Saturday, January 29, 2011

தகவலுக்கு விரும்புகிறோம்! -பாரதி தம்பி, ரீ.சிவக்குமார், ம.கா.செந்தில்குமார்

தகவலுக்கு விரும்புகிறோம்!
-பாரதி தம்பி, ரீ.சிவக்குமார், ம.கா.செந்தில்குமார்

''என் கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இப்போது என்னையும் 'பாகிஸ்தான் உளவாளி’ என்று சொல்லி, கைது செய்யும் முயற்சி நடக்கிறது. நிறைய முஸ்லிம் நண்பர்கள் இருப்பதனாலேயே, ஒருவரை பாகிஸ்தானின் உளவாளியாகக் கருத முடியும் எனில், இந்த நாட்டில் வாழ எனக்கு அச்சமாக இருக்கிறது.



ஜனநாயகத்தை அங்கீகரிக்கும் வேறு ஒரு நாட்டில், அரசியல் தஞ்சம் கோருவதைத் தவிர, எனக்கு வேறு வழி இல்லை!'' - மிகுந்த மன வேதனையுடன் இப்படிச் சொல்லியிருக்கிறார், இலினா சென். 'மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கிறார்’ என்ற குற்றச்சாட்டில் தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கும் மனித உரிமைப் போராளி பினாயக் சென்னின் மனைவி இலினா சென்.

பினாயக் சென் மட்டுமல்ல; காஷ்மீர் பிரச்னைபற்றி வெளிப்படையான கருத்து சொன்னதற்காக, அருந்ததி ராயை நோக்கியும் அச்சுறுத்தல்கள். 'நீதி கேட்பவர்களைச் சிறைக்கு அனுப்பும் இந்த தேசத்தைப் பார்த்து, நான் பரிதாபப்படுகிறேன்!’ என அருந்ததி ராய், தன் மீதான மிரட்டலைத் துணிச்சலாக எதிர்கொண்டார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, நாடு முழு வதும் தன்னெழுச்சியான ஓர் அலை கிளம்பியது. 'R.T.I Activist’ எனக் குறிப்பிடும் அளவுக்குப் பல மாநிலங்களில் பலர் உருவாகி, அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தினார்கள். சமீபத்தில், மகாராஷ்டி ராவை உலுக்கிய 'ஆதர்ஷ் ஹவுஸிங் போர்டு ஊழல்’கூட R.T.I (Right to Information Act) மூலம் வெளிக் கொண்டுவரப்பட்ட செய்திதான். தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தில் 'சமூக சேவகர்’ என்ற பிரிவின் கீழ் அதிகார மையங்களில் உள்ள வர்கள் வீடு ஒதுக்கீடு பெற்றதும் இந்த சட்டத்தின் உதவியோடுதான் வெளியே கொண்டுவரப் பட்டது.

இத்தகைய ரகசியங்களை அம்பலப்படுத்தும் ஆர்.டி.ஐ. போராளிகள் சத்தமே இல்லாமல் கொலை செய்யப்படுகிறார்கள். 2010-ம் ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூலை வரையிலான ஏழு மாதங்களில் மட்டும் இந்தியா முழுவதும் எட்டு ஆர்.டி.ஐ. ஆக்டிவிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மகா ராஷ்டிராவைச் சேர்ந்த தத்தா பட்டீல், விட்டல் கைட், அருண் சாவந்த், சதீஷ் ஷெட்டி ஆகியோரும், குஜராத்தைச் சேர்ந்த விஷ்ரம் லஷ்மன் தோடியா, அமீத் ஜேத்வா ஆகியோரும், சஷில்தர் மிஸ்ரா (பீகார்), சோலா ரங்காராவ் (ஆந்திரா) ஆகியோரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 33 வயதான அமீத் ஜேத்வாவின் மரணம் எல்லோரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அனைவரும் அறிந்த மனித உரிமை ஆர்வலரான ஜேத்வா, ஜூனாகத் பகுதியில் உள்ள கிர் காடுகளில் சட்டத்துக்குப் புறம்பாகக் கனிமங்களைத் திருடிய பா.ஜ.க. எம்.பி. தினு சோலாங்கி என்பவரை ஆர்.டி.ஐ. மூலம் அம்பலப்படுத்தினார். விளைவு, பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைகள் ஒன்றில்கூட இதுவரை குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. 'வழக்கு விசாரணையில் இருக்கிறது. விரைவில் குற்றவாளிகள் கைதுசெய்யப்படுவார்கள்’ என்பதே அரசுகளின் ரெடிமேட் பதில்!

அதே நேரம், இத்தகைய அச்சுறுத்தல்கள் ஆர்.டி.ஐ. ஆக்டிவிஸ்ட்டுகளை முடக்கிவிடவில்லை. 2,500 கோடி மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி ஊழலை ஆர்.டி.ஐ. மூலம் கண்டுபிடித்த சாய்கட் தத்தா, இந்த ஆண்டின் சிறந்த ஆர்.டி.ஐ. போராளியாகத் தேர்வு செய்யப்பட்டார். ஹரியானாவைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆக்டிவிஸ்ட் ரமேஷ்குமார் சர்மா, ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளில் சோதனை எலி களாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து அரசு, மருந்து கொள்முதல் தொடர்பான தனது கொள்கை முடிவுகளை மாற்றி அமைத்திருக்கிறது.

