Saturday, January 29, 2011

நெட் பேங்கிங் சுருட்டல்!

நெட் பேங்கிங் சுருட்டல்!
- ம.கா.செந்தில்குமார்

தகவல் தொழில்நுட்பவியல் சட்டம்-2000' பற்றித் தெரியுமா? சைபர் கிரைம் குற்றங்களைத் தடுப்பதற்காகவும் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும் கொண்டுவரப்பட்டதுதான் இந்தச் சட்டம். இதனுடைய ஐந்து பிரிவு கள், 'மாநிலத் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்கள் சிவில் கோர்ட்நீதிபதி போல் செயல்பட்டு, புகாரை விசாரித்துத் தீர்ப்பு அளிக்கலாம்' என்றும் கூறுகிறது. இதை 'அஜுடிகேஷன் பவர்' என்கிறார்கள்.



இந்தச் சட்டப் பிரிவின்படி தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டேவிதார் சமீபத்தில் முக்கியமான தீர்ப்பை அளித்து உள்ளார். இது 'அஜுடிகேஷன் பவர்' மூலமாக இந்தியா வில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் அந்த வழக்கு!

தூத்துக்குடியைச் சேர்ந்த உமாசங்கர், அபுதாபியில் பணிபுரிகிறார். தூத்துக்குடி ஐசிஐசிஐ வங்கியில் என்.ஆர்.ஐ. கணக்கு ஒன்றைத் தொடங்குகிறார். கடந்த 2007-ம் ஆண்டு இவரின் வங்கிக் கணக்கில் இருந்து, நெட் பேங்கிங் மூலமாக 6 லட்சத்து 46 ஆயிரம் திருடப்பட்டு, மும்பையில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இதை அடுத்துடன் இழப்பீடு பெறுவதற்காக உமாசங்கர் தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலருக்குப் புகார் அனுப்ப, இழப்பீடு ப்ளஸ் பயணச் செலவு சேர்த்து, 12 லட்சம் வழங் கச் சொல்லி தீர்ப்பு வழங்கியிருக் கிறார் டேவிதார்.

இந்த வழக்கில் உமாசங்கருக்காக ஆஜராகி வாதாடிய பெங்களூரு வழக்கறிஞர் விஜய்சங்கரிடம் பேசி னோம். 'ஐசிஐசிஐ வங்கியில் இருந்து மாதம்தோறும் இ-மெயிலில் உமா சங்கருக்கு ஸ்டேட்மென்ட் அனுப்பு வது வழக்கம். அதேபோல் 2007 செப்டம்பர் மாதம் ஒரு மெயில் வந் திருக்கிறது. அதில் 'இது நெட் பேங்க் கிங் செக்யூரிட்டி தொடர்பான கடிதம். உங்கள் வங்கிக் கணக்கு எண்ணையும், பாஸ்வேர்டையும் டைப் செய்யுங்கள்' என்று கேட்டு இருக்கிறது. உமாசங்கரும் தன் பாஸ்வேர்டை டைப் செய்திருக்கிறார்.

இரண்டு நாட்கள் கழித்து நள்ளிரவு இந்தக் கணக்கில் இருந்து வெறும் 46 தவிர்த்து, மீதித் தொகை அனைத்தும் மும்பையில் அகமதுகான் என்பவரின் அக்கவுன்ட்டுக்குக் கைமாறி இருக் கிறது. அகமதுகான் அந்த வங்கிக் கிளைக்குச்சென்று, பணத்தை எடுத்து இருக்கிறார். மறுநாள் உமாசங் கருக்கு தூத்துக்குடி வங்கிக் கிளையில் இருந்து போன் செய்து, 'அகமதுகான் என்பவருக்குப் பணம் அனுப்பினீர்களா?' என்று கேட்டு இருக்கிறார்கள். பணம் பறிபோனதை அப்போதுதான் உணர்ந்து இருக்கிறார் உமாசங்கர்.

