Monday, August 8, 2011

உண்மை சுடத்தான் செய்யும்!

எதிர்க்கட்சியினர் மீது பொய்வழக்குப் போடுகிறது தமிழக அரசு என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு. கருணாநிதி திரும்பத் திரும்பச் சொல்கிறார். இது தொடர்ந்தால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார். பாட்டாளி மக்கனர் மருத்துவர் ராமதாஸ் சொல்வதும் இதுவேதான்.

 ஒருவர் பொய் சொல்லலாம். இரண்டு மூன்று பேர் சேர்ந்தும் பொய் சொல்லலாம். ஊர் முழுவதும், மாநிலம் முழுவதிலும் மக்கள் பெருவாரியாக வந்து பொய் சொல்வார்களா?
 அதிலும் குறிப்பாக, நிலப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பலரும் விடுதலையாகி வெளியே வருவார்கள் என்பது தெரிந்தும், மிரட்டி நிலத்தைப் பறித்தவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்ததும் தாங்கள் தாக்கப்படக்கூடும் அல்லது பழிவாங்கக்கூடும் என்று தெரிந்திருந்தும் இத்தனை பேர் புகார் கொடுக்கிறார்கள் என்றால், அது அத்தனையும் பொய்யாக இருக்க முடியுமா? செத்தாலும் பரவாயில்லை என்கிற மனத்தாங்கலுடனும் வேதனையுடனும்தான் இவர்கள் இந்தப் புகார்களை அளித்திருக்கிறார்கள் என்பதுதான் இதன் பொருள்.
 புதிதாகப் பதவியேற்ற அதிமுக அரசு, நிலமோசடி வழக்குகளை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த விஷயத்தில் திராவிடக் கட்சிகள் ஒன்றுக்கொன்று சளைத்ததோ, இளைத்ததோ இல்லைதான். ஆனால், அத்தனை நிலமோசடி வழக்குகளும் பொய்யானவை அல்ல என்பதுமட்டும் உறுதி.
 இப்போதைய நிலமதிப்புக்கு ஏற்ப கூடுதல் தொகை கிடைக்கும் என்ற பேராசையால் வந்த புகார்களும் சில இருக்கவே செய்யும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அத்தனை புகார்களும் பழிவாங்குவதற்காகப் போடப்பட்ட பொய் வழக்குகள் என்று சொல்வது மெய்யாக இருக்க முடியாது.
 மேலும், இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் அனைவருமே வழக்கின் முடிவில் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்படுவார்கள் என்பதை இப்போதே உறுதியாகச் சொல்லிவிட முடியும். ஏனென்றால் இந்த நிலப்பறிப்பு, நிலமோசடி, நிலக்கொள்ளை அனைத்திலும் நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெறப்போவது ஏதோ ஒரு குப்பனோ சுப்பனோவாக இருப்பாரே தவிர, இவர்களாக இருக்க மாட்டார்கள்.
 இப்போது பதிவாகியுள்ள அனைத்து வழக்குகளிலும் நிலப்பறிப்பு, நிலமோசடி என்பது கூட்டம்போட்டு தீர்மானம் நிறைவேற்றி செய்ததைப்போல, ஒரே அணுகுமுறையில்தான் செய்யப்பட்டுள்ளது. அதாவது முக்கியமான கட்டடம் அல்லது காலியாக இருக்கும் இடத்தின் உரிமையாளர்களிடம் யாரோ ஒரு குப்பன் மிரட்டி, பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருப்பார் அல்லது பவர் ஆப் அட்டர்னி வாங்கியிருப்பார் அல்லது போலி பத்திரம் தயாரித்திருப்பார். அந்தச் சொத்து இன்னொரு சுப்பனுக்கு விற்கப்பட்டிருக்கும். அந்த சுப்பனிடமிருந்து அமைச்சருக்கு வேண்டிய குடும்பத்தினர், பரிதாபப்படும் வகையில் தெரியாத்தனமாக வாங்கி, பழிக்கு ஆளாகியிருப்பார். இப்படியான ""அப்பாவி'' மனிதர்களைத் தண்டிக்கச் சட்டத்தில் இடமிருக்கிறதா என்பது சந்தேகம்தான்.
