம் அவசியமாகிறது. தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் ஒரு குழு அமைக்க வேண்டும். பெற்றோர் புகார் கூறினால்தான் நடவடிக்கை என்றில்லாமல், ஏதாவது விதிமீறல் தெரியவந்தால் அந்தக் குழு தாங்களே விசாரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்க வேண்டும். தொடர்ச்சியாக விதிகளை மீறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
 வெறும் கட்டடங்களைக் காண்பித்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள், உரிய தகுதியுடன் ஆசிரியர்களை நியமிக்காமல் குறைந்த சம்பளத்தில் தகுதியற்ற ஆசிரியர்களை நியமிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 எதிர்காலத்தில் நாட்டையும் வீட்டையும் காக்கப்போகும் மாணவர்களை முதலில் தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

 



நன்றி

தலையங்கம்

No comments:

Post a Comment