இந்த நிலையில்தான் 'ஐ.டி. ஆக்ட் 2000' பற்றி எங்களுக்குத் தெரியவந்தது. உடனடி யாக, மோசடி செய்யப்பட்ட பணத்தைப் பெற்றுத் தருமாறு உமாசங்கர் புகார் அனுப்பினார். அந்த வழக்கை டேவிதார் ஐ.ஏ.எஸ்., திறமையாக விசாரித்து இழப்பீடு தர தீர்ப்பு அளித்திருக்கிறார்" என்று முடித்தார் விஜய்சங்கர்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டேவிதார், "இந்தச் சட்டத்தின் படி கம்ப்யூட்டரில் இருந்து அதன் உரிமை யாளர் அனுமதி இல்லாமல் தகவல்களை எடுப்பது, சேதப்படுத்துவது, வைரஸைப் புகுத்துவது போன்றவற்றால் பாதிக்கப் பட்டவர்கள் மாநிலத் தகவல் தொழில் நுட்பச் செயலாளருக்குக் கட்டணத்தோடு புகார் மனு அனுப்பலாம்.

இங்கே வழக்கை இழுத்தடிக்கவே முடியாது. புகார் பெற்ற 6 மாதத்துக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது விதி. நாங்கள் தரும் தீர்ப்பில் திருப்தி ஏற்படாவிட்டால், டெல்லியில் உள்ள சைபர் அப்பலேட் டிரிப்யூனலில் மேல்முறையீடு செய்யலாம். அந்த டிரிப்யூனல் தரும் தீர்ப்பிலும் திருப்தி ஏற்படாவிட்டால், உயர் நீதிமன்றம் செல்லலாம்.

உமாசங்கர் வழக்கைப் பொறுத்தவரை அவருக்கு ஐசிஐசிஐ வங்கியில் இருந்து மாதம்தோறும் மெயிலில் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் அனுப்புவார்கள். அதேபோன்ற ஒரு மெயிலைத்தான் மோசடி நபர் உமாசங்கருக்கு அனுப்பி இருக்கிறார். 'குறிப்பிட்ட ஃபார்மெட்டில் அனுப்பப்படும் மெயில்தான் எங்களது உண்மையான மெயில்' என்று வங்கி தெளிவுபடுத்தத் தவறிவிட்டது. மோசடி நபர் பணம் எடுத்துச் சென்றதற்கான ஆதாரம் சிசிடிவி-யில் பதிவாகி உள்ளது. பிறகு, அது அழிந்துவிட்டதாகக் கூறினார் கள். இது வங்கி மீதே சந்தேகத்தைக் கிளப்பியது.

வங்கிக் கணக்கு தொடங்கும்போது ஏற்கெனவே அங்கு கணக்கு வைத்திருக்கும் நபர் ஒருவர் அறிமுகப்படுத்த வேண்டும், இருப்பிடச் சான்றுகளைச் சரிபார்க்க வேண்டும் என்பதுபோன்ற நடைமுறைகள் அகமதுகான் விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. இவை அனைத்தையும் வைத்து, வங்கி பாதுகாப்பு விஷயத்தில் அசட்டையாக இருந்ததே உமாசங்கரின் பணம் மோசடி செய்யப்பட்டதற்குக் காரணம் எனத் தீர்ப்பளித்தேன்" என்றார்.

இந்த வழக்கு விவகாரத்தில் சைபர் க்ரைமின் பங்கு என்ன என்பது குறித்து, சென்னை மாநகர சைபர் க்ரைம் கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் கூறுகையில், "உள்நோக்கம் எதுவும் இன்றி, கவனக் குறைவினால் தவறு நடந்திருந்தால் பாதிக்கப்பட்டவர் அஜுடிகேஷன் அதிகாரி முன்பு வழக்குத் தொடர்ந்து நீதியைப் பெறலாம். ஆனால், உள்நோக்கத்தோடு தவறு நடந்து இருந்தால், நீதியோடு இழப்பீடும் கோரலாம். சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் செய்து கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கக் கோரலாம்" என்றார்.

கணக்குத் தொடங்கவும், கடன் அட்டைகள் வாங்கவும் கூவிக் கூவி அழைக்கும் வங்கிகள், வாடிக்கையாளர்களின் பணத்துக்குப் பாதுகாப்பு தருவதிலும் அதே ஆர்வத்தைக் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்!

* ஆனந்த விகடன் 22-டிசம்பர்-2010

No comments:

Post a Comment