 இவர்கள் மிரட்டினார்கள், பின்னணியில் இருந்தார்கள் என்பதையெல்லாம் நிரூபிக்க முடியாதவரை இவர்களைச் சட்டப்படி தண்டித்தல் மிகவும் அரிது என்பதும், மேலும் இவர்களிடம் கோடிகோடியாய் பணம் இருக்கிறது; திறமையான வழக்குரைஞர்களை வைத்து, சட்டத்தையே திணறடித்துவிடுவார்கள் என்பதும் கட்சித் தலைமைகளுக்கு நன்றாகவே தெரியும். அதைவிட மிக நன்றாகவே தெரியும்விஷயம் - எப்படியும் தமிழகத்தில் சுழற்சி முறையில் ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைப்பதால், அடுத்தமுறை திமுக ஆட்சிக்கு வரும். அப்போது இவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுவிடும் என்பது. தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், அதிக சொத்து சேர்த்த வழக்கில் விடுதலையாகாத ஓர் அமைச்சர் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். (இதற்காக அவர் வேறுகட்சியில் போய் சேரவா முடியும்?)
 புதிய அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்குரைஞர்களில் பெரும்பாலோர் திமுக சார்புடையவர்கள் என்பதும் அவர்கள் முடிந்தவரை திமுகவுக்குச் சாதகமாகச் செயல்படுகிறார்கள் என்பதும் ஆளும் கட்சி வழக்குரைஞர்கள் மத்தியிலேயே பரவலாகப் பேசப்படுகிறது. அப்படியிருந்தும் பதிவாகியிருக்கும் வழக்குகள் இவை என்பதுதானே நிஜம்.
 நிலப்பறிப்பு வழக்கு பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளித்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்: "அதிமுக-வினர் மீது நில அபகரிப்பு புகார்கள் உண்மையாகவே வந்தாலும், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல், சம்பந்தப்பட்ட அமைச்சரை அழைத்துப் புகார் கொடுக்க வந்தவர்களுடன் பேசி சமாதானம் செய்து அனுப்புகிறார்கள். ஆனால், நிலத்தை விற்றவர்கள் திமுகவினர் மீது புகார் கூறினால் வழக்குப் பதிவு செய்து கைது செய்கிறார்கள்'.
 அதிமுக ஆளும்கட்சி என்பதால் காவல்துறை இந்த அணுகுமுறையைக் கையாளக்கூடும்தான் அதில் சந்தேகம் இல்லை. அதேநேரத்தில், எதிர்க்கட்சியினர் தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இத்தகைய சமாதானத்தைச் செய்துகொள்ளத் தயார் என்றால், தாங்கள் பறித்த நிலத்தை ஒப்படைப்பார்கள் என்றால், கொடுப்பதாக ஏமாற்றிய தொகையைக் கொடுக்க முன்வந்தால் அல்லது குறைந்த தொகைக்கு வாங்கியதற்காக இப்போது வருத்தம் தெரிவித்து கூடுதலாக சில லட்சம் ரூபாய் கொடுத்து சமரசம் செய்துகொள்வார்கள் என்றால், ஏன் மக்கள் காவல் நிலையத்துக்கு வரப் போகிறார்கள்? ஆளும்கட்சிக்கு "ஆயுதம்' கிடைக்காமல் செய்யலாமே!
 இந்த அரசியல்வாதிகளை விட்டுத்தள்ளுவோம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நிலப்பறிப்பு மோசடிகள் வரலாறு காணாதவகையில் நடக்கவும், பவர் ஆப் அட்டர்னி வழி சொல்லிக் கொடுத்தும், போலிப்பத்திரங்கள் தயாரிக்க சர்வே எண் எடுத்துக்கொடுத்தும் உதவிய சார்பதிவாளர் அலுவலகங்களின் ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் இப்போதும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுடன் சுகமாக, குற்றமற்றவர்களாகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்களே! அவர்களைத் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?
 இதற்கு முன்பே நாம் ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல, மாவட்டம்தோறும் ஒரு விசாரணைக்கமிஷன் அமைத்து, புகார்களைப் பரிசீலித்து தகுந்தவை என்று அறியப்படும் குற்றச்சாட்டுகள் மீது மட்டும், முறைப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை பணிக்கப்பட்டால் மட்டுமே, நேர்மையான விசாரணை நடக்கும், குற்றவாளிகள் முறைப்படி தண்டிக்கப்படுவர், அரசின்மீது பழி வாங்குதல் பழி விழாமலும் இருக்கும். நீதிமன்றத்தின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் விமர்சிக்க முடியாமல் தடுக்கப்படும்.

First Published : 06 Aug 2011 03:34:45 AM IST

Last Updated : 06 Aug 2011 06:04:51 AM IST
 நன்றிதினமணிதலையங்கம்

No comments:

Post a Comment