Saturday, January 29, 2011

வளமான வாழ்விற்கு வருடம் ஒரு கன்று!

பால்பண்ணைத் தொழில் இன்று விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வருமானம் அளிக்கக்கூடிய சிறந்த தொழிலாக அமைந்திருக்கிறது. பண்ணையிலுள்ள மாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு மாடுகள் எப்போதும் கறவையிலிருக்குமாறு பராமரித்தால் பால் பண்ணைத் தொழில் அதிக லாபம் அடைய வாய்ப்புண்டு. இதுபோன்ற மேன்மையை அடைய பசுக்கள் 12 அல்லது 13 மாதங்களுக்கு ஒரு முறை கன்று ஈன வேண்டும். அவ்வாறு ஈன்றால் வருடம் ஒரு கன்று நமக்கு கிடைப்பதுடன் நம்முடைய வாழ்வும் வளமாக செழிக்க வாய்ப்புண்டு.
கன்று ஈன்ற பசுக்கள் பராமரிப்பு: பொதுவாக பசுக்கள் கன்று ஈன்றபின் 45 நாட்களுக்குள் முதல் சினைத் தருணத்தை வெளிக்காட்டும். அதன்பின் 21 நாட்களுக்கு ஒரு முறை சினைத் தருணத்தை வெளிப் படுத்தும். மாடுகள் கன்று ஈன்றபின் 60 முதல் 90 நாட்களில் கருத்தரிக்கச் செய்ய வேண்டும். கருவூட்டலுக்குரிய அறிகுறிகள் எதுவும் வெளித்தெரியாவிட்டால் அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அணுகி முறையான சினை சம்பந்தப்பட்ட பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும். கருவூட்டலுக்குப் பின் மூன்று மாதம் கழித்து கால்நடை மருத்துவரிடம் மறுபடியும் நம்முடைய பசுவினை காண்பித்து சினைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
சினைமாடுகள் பராமரிப்பு: பசுக்களில் சினைக்காலம் சுமார் 285 நாட்கள் அதாவது 9 மாதம் 2 வாரம் 1 நாள். எருமைகளின் சினைக்காலம் சற்று அதிகம். அதாவது சுமார் 310 நாட்கள். சினைப்பருவத்தில் போதுமான அளவு கலப்புத் தீவனம், பசும்புல் மற்றும் தாது உப்பு முறையான அளவில் கொடுக்க வேண்டும். சினைப்பட்ட 7ம் மாதம் கழித்து முதல் கன்று வளர்ச்சிக்கென நாள் ஒன்றிற்கு 3.0 கிலோ கலப்பு தீவனம் கொடுக்கப்பட வேண்டும்.
சினைப்பட்ட 7ம் மாதம் முதல் பால் கறப்பதையும் படிப்படியாகக் குறைத்து மடியை வற்றச் செய்ய வேண்டும். கன்று ஈனுவதற்கு 3 நாட்கள் முன்னும், பின்னும் கலப்புத் தீவனத்தைக் குறைத்து, மலம் கட்டாதவாறு இளகிய தீவனமாகக் கொடுக்க வேண்டும். கன்று ஈன்று 8 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி தானாக வெளியில் வந்துவிடும். கன்று ஈனுதல், நஞ்சுக்கொடி விழுதல் போன்றவற்றில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால் உடன டியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாடவேண்டும். எவ்வளவு சீக்கிரம் மருத்துவரை அணுகி சிகிச்சை முறையை மேற்கொள் கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய பசுவினை இறப்பிலிருந்து காப்பாற்றலாம்.
பருவத்திற்கு வருதல்: பொதுவாக கலப்பினக் கிடேரிகள் 15 முதல் 18 மாத அளவில் பருவத்திற்கு வந்துவிடும். நாட்டு இனங்கள் 24 முதல் 30 மாத வயதில் பருவத்திற்கு வரும். பருவத்திற்கு வரும் கிடேரியின் எடை சுமார் 150 கிலோ இருக்க வேண்டும். மாடுகள் 21 நாட்களுக்கு ஒரு முறை பருவத்திற்கு வரும். சினைப்பருவ காலம் சுமார் 12 முதல் 18 மணி நேரம் வரை காணப்படும். காலையில் சினைப்பருவ அறிகுறிகள் தோன்றினால், அன்று மாலையிலும், மாலையில் அறிகுறிகள் தோன்றினால் மறுநாள் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும்.
கருவூட்டல் செய்த பின் சினைத்தருண அறிகுறிகள் மறுபடியும் தோன்றுகின்றதா என்பதைக் கவனமாக கண்காணித்து வரவேண்டும். அடுத்த 21 நாட்களில் சினைத் தருண அறிகுறிகள் தோன்றினால், கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். அல்லது மீண்டும் கருவூட்டல் செய்துகொள்ள வேண்டும். சினைத்தருண அறிகுறிகள் தோன்றவில்லை எனில் சுமார் 3 மாதம் கழித்து கால்நடை மருத்துவரிடம் காண்பித்து சினைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ரா.தங்கதுரை, எம்.வி.எஸ்சி., பிஎச்.டி.,
வெ.பழனிச்சாமி, எம்.வி.எஸ்சி., பிஎச்.டி.,
வீ.தவசியப்பன், எம்.வி.எஸ்சி.,
வேளாண் அறிவியல் நிலையம்,
குன்றக்குடி-630 206. 04577-264 288.



பதிவு செய்த நாள் : ஜனவரி 26,2011,00:00 IST

கருத்துகள் (1) கருத்தை பதிவு செய்ய http://www.dinamalar.com

No comments:

Post a Comment