2005-ல் இந்தச் சட்டம் வந்தாலும் தமிழக அளவில் ஆர்.டி.ஐ. ஆக்ட் இன்னும் முழு வீச்சுடன் பயன்படுத்தப்படவில்லை. இருந்தாலும், ஓரிருவர் அந்தச் சட்டத்தினை முழு அளவில் பிரயோகிக்கச் செய்யும் முயற்சிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். சென்னை வீட்டு வசதி வாரிய ஊழலை வெளிக் கொண்டு வந்த கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம்.

''ஆர்.டி.ஐ. சட்டத்தில் தகவல் கேட்க, நீங்கள் இந்தியக் குடிமகனாக இருந்தால் மட்டும் போதும். வேறு எந்த நிபந்தனைகளும் தேவை இல்லை. அரசு அலுவலகங்களில் பொது மக்கள் தரும் மனுவுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் பதில் தர வேண்டும் என விதி இருக்கிறது. அதை மீறினால், அபராதம் செலுத்த வேண்டும். என் வீட்டுக்கு கூடுதல் ஈ.பி. மீட்டர் கேட்டு மனு கொடுத்து 30 நாட்களைக் கடந்தும் எந்தப் பதிலும் இல்லை. ஆர்.டி.ஐ-யில் மனு போட்டு 1,000 ரூபாய் அபராதம் வசூலித்து எனக்குத் தந்தார்கள். பணத்துக்காக மட்டுமல்ல; நாம் கொடுக்கும் மனு எந்த நிலையில், எந்த அதிகாரியிடம் இருக்கிறது, அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் ஆர்.டி.ஐ. மூலம் தெரிந்துகொள்ள முடியும். நமக்குச் சம்பந்தம் இல்லாத விஷயங்கள் குறித்தும் ஆர்.டி.ஐ. மூலம் விவரம் பெறலாம். அப்படி யதேச்சையாக எனக்குத் தெரியவந்து கேட்டதுதான் தமிழக வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல். 'எனக்கு இலவச கலர் டி.வி. தராதது ஏன்?’ என்றுகூடச் சிலர் கேட்டு டி.வி-யும் பெற்றுள்ளனர். இதுபற்றிய விழிப்பு உணர்வு இன்னும் தேவை!'' என்கிறார்.



தலைமைச் செயலகத்தைச் சுற்றிவந்தபோது அரசு மற்றும் அதிகாரிகள் தரப்பில் இருந்து பலவிதமான நடைமுறைச் சிக்கல்கள் விவரிக்கப்பட்டன. ''தமிழக அரசு இந்தச் சட்டம் குறித்து இதுவரை இரண்டு புத்தகங்கள் மட்டுமே வெளியிட்டு இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கும் சட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து முறையான பயிற்சிகள் அளிக்கப்படவில்லை. அண்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் வருடத்துக்கு நான்கு முறை பயிற்சி தரப்படுகிறது என்றாலும், அது பெயரளவுக்கே நடைபெறுகிறது. அங்கு உள்ள ஆசிரியர்கள்,ஆர்.டி.ஐ. ஆக்ட் பற்றி தாங்கள் எழுதியுள்ள புத்தங்களை விற்க மட்டுமே இந்த வகுப்புகள் பயன்படுகின்றன.

ஒரு தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் ஆறு ஆணையர்கள் எனத் தமிழகத் தகவல் ஆணையத்தின் மொத்த பலம் ஏழு பேர். இதே அளவு ஆணையர்கள்தான் மத்திய தகவல் ஆணையத்திலும் உள்ளனர். ஆனால், அவர்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 100 வழக்குகளை விசாரித்து பைசல் செய்கிறார்கள். ஆனால், தமிழகத் தகவல் ஆணையமோ, மாதத்துக்குச் சராசரியாக 100 வழக்குகளை மட்டுமே விசாரிக்கிறது. அரசியல்வாதிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களைத் தகவல் ஆணையத்துக்குள் கொண்டுவருவதுதான் நிறையக் குளறுபடிகளுக்குக் காரணம்!'' என்கிறார்கள்.

பேச்சுரிமை, எழுத்துரிமை சங்கம் அமைக்கும் உரிமை என்று அரசியல் சட்டம் நிர்ணயம் செய்துள்ள அடிப்படை உரிமைகளில் 'தகவல் அறியும் உரிமை’யும் இனி ஒன்று. இந்தச் சட்டம் ஜனநாயகத்தின் பரிசு... உரிமையின் உச்சம்!

* ஆனந்த விகடன் 19-ஜனவரி-2011

No comments:

Post a